Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த மாதம் இரான் – இஸ்ரேல் இடையே நடந்த 12 நாள் போர், 1967இல் நடந்த ஆறு நாள் போருடன் ஒப்பிடப்படுகிறது.எழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர் 15 நிமிடங்களுக்கு முன்னர்
இஸ்ரேல், இரான் இடையிலான 12 நாள் போர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்புடன் முடிவுக்கு வந்தது.
தற்போது நிறைவடைந்துள்ள இரானுடனான போர், 1967ஆம் ஆண்டில் மூன்று நாடுகளுடன் இஸ்ரேல் நடத்திய போருடன் ஒப்பிடப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் உளவு ஆய்வாளர் யோனா ஜெரிமி பாப் இஸ்ரேலின் ஆங்கில நாளிதழான ஜெருசலேம் போஸ்டில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
“இஸ்ரேல் 1948இல் உருவாக்கப்பட்டது, ஆனால் 1967இல் நடைபெற்ற 6 நாள் போர் மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றியதுடன், இஸ்ரேலுக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியது. ஆறு நாள் போரில் எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய மூன்று நாடுகளை இஸ்ரேல் வீழ்த்தியது. இந்தப் போருக்குப் பிறகு, சினாய், கோலன், மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் ஆகியவை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டன. இந்த 6 நாள் போருக்கு முன்பு இந்த மூன்று நாடுகளும் இஸ்ரேலை அழித்துவிடும் என மக்கள் நினைத்தனர். யூதர்களின் நாடு பிழைக்காது என மக்கள் நினைத்தனர்,” என்று யோனா ஜெரிமி பாப் எழுதியுள்ளார்.
“அந்த நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் தனது எதிரிகளைவிட மிக மேன்மையானதாக இருந்தது. இந்த மேன்மைத் திறன் மற்றும் தொழில் திறனில் மட்டுமல்ல, அதன் இலக்குகளை அடைவதில் இருந்த அர்ப்பணிப்பிலும் இருந்தது. இஸ்ரேல் அப்போதும் ஒரு எதிர்பாராத தாக்குதலை நடத்த திட்டமிட்டது,” என்று பாப் நம்புகிறார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“இஸ்ரேலும், இரானும் எப்போதும் சமமானவையாக இருந்ததில்லை. இருந்தும், இரான் தன்னைத்தானே பலமுறை நிருபித்துள்ளது. தனக்கு எதிரான சூழ்நிலைகளுக்கு எதிராகப் போராட தனக்கு வளமும், பொறுமையும், ஆற்றலும் இருக்கிறது என்பதை இரான் நிரூபித்துள்ளது. இரான் இஸ்ரேலில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் அது இஸ்ரேலை காஸா, லெபனான், சிரியா, இராக், மேற்கு கரை, ஏமன் மற்றும் இரானையும் சேர்ந்து ஏழுபுறமும் வெற்றிகரமாகச் சூழ்ந்து கொண்டிருக்கிறது,” என பாப் எழுதியுள்ளார்.
யார் வெல்கிறார்கள், யார் இழக்கிறார்கள்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தப் போரில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இருந்தது, ஆனால் இரான் வெளி ஆதரவு ஏதும் இல்லாமல் தனித்துப் போரிட்டதுஇருந்தாலும் இந்த 12 நாள் போரில் தனது இலக்குகளை அடைந்து விட்டதாக இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க் கிழமை இரவு தொலைக்காட்சி உரை ஒன்றில் தெரிவித்தார். இது வரலாற்றுச் சிறப்புமிக்கது எனவும் பல தலைமுறைகளுக்கு நினைவு கொள்ளப்படும் எனவும் நெதன்யாகு தெரிவித்தார்.
வெற்றி பெற்றதாக நெதன்யாகு சொல்லிக்கொள்ளலாம், ஆனால் பென்டகனின் (அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம்) முதல் கட்ட உளவுத் தகவல்களின்படி அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் இரானின் அணு ஆயுத திட்டத்தை அழிக்கவில்லை.
