“குண்டு வீச்சுகளுக்கு நடுவே 900 கி.மீ. சாலை பயணம்” – இரான், இஸ்ரேலிலிருந்து திரும்பிய தமிழர்களின் அனுபவம் என்ன?

எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ்24 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் – இஸ்ரேல் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு இந்தியா அழைத்து வருகிறது. இது வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர் சூழலிலிருந்து நாடு திரும்பியுள்ளனர். புதன்கிழமை காலை நிலவரப்படி அவர்களில் 62 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்- அதில் 51 பேர் இஸ்ரேல் நாட்டிலிருந்தும் 11 பேர் இரானிலிருந்தும் தமிழகம் திரும்பியுள்ளனர்.

டெல்லிக்கு விமானம் மூலம் கூட்டி வரப்பட்ட அவர்கள், அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

வீடு திரும்பியுள்ள சேலத்தை சேர்ந்த ஆடைத்தொழில் ஆலோசகரான குணபாலன் இரானில் தான் பணிபுரிந்த இடத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் குண்டு விழுந்ததை அடுத்து, பதற்றமடைந்ததாக கூறுகிறார். “21ம் தேதி அருகில் இருந்த ராணுவ தளத்தின் மீது குண்டு விழுந்தது. அது வேலை செய்த ஆடை மில்லுக்கு வெறும் எட்டு கி.மீ தொலைவில் இருந்தது. நான் தங்கியிருந்த யாஸ் என்ற இடத்திலிருந்து 25 கி.மீ மட்டுமே. அப்போது முதல் அந்த இடம் பாதுகாப்பானது இல்லை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது” என்றார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கடந்த ஆண்டு ஏழு மாதங்கள் இரான் சென்றிருந்த போது, ஒரு ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாகவும், ஆனால் அப்போது நிலைமை இவ்வளவு பதற்றமாக இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

“அருகில் இருந்த ராணுவ தளத்தில் குண்டு விழுந்த பிறகு, பணிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர். எனவே குடியிருப்பிலேயே இருந்தோம். இரண்டு நாட்கள் மின்சார வசதி கிடையாது, தண்ணீர் வசதியும் இல்லை. நான் வேலை பார்த்த இடத்திலிருந்து மினரல் வாட்டர் பாட்டில்கள் தந்தனர். அந்த தண்ணீரை தான் எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டோம். வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இரண்டு வேளை உணவு, மில் உரிமையாளர் ஏற்பாடு செய்திருந்தார், இரவு உணவு சமைத்து சாப்பிட வேண்டும். இணைய வசதி துண்டிக்கப்பட்டது. உள்ளூர் சிம் வைத்திருந்தால், சாதாரண கால் மூலம் சில நிமிடங்கள் குடும்பத்தினரிடம் பேசலாம். அதுவும் எப்போது டவர் கிடைக்கும் என்று தெரியாது. வி பி என் மூலமே குடும்பத்தினருக்கு செய்திகள் அனுப்ப முடியும். எனவே அனுப்ப வேண்டிய குறுஞ்செய்திகள், வாய்ஸ் மெசேஜ் எல்லாவற்றையும் முன்பே டைப் செய்து வைத்துக்கொள்வோம். டவர் கிடைக்கும் சிறிது நேரத்தில் அவற்றை அனுப்பிக் கொள்வோம்.” என்று அந்த பதட்டமான நாட்களை விவரிக்கிறார் குணபாலன்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கடந்த 12ம் தேதி இரான் தலைநகர் தெஹ்ரானில் இறங்கி, பிறகு யாஸ் பகுதிக்கு சென்றுள்ளார். அடுத்த நாள் தெஹ்ரானில் குண்டு விழுந்த செய்தியை படித்த போது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக நினைத்தேன் என்கிறார்.

படக்குறிப்பு, குணபாலன் இரானிலிருந்து தன் சொந்த ஊரான சேலம் திரும்பியுள்ளார். 900 கி.மீ சாலை மார்க்க ஆபத்தான பயணம்

இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விமானத்தில் பயணிக்க, குணபாலன் தங்கியிருந்த பகுதியிலிருந்து 900 கி.மீ சாலை மார்க்கமாக சவாலான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. “உள்ளூர் நபர் ஒருவர் எங்களை யாஸ் முதல் மசாத் வரை காரில் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு முறை, நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் அடுத்து இருப்பவர்கள் அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்று கூறுவார்கள், பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிந்த பிறகே நாங்கள் அடுத்து நகர்ந்து செல்வோம்.

அப்படி நாங்கள் 300 கி.மீ தள்ளி வந்திருந்த போது, நாங்கள் கடந்த வந்த தஸான் என்ற பகுதியில் குண்டு வெடித்தது என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் 45 நிமிடங்கள் முன்பே அந்த இடத்தை கடந்து வந்தோம். மசாத் வரும் வழியில் நான்கு இடங்களில் சோதனைச்சாவடிகள் இருந்தன. ஒவ்வொரு இடத்திலும் எங்கள் பைகள் அனைத்தையும் சோதனையிட்டனர். சந்தேகப்படும்படியான வீடியோக்கள், புகைப்படங்கள் இருக்கிறதா என தெரிந்து கொள்ள மொபைல், லேப்டாப்களை முழுவதுமாக சோதனையிட்டனர்.” என்றார்.

இதன் பிறகு மசாத் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஓட்டலில் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் தங்கவைக்கப்பட்டனர் என்கிறார் குணபாலன். “நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு அடுத்த வளாகம் ஒரு போர் விமானப் பட்டறை. அந்த இடம் சில நாட்களுக்கு முன் குண்டுவீச்சில் தகர்க்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. எங்களுடன் தங்கியிருந்த குஜராத்தை சேர்ந்த நபர் தெஹ்ரானில் தான் காரில் பயணம் செய்துக் கொண்டிருக்கும் போது வானிலிருந்து குண்டு வீசப்பட்டு, அது விழுந்து வெடித்ததையும் பார்த்ததாக கூறினார். சினிமாவில் பார்ப்பது போல் இருந்தததாகவும், அதை பார்த்து தனக்கு நெஞ்சு வலிக்க ஆரம்பித்ததாகவும் கூறினார் ” என்கிறார்.

மசாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு செவ்வாய்கிழமை டெல்லி வந்தடைந்த அவர், தற்போது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் சேலத்தில் இருக்கிறார். “இரண்டு வாரங்களுக்கு முன்பே மோதல் ஆரம்பித்தாலும், முதல் சில நாட்கள், அங்கிருந்த உள்ளூர் மக்களே எங்களுக்கு தைரியம் சொன்னார்கள். அவர்கள் இராக் போரின் போது இதை எல்லாம் பார்த்ததால், சைரன் சத்தமும், குண்டு வீச்சும் அவர்களுக்கு பழக்கமானதாக இருக்கிறது. ஆனால் 21ம் தேதிக்கு பிறகு நிலைமைகள் மோசமடைவதை அவர்களே உணர்ந்து, எங்களுக்கு அது பாதுகாப்பான இடமல்ல என்று கூற ஆரம்பித்துவிட்டனர்” என்கிறார் குணபாலன்.

‘தினமும் ஒலிக்கும் சைரன் சத்தம்’

படக்குறிப்பு, கோவையை சேர்ந்த ஆடைத்தொழில் ஆலோசகர் பத்மநாபன் பணி நிமித்தமாக இரான் சென்ற போது, போர் சூழல் உருவானதை அடுத்து நாடு திரும்பியுள்ளார். குணபாலனுடன் கோவையை சேர்ந்த ஆடை வடிவமைப்பு மூத்த ஆலோசகர் பத்மநாபனும் இரான் சென்றிருந்தார். வீடு திரும்பியுள்ள அவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “நான் தங்கியிருந்த பகுதியில் நேரடியாக குண்டுவெடிப்பு இல்லை என்றாலும், நாளை என்ன நடக்கும் என்று குடும்பத்தினர் மிகவும் அச்சமடைந்தனர். ராணுவ தளங்கள் உள்ள இஸ்ஃபஹான் என்ற பகுதியில் இருந்து வந்த இந்தியர்கள் சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறினர். இரானில் நிறைய இந்திய மாணவர்கள், மருத்துவம் படிப்பதற்காக செல்கின்றனர்” என்றார்.

இஸ்ரேலிலிருந்து மதுரை திரும்பியுள்ள ஆராய்ச்சி மாணவர் பிலிப் செவ்வாய்கிழமை ஊர் திரும்பியுள்ளார். இஸ்ரேலில் ரெஹவோத் என்ற பகுதியில் வசித்து வந்த அவர், தான் வசிக்கும் பகுதியில் சைரன் சத்தம் அடிக்கடி கேட்கும் என்றார். “இரவு, பகல் என்று கூற முடியாது. எப்போது வேண்டுமானாலும் சைரன் சத்தம் வரலாம். எல்லா குடியிருப்புகளிலும் பங்கர் வசதி உண்டு. எனவே, சைரன் சத்தம் கேட்டவுடன் அங்கே சென்றுவிடுவோம். எனக்கு இது பழகிவிட்டது, பெரிய பதட்டம் ஏற்படவில்லை. ஆனால் அனைவருக்கும் அப்படி இருக்காது. குறிப்பாக டெல் அவிவ் போன்று, குண்டுவீச்சுகள் அதிகம் நடைபெறும் பகுதியில் இருப்பவர்களுக்கு மிகுந்த அச்சம் இருக்கலாம்” என்றார்.

மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் அதிகாரி ஒருவர் “இது வரை இந்தியா திரும்பியுள்ள 62 தமிழர்களில் 55 பேர் விமானம் மூலமும், ஏழு பேர் ரயில்கள் மூலமும் டெல்லியிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு தேவையான உதவியை வழங்க, மாநில அரசு தனியாக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அந்த எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு