ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு பயணிகள் விமானம், சுமார் ஒரு மாதம் வரை மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டுடன் இயக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, ஒரு ஏர் இந்தியா ஏர்பஸ் A320 விமானம், விமானப் பயணத் தகுதிச் சான்றிதழ் (Airworthiness Review Certificate – ARC) காலாவதியாகிய பின்னரும், ஒரு மாத இடைவெளியில், நவம்பர் 24 மற்றும் 25 திகதிகளில் மட்டும் எட்டு முறை பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. விமானப் பயணத் தகுதிச் சான்றிதழ் (ARC) என்பது, விமானம் அனைத்துப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தரங்களையும் பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்தும் கட்டாய ஆவணமாகும். இது காலாவதியான பிறகு விமானத்தை இயக்குவது, விமானப் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த (Level 1) விதிமீறலாகக் கருதப்படுகிறது. ஒரு விமானம் பயணத் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்படுவது, அது காப்பீடு (Insurance) பெறுவதிலும் சிக்கலை ஏற்படுத்தி, பயணிகளின் பாதுகாப்பை நேரடியாக அபாயத்தில் தள்ளுகிறது. இந்த விதிமீறல் தெரியவந்ததும், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உடனடியாக அந்த விமானத்தை நிறுத்தி வைத்துள்ளதுடன், விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் ஏர் இந்தியா நிறுவனம் சஸ்பெண்ட் செய்து, உள்ளக விசாரணையும் நடத்தி வருகிறது.
மிகப்பெரிய குறைபாட்டுடன் ஒரு மாதமாகப் பறந்த ஏர் இந்தியா விமானம் – Global Tamil News
3