Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்ற ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினரை போராட்ட களத்தில் நின்ற மக்கள் கலைத்து வெளியேற்றியிருந்தனர்.
முன்னதாக ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே. சிவஞானமும் போராட்ட களத்தில் நின்ற மக்களால் கலைத்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி கோரிய அணையா விளக்கு போராட்டம் மூன்றாவது நாளாக இன்று புதன்கிழமையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பகல் வேளையில் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற சீ.வீ,கே.சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றியிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களென பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள தகுதியற்றவர்கள் எனத்தெரிவித்தே போராட்டகளத்தில் இருந்து சீ.வீ.கே.சிவஞானத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி , யாழ் . மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் ஆகியோரையும் அங்கிருந்த மக்கள் வெளியேற்றினர்.
இந்நிலையில் அணையா விளக்கு ஆர்ப்பாட்டத்திற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான ஆர்ப்பாட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்பட்டதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையில் செம்மணி புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். கொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்கள் எம்மிடமும் கூறியுள்ளனர். எனவே, எங்களுக்கும், அதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.
ஒரு அமைச்சராக நான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் என்பதே உண்மை. அந்த செய்தி சர்வதேசம் வரை செல்லும். அந்தவகையில் மக்களை சந்திப்பதற்காக இன்று செம்மணிக்கு சென்றிருந்தாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.