யாழ்ப்பாணத்திற்கு நாளை பயணம் செய்யலாமென எதிர்பார்க்கப்படும் ஜநா மனித உரிமைகள் ஆணையர் செம்மணி புதைகுழிக்கு பயணிப்பாராவென்ற சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது.எனினும் செம்மணி புதைகுழி பகுதி முழுமையாக இலங்கை காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனிடையே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்காக சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது செம்மணியில் மேலுமொரு மனிதப் புதைகுழி கண்டறியப்பட்டுள்ளதனை தமிழ் சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.  

யுத்தத்தின் போதும்,அதற்குப் பின்னரும் சிறீலங்கா ஆயுத படைகளாலும் துணை இராணுவக் குழுக்காளாலும் கைது செய்யப்பட்டு மற்றும் அவர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அல்லது அவர்களிடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடு மாறு கோரப்பட்டே வருகின்றது.அதேபோன்றே இலங்கை அரச படைகளால் நடத்தப்படும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்;களது பெயர் பட்டியல்களை வெளியிடுமாறு,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ள போதும்; கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையெனவும் சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

காணாமல் போனோர் அலுவலக உருவாக்கமானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான அரசின் கண்துடைப்பு நடவடிக்கையே அவ் அலுவலகமானது உண்மை,நீதி,மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நடைமுறைத் தேடலைத் தாமதப்படுத்துகின்றது.நீதி,மற்றும் பொறுப்புக்கூறல் தாமதத்தின் விளைவாக குற்றமிழைத்த அவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையால், வலிந்து காணாமல் ஆக்குவதற்கான தலைமையை வழங்கியவர்களும் அதற்கான சித்தாந்த ரீதியான ஆதரவு வழங்கியோரும் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் அமர கூடியதாகவும் சுதந்திரமாக நடமாட கூடியதாகவும் உள்ளதாகவும் இன்று செம்மணியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் – தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி அணையாவிளக்கு என்னும் பெயரில் சர்வதேசத்திடம் நீதிகோரும் போராட்டம் ;மக்கள் செயல்’என்னும் தன்னார்வ இளையோர் அமைப்பினால் யாழ் செம்மணிவளைவுப்; பகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.