Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி இரான் எத்தனை ஏவுகணைகளை ஏவியது? முழு விவரம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானின் தாக்குதலை தொடர்ந்து கத்தாரில் காணப்பட்ட இடைமறிக்கும் ஏவுகணைகள் எழுதியவர், ஷான் செடன் & கேப்ரியலா போமெராய் பதவி, பிபிசி நியூஸ் 24 ஜூன் 2025, 02:35 GMT
புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கான பதிலடி இது என, இரான் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது தோஹாவில் வானில் பலத்த ஒலி எழுந்ததாக, அதை நேரில் கண்ட சாட்சியங்கள் கூறுகின்றன. இரான் ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிக்க முயற்சித்தபோது, வானில் பெரும் ஒளி ஏற்பட்டதை அதுதொடர்பான காணொளிகள் காட்டுகின்றன.
இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இந்த மோதல் அதிகரித்து வருவதால், சமீப நாட்களாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இரான் இலக்கு வைத்தது என்ன? ஏன்?
மத்திய கிழக்கின் அல்-உடெய்ட் பகுதியில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளத்தை இரானிய ஏவுகணைகள் இலக்கு வைத்தன. சனிக்கிழமை மாலை தங்கள் நாட்டின் மூன்று அணுசக்தி கட்டமைப்புகள் மீது அமெரிக்கா குண்டுவீசியதற்கான எதிர்வினை இது என இரான் தெரிவித்துள்ளது.
அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் அனைத்துவித வான்வழி நடவடிக்கைகளுக்கான ராணுவ தலைமையகமாக அல்-உடெய்ட் விளங்குகிறது. அங்கு சில பிரிட்டிஷ் ராணுவ பணியாளர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இரானிய அரசு ஊடகம் இந்த தாக்குதலை முதலில் உறுதிப்படுத்திய நிலையில், பின்னர் ராணுவமும் உறுதிப்படுத்தியது.
இரானிய ராணுவத்தின் மிகவும் அதிகாரமிக்க பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், “தங்களின் இறையாண்மை மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் இரான் பதிலளிக்காமல் விட்டதில்லை,” என தெரிவித்துள்ளது. மேலும், “இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் பலம் வாய்ந்தவை அல்ல, மாறாக அவை பலவீனமானவை.” எனவும் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இரானின் தாக்குதலை தொடர்ந்து கத்தாரில் காணப்பட்ட இடைமறிக்கும் ஏவுகணைகள் அணுசக்தி தளங்கள் மீதான தங்களின் தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என அமெரிக்கா முன்னதாக இரானை எச்சரித்திருந்தது. பிராந்தியத்தில் நடைபெறும் மோதலை ராஜீய ரீதியில் முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொள்ள வேண்டும் என, டெஹ்ரானில் உள்ள தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியது.
அமெரிக்க ராணுவ தளம் மீது எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டன என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இரான் ஆறு ஏவுகணைகள் என்றும் அமெரிக்கா 14 ஏவுகணைகள் என்றும் கூறுகின்றன. ராய்ட்டர்ஸ் செய்தி முகமை,19 ஏவுகணைகள் என கத்தார் கூறியுள்ளதாகவும் அனைத்து ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த தாக்குதலுக்கு சில மணிநேரத்திற்கு முன்னதாக, கத்தாரில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை “பாதுகாப்பான இடங்களுக்கு” செல்லுமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிவுறுத்தியது. அமெரிக்க வெளியுறவு துறை தகவலின் படி, சுமார் 8,000 அமெரிக்க குடிமக்கள் கத்தாரில் வாழ்கின்றனர். அதேபோன்று, சில ஆயிரம் பிரிட்டன் குடிமக்களும் கத்தாரில் உள்ளனர்.
பட மூலாதாரம், The White House
படக்குறிப்பு, இரான் தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் காயமடையவில்லை என, டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார் தாக்குதலுக்குப் பின் கூறப்பட்டது என்ன?
தாங்கள் விரைவில் ஏவுகணைகளை ஏவ தயாராகி வருவதாக இரான் எச்சரிக்கை விடுத்தது, இந்த தாக்குதலின் மூலம் தெளிவானது. உயிரிழப்புகளை குறைக்கும் பொருட்டு தங்களுடைய தாக்குதல் திட்டம் குறித்து கத்தாரிடம் முன்கூட்டியே இரான் கூறியதாக, மூன்று இரானிய அதிகாரிகளை மேற்கோளிட்டு நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “எந்தவொரு உயிரிழப்போ அல்லது யாரும் காயமடைவதையோ தடுக்கும