ஆனால், டிரம்ப் இந்த அறிக்கைகளை நிராகரித்துள்ளார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், இந்த 12 நாள் போர் மூலம் இஸ்ரேலுக்கு கிடைத்த பயன் என்னவென்ற கேள்வி எழுகிறது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இரானின் மக்களையும் அதன் வரலாற்றையும் அறிந்தவர்களுக்கு இரான் சரணடையக்கூடிய ஒரு நாடு அல்ல என்பது தெரியும்,” எனக் கூறப்பட்டிருந்தது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.போர்ச்சுகலில் உள்ள மின்ஹோ பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியராக இருப்பவர் முகமது.
“இரானின் அணுசக்தி திட்டம் கடந்த 12 நாட்களில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துவிட்டது. அதில் கேள்விக்கே இடமில்லை. நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் பல ஆண்டுகளாக இரான் யுரேனியம் செறிவூட்டலைச் செய்து வருகிறது. இஸ்ரேல் பல இரானிய விஞ்ஞானிகளையும் கொன்றுள்ளது. தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது முக்கியம்தான், ஆனால் ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளைத் தயார்படுத்துவது அதைவிடக் கடினமான காரியம்,” என மிடில் ஈஸ்ட் ஐ என்ற செய்தி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முகமது இஸ்லாமி கூறுகையில், “இவ்வளவு இழப்புகளுக்குப் பின்னரும் இரானின் ஏவுகணைத் திட்டம் தனது முத்திரையைப் பதித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளிகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் துளைத்துக்கொண்டு செல்ல இரானிய ஏவுகணைகளால் முடிந்திருக்கிறது.”
இந்த 12 நாள் போரில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இருந்ததுடன், பிற மேற்கத்திய நாடுகளும் சர்வதேச மன்றங்களில் அதற்கு ஆதரவளித்தன.
மறுபுறம் இரான் தனிமையாக இருந்தது. மற்ற அமெரிக்க அதிபர்களைவிட டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவானவராகப் பார்க்கப்படுகிறார். காஸாவில் ஒரு போர் நிறுத்தத்தைக் கொண்டு வர டிரம்ப் மறுத்துள்ளார்.
இரான் தனது இலக்கை அடைந்ததா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடைசி நாளில், இரான் கத்தாரின் தோஹாவில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதுஇஸ்ரேல் 1967இல் பெரிய வெற்றியைப் பெற்றதாக ஜிண்டல் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபேர்ஸின் தலைவரும் ‘ஃபிரெண்ட்ஸ்: இண்டியாஸ் குளோசஸ்ட் ஸ்ட்ரேடெஜிக் பார்ட்னர்ஸ்’ என்ற நூலின் ஆசிரியருமான ஶ்ரீரான் செளலியா கூறுகிறார்.
செளலியா கூறுகையில், “1967இல் ஆறு நாள் போரில் இஸ்ரேல் பெற்ற வெற்றியுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. இந்த முறையும் இஸ்ரேல் தனது வலிமையைக் காட்டியுள்ளதுடன், போரில் ஆதிக்கம் செலுத்தியது. மொத்த வான் பரப்பையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், 1967இல் எட்டியதைப் போல் இலக்கு எட்டப்படவில்லை” என்றார்.
செளலியா தெரிவிக்கையில், “இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஆற்றல் இன்னமும் இருக்கிறது. இரானிடம் குறைந்தது 2,500 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதில், 25 விழுக்காட்டிற்கும் குறைவானவையே இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதைப் போன்றதொரு சூழ்நிலையில், இஸ்ரேலால் இரானின் ஒட்டுமொத்த அணுசக்தித் திட்டத்தையோ, பாலிஸ்டிக் ஏவுகணைகளின் ஆற்றலையோ அழிக்க முடியவில்லை என நாம் கூறலாம். 1967 போரில் இஸ்ரேல் பெரிய வெற்றியைப் பெற்றது. இஸ்ரேல் அந்தப் போரில் வெற்றியை மட்டும் பெறவில்லை, மற்றவர்களின் நிலங்களையும் அபகரித்தது” எனத் தெரிவித்தார்.
“இஸ்ரேல் ஒருவேளை ஆட்சியைக் கவிழ்த்திருந்தால் 1967இல் பெற்ற அதே வெற்றியைப் பெற்றதாகச் சொல்லலாம். இரானுக்கு அதன் சொந்த திறன்கள் உள்ளன. இரானின் ஏவுகணைகளில் 10 விழுக்காடு இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் துளைத்துக் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளன. இதுவே ஒரு பெரிய விஷயம். இரான் இந்தப் போரை பல மாதங்களுக்குத் தொடர்ந்திருக்கலாம். பதிலடி தருவதில் இரான் தனது ஆற்றலைக் காட்டியிருக்கிறது. இரான் இந்தப் போரை பல மாதங்களுக்கு நீட்டித்திருக்க முடியும் என்பதை இஸ்ரேல் புரிந்து கொண்டுள்ளது. அதனால் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டார்,” என்கிறார் செளலியா.
தனது பலவீனத்தையும், இஸ்ரேலின் பலத்தையும் புரிந்து கொண்டிருப்பதால் இரான் இந்தப் போரில் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளும் என்கிறார் செளலியா.
“இரானில் ஆட்சிக் கவிழ்ப்பை விரும்புவது இஸ்ரேல்தான், அமெரிக்கா அல்ல. மூன்று நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி அது ஆப்கானிஸ்தானாக இருந்தாலும், இராக்காக இருந்தாலும், லிபியாவாக இருந்தாலும் அமெரிக்கா எதையும் அடையவில்லை. இரான் ஒரு பெரிய நாடு.
அங்கு சுமார் 10 கோடி மக்கள் தொகை உள்ளது. அதன் நிலப்பகுதி மலைப் பிரதேசமாக உள்ளது. தரைப் படைகள் இங்கு எப்படி வரும்? இரானில் அதிகார மாற்றத்தைக் கொண்டு வர தரைப்படைகள் தேவை. இதை இஸ்ரேலால் எப்படிச் செய்ய முடியும்? காஸாவில் சண்டையிடுவதற்கே அதற்குப் போதிய ஆட்கள் இல்லை,” என அவர் கூறினார்.
இஸ்ரேலின் ஏற்பாடுகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாமானிய மக்களுடன் இரானின் விஞ்ஞானிகள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழ்ந்தனர்.இரான் மீது இராக் திடீரென தாக்குதல் நடத்தவில்லை என்றும் நன்கு தயாரான பிறகே தாக்கியதாகவும் கூறுகிறார், மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் மீது தனி கவனம் செலுத்தி வரும் மஞ்சரி சிங்.
“இஸ்ரேல் முதலில் இரானின் கூட்டாளிகளை மிகவும் பலவீனப்படுத்தியது. ஹெஸ்பொலாவின் முக்கிய தலைவர்களை முழுமையாக அழித்தது. ஹமாஸ் மிகவும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஏமனில் உள்ள ஹுதி புரட்சியாளர்களை அமெரிக்கா தாக்கியது. இதன் பின்னர், இஸ்ரேல் இரானை தாக்கியது. இரானின் கூட்டாளிகளைப் பலவீனப்படுத்தாமல் இஸ்ரேல் டெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தால், அதன் நிலைமை கடினமானதாக இருந்திருக்கும்” என்கிறார் மஞ்சரி சிங்.
அவர் விரிவாகப் பேசுகையில், “இரானின் பலம் என்னவென்பது இஸ்ரேலுக்கு தெரியும். இரானும் ஒரு ராணுவ சக்திதான். அதற்கு தொழில்நுட்பமும் உள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இஸ்ரேல், இரான் இடையிலான எந்தப் போரும் எளிமையானதாக இருக்காது. இந்தப் பகுதியில் இரான் ஒரு ராணுவ சக்தி. இரான் ஒரு நாகரீகமான நாடு. இரானை இஸ்ரேல் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என இஸ்ரேலின் நிபுணர்களும் கருதுகின்றனர்.”
இந்த 12 நாட்களில் இஸ்ரேல் தனது குறிக்கோளை அடைவதில் வெற்றி பெற்றதா?
மஞ்சரி சிங் கூறுகையில், “இஸ்ரேல் தனது குறிக்கோளை முழுமையாக அடைந்துவிட்டதாக என்னால் சொல்ல முடியாது. இரான் தாக்குதலுக்கு முன்னர் தனது அணுக் குவியல்களை அப்புறப்படுத்திவிட்டதாக செய்திகள் சொல்கின்றன. இரானிடம் அணு ஆயுத உபகரணங்கள் இருந்தால் அதன் அணுசக்தித் திட்டம் முழுமையாக அழிக்கப்படவில்லை. இஸ்ரேலுக்கு இரானின் அணு அபாயம் இன்னமும் குறைந்துவிடவில்லை” என்றார்.
இரானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?
இஸ்ரேலின் முதல் குறிக்கோள் இரானின் அணுசக்தித் திட்டத்தை முழுவதுமாக அழிப்பதுதான், ஆனால் இந்த குறிக்கோளை அடைவதில் அது முழுமையாக வெற்றி பெறவில்லை என, சௌதி அரேபியாவில் இந்தியாவின் தூதராக இருந்த தல்மிஸ் அகமது தெரிவிக்கிறார்.
தல்மிஸ் அகமது கூறுகையில், “இரானின் அணுசக்தித் திட்டம் முழுமையாக அழிக்கப்படவில்லை என பென்டகனில் இருந்து வரும் தகவல்கள் காட்டுகின்றன. இரானின் அணு ஆயுத திட்டம் தற்போது வேகம் குறைந்திருக்கலாம், ஆனால் அது அழிக்கப்படவில்லை.
இதுவரை கதிரியக்கம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் பொருள் அங்கு கதிரியக்கம் ஏதும் இருக்கவில்லை அல்லது வெடிகுண்டு அங்கு சென்ற சேர முடியவில்லை. இரானால் இவ்வளவு வெற்றிகரமாக ஒரு தாக்குதலை நடத்த முடியும் என இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை. இது போன்ற சூழலில், மோதல் 12வது நாளை எட்டியபோது போர்நிறுத்தம் ஏற்படுவது நல்லது என இஸ்ரேலும் நினைக்கத் தொடங்கியது” என்றார்.
இருப்பினும், இஸ்ரேல் இரானுக்கு அதிக அளவிலான சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கருதுகிறார்.
“இஸ்ரேல் இரானின் முக்கிய ராணுவ அதிகாரிகளைக் கொன்றது, விஞ்ஞானிகளைக் கொன்றது. இதுபோன்ற சூழலில், இரானின் பாதுகாப்பு அமைப்பு என்ன செய்துகொண்டிருந்தது என்ற கேள்வி எழுகிறது. முதல் நாள் தாக்குதலிலேயே பல முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய அமைப்பில் ஏதோ அடிப்படை பலவீனம் இருக்கிறது என்பதுதான் இதன் பொருள்,” என அவர் தெரிவித்தார்.
இரானின் வான் பாதுகாப்பு அமைப்பும் முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டதாகத் தெரிவதாக தல்மிஸ் அகமது கூறுகிறார்.
இரானின் அணுசக்திக் கொள்கை குறித்துப் பேசிய அவர், “இரான் தனது அணுசக்தித் திட்டத்தை 2003க்குள் முழுமையாக நிறுத்தியிருக்க வேண்டும் அல்லது ஓர் அணுகுண்டைத் தயாரித்திருக்க வேண்டும். 2003க்கு பிறகு, 22 ஆண்டுகளில் இரானால் அணுகுண்டைத் தயாரிக்கவும் முடியவில்லை, சர்வதேச அளவிலான நம்பிக்கையையும் பெற முடியவில்லை. இரான் இருதரப்பிலும் இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது,” என்று கூறினார்.
தல்மிஸ் அகமது தெரிவிக்கையில், “இரானால் தனது ராணுவ பலத்தை அதிகரிக்க முடியவில்லை. அமெரிக்காவுடன் போரிடுவதாக இரான் பெருமிதப்பட்டுக் கொள்கிறது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்தே அதனால் தன்னைக் காத்துக்கொள்ள முடியவில்லை. இரானால் தனது தளபதிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொது மக்களைக் காக்க முடியவில்லை. இரான் தனது கெளரவத்தை காக்க கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தைத் தாக்கியது. இந்தத் தாக்குதல் பற்றிய தகவல் முன்பே தெரிவிக்கப்பட்டதால் எந்த இழப்பும் இல்லை” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு