Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை’ – குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை?
பட மூலாதாரம், krishnakulasekaran/Instagram & actorsrikanth/Instagram
படக்குறிப்பு, ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் 28 ஜூன் 2025, 05:16 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
போதைப் பொருட்களை நண்பர்களுக்கு அளித்ததாக நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவையும் அதனை விற்பனை செய்த கெவின் என்பவரையும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்துள்ளதாக, ஜூன் 26 அன்று சென்னை மாநகர காவல்துறை கூறியுள்ளது.
வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி அதன்மூலம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருள்களைப் பெற்று வந்ததாகக் காவல்துறை கூறுகிறது. இதனை கிருஷ்ணாவின் வழக்கறிஞர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எதிர்க்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் நிர்வாகியாக இருந்ததால் அரசியல் ரீதியான பழிவாங்கலில் கிருஷ்ணா சிக்கியிருப்பதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அதிகபட்சம் என்ன தண்டனை கிடைக்கலாம்?
வழக்கின் அடுத்தக் கட்டம் என்ன?
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தனியார் விடுதியில், கடந்த மே 22 ஆம் தேதி இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இதனை விசாரிப்பதற்காக போலீஸார் சென்றபோது, அங்கிருந்தவர்கள் போதைப் பொருளைப் பயன்படுத்தியிருந்ததாக தெரியவந்தது. இந்த வழக்கில் அ.தி.மு.க தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருந்த பிரசாத், நாகேந்திர சேதுபதி, அஜய் வாண்டையார், தனசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்திற்கு பின்னர் பிரசாத், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
கைதானவர்களில் ஒருவரான அ.தி.மு.க பிரமுகர் பிரசாத்துடன் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு இருப்பதை காவல்துறையினர் அறிந்தனர். இதையடுத்து, ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது. ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப் பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
அதேநேரம், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, கொகைன் பயன்படுத்தியது தெரியவந்தாக காவல்துறை தெரிவித்தது. ஸ்ரீகாந்துக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து, அவருடைய பணப் பரிவர்த்தனை, அவருடைய வீடு முழுமையாக சோதனை செய்யப்பட்டு உரிய ஆதாரங்களுடன் அவரை கைது செய்துள்ளதாக, ஜூன் 24 அன்று காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார் ஆகியோர் மூலமாக போதைப் பொருள் விற்பனை நடைபெற்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கொகைன் வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.ஸ்ரீகாந்தை தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணா கைது
விசாரணையின் தொடர்ச்சியாக, ‘கழுகு’ உள்பட பல்வேறு படங்களில் கதாநாயனாக நடித்த ஸ்ரீகிருஷ்ணா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கெவின் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் வைத்து நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது தனக்கு இதயநோய் உள்ளதாகவும் அதற்கு மருந்து உட்கொள்வதால் கொகைன் எடுத்துக் கொள்ளவே முடியாது எனவும் கிருஷ்ணா கூறியதாக தகவல் வெளியானது.
படக்குறிப்பு, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கெவின் ‘வாட்ஸ்ஆப் குழு மூலம் கொகைன் விற்பனை’
வாட்ஸ்ஆப் குழு மூலம் நடிகர்கள் ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீகாந்த், போதைப் பொருள் விற்பனையாளர் கெவின் உள்ளிட்டோர் அடங்கிய நெட்வொர்க் இயங்கி வந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
“கெவினிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி கிருஷ்ணா பயன்படுத்தி வந்துள்ளார். அதை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்” என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் குழுக்களில் இணைந்து போதைப்பொருள் தொடர்பான தகவல் பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் உட்கொள்ளும் இடம், நேரம் ஆகியவற்றையும் ஸ்ரீகிருஷ்ணா பகிர்ந்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.
இந்த வழக்கில் ஜெஸ்வர் என்ற கெவினை, வியாழக்கிழமை போலீஸ் கைது செய்தது. அவரிடம் இருந்து அரை கிராம் கொகைன், 10.30 கிராம் மெத்தம்பெட்டமைன், எம்டிஎம்ஏ (MDMA) 2.75 கிராம், ஓஜி கஞ்சா 2.40 கிராம், கஞ்சா 30 கிராம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறிய அளவிலான எடை போடும் இயந்திரம், செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
இவர்களின் வங்கிப் பணப்பரிவர்த்தனை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கெவின் மற்றும் ஸ்ரீகிருஷ்ணாவை கைது நடவடிக்கைக்கு உட்படுத்தியதாகவும் காவல்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எந்த தொடர்பும் இல்லை” – ஸ்ரீகிருஷ்ணா வழக்கறிஞர்
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஸ்ரீகிருஷ்ணாவின் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் மறுத்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” போதைப் பொருள் வழக்கிற்கும் கிருஷ்ணாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்றார்.
வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை நடைபெற்றதாக காவல்துறை குறிப்பிடுவது குறித்துக் கேட்டபோது, “கெவின் என்பவருடன் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை வைத்து போலீஸ் இவ்வாறு கூறுகிறது. அதற்கும் ஜூனில் நடந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்றார்.
“ஸ்ரீகிருஷ்ணாவிடம் இருந்து எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை. ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது” எனவும் இன்ஃபேன்ட் தினேஷ் குறிப்பிட்டார். நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவின் ஜாமீன் மனு திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
படக்குறிப்பு, வழக்குக்கும் கிருஷ்ணாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறுகிறார் ஶ்ரீ கிருஷ்ணாவின் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் “10 ஆண்டு சிறைத் தண்டனை” – வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ்
“கொகைன் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது?” என போதைப்பொருள் வழக்குகளை நடத்தி வருபவரும் பா.ஜ.க-வை சேர்ந்தவருமான வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.
“கொகைன் வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மெத்தம்பெட்டமைன் 50 கிராமுக்கு மேல் இருந்தால் 20 வருட தண்டனை கிடைக்கும்” எனக் கூறுகிறார்.
என்டிபிஎஸ் (Narcotic Drugs And Psychotropic Substances Act, 1985) சட்டப்பிரிவு 22(a), 22(b), 22(c) என போதைப்பொருளின் தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீகாந்துக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா?
ஸ்ரீகாந்த் மீதான வழக்கு குறித்து விவரித்த பால்கனகராஜ், “அவர் கையில் கொகைன் வைத்திருந்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படவில்லை. என்டிபிஎஸ் சட்டப் பிரிவு 27 என்பது போதைப் பொருளுக்கு அடிமையானவர்களைப் பற்றிக் கூறுகிறது. அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது” என்கிறார்.
“இதன்படி போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை காவல்துறை கைது செய்யக் கூடாது. அவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் பத்திரமாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்று காவல்துறையினர் அவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் வழங்கும் நடவடிக்கையும் உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“ஸ்ரீகாந்த் வாங்கிப் பயன்படுத்தியதாக கூறப்பட்டாலும், அவர் வாங்கி யாருக்கும் விற்றதாக தகவல் இல்லை.” என்கிறார், பால்கனகராஜ்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிரிவு 64 ஏ என்ன சொல்கிறது?
போதைப்பொருள் தடுப்பு (NDBS) சட்டப்பிரிவு 27ன்படி போதைப்பொருள் பயன்படுத்துவது குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இருப்பினும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு பிரிவு 64ஏ படி சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசால் பராமரிக்கப்படும் அல்லது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற முன் வந்தால் அவர் மீது எந்தப் பிரிவின் கீழும் வழக்குத் தொடரக் கூடாது என சட்டம் கூறுகிறது.
அவ்வாறு சிகிச்சை எடுப்பதற்கு முன்வராவிட்டால் அவருக்கு எந்தவித சலுகையும் வழங்கப்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கொண்டாட்டங்களுக்கு (Party) அதிகளவில் போதைப் பொருள்களை எடுத்துச் சென்றதாக கண்டறியப்பட்டால் அவருக்கு விலக்கு அளிப்பதற்கு 64 ஏ பிரிவின்படி வாய்ப்புகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு