Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“40 முறை போதைப் பொருள் வாங்கிய ஸ்ரீகாந்த்” – வழக்கில் சிக்கியது எப்படி?
பட மூலாதாரம், actorsrikanth/Instagram
படக்குறிப்பு, நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
போதைப் பொருளைப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக இதற்கு முன் நடந்த கைதுகளின் தொடர்ச்சியாக ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?
பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை நகரக் காவல்துறையால் திங்கட்கிழமையன்று கைதுசெய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
கொக்கெய்ன் என்ற போதைப் பொருளை வாங்கியது தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக அழைத்தது நுங்கம்பாக்கம் காவல்துறை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நாள் முழுக்க விசாரணை நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. பிரபல நடிகர் ஒருவர், போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக கைதுசெய்யப்பட்டது அரசியல், திரையுலகு என பல இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்இவ்வளவு பெரிய அளவில் இந்த விவகாரம் வெடிப்பதற்குக் காரணமாக அமைந்தது நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் கடந்த மே மாதம் நடந்த ஒரு மோதல்தான். மே மாதம் 22ஆம் தேதி திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளரான ராஜா என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் மதுபானம் அருந்த வந்திருக்கிறார். அப்போது அங்கே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் ஒருவருக்கும் ராஜாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இதையடுத்து பார் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில், ராஜாவுக்கு ஆதரவாக சிலர் காவல் நிலையத்திற்கு வந்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறினர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டிய காவல்துறை, மே 29ஆம் தேதி மைலாப்பூரைச் சேர்ந்த டி. பிரசாத் (33), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். கணேஷ்குமார் (42), வடபழனியில் உள்ள சின்ன போரூரைச் சேர்ந்த ஜி. தனசேகர் (29), பனையூரைச் சேர்ந்த டி. அஜய் ரோகன் (36), சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான நாகேந்திரசேதுபதி என்ற சுனாமி சேதுபதி (33) ஆகியோர் தேனியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இதற்குப் பிறகு ராஜா, சந்தோஷ் என்ற இருவரும் புனேவில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடந்த விசாரணையில் பிரசாத் ஏற்கனவே சில மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இந்த மோசடிகளில் அவருக்குத் துணையாக இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் மணிகுமார் என்பவரும் காவலரான செந்தில்குமார் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர்.
பட மூலாதாரம், actorsrikanth/Instagram
படக்குறிப்பு, நடிகர் ஸ்ரீகாந்த்இதற்கிடையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) அளித்த தகவல்களின் அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ப்ராடோ என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறை சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஜூன் 17ஆம் தேதி கைதுசெய்தது. அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் ஜூன் 18ஆம் தேதி ஓசூரில் கைதுசெய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது.
பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில், தான் பிரசாதிற்கு போதைப் பொருள்களை சப்ளை செய்ததாகவும் அவர் அதனை நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். சுமார் 40 முறை இதுபோல வாங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பின்னணியில்தான் ஸ்ரீகாந்த்தை அழைத்து விசாரித்த நுங்கம்பாக்கம் காவல்துறை, விசாரணைக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் போதைப் பொருள் சோதனைக்கு உட்படுத்தியது. அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், கைதுசெய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாகப் பேச காவல்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.
பிரதீப்பிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இன்னொரு நடிகருக்கும் காவல்துறை விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கேரள திரையுலகில் போதைப்பொருள் தொடர்பான சர்ச்சை
பட மூலாதாரம், Getty Images
திரை நட்சத்திரங்கள் போதைப் பொருளைப் பயன்படுத்துவது என்பது இந்தியாவின் பல மாநிலங்களில் பெரும் சிக்கலான விவகாரமாகவே இருந்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாத மத்தியில் கொச்சியின் காலூர் பகுதியில் ஒரு ஹோட்டலில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒரு அதிரடி சோதனையை நடத்தியது. அப்போது அந்த ஹோட்டலில் இருந்து ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவரை எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திய கொச்சி நகரக் காவல்துறை, அவரைக் கைதுசெய்தது. பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, மலையாள திரைத்துறையின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகிஸ்தர்களை அழைத்து போதைப் பொருள் பரவல் குறித்து கூட்டம் நடத்தவிருப்பதாக அம்மாநில சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி மனோஜ் ஆபிரகாம் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பாக ஆழப்புழாவில் ஒரு காரை கலால் துறையினர் சோதனையிட்டபோது, அந்தக் காரில் இருந்து ஹைபிரிட் கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த கஞ்சா பிடிபட்ட பிறகு, இது தொடர்பாக திரைத்துறையினர், தொலைக்காட்சி நடிகர்கள், மாடல்கள் ஆகியோரிடம் கலால் வரித் துறையினர் விசாரணை நடத்தினர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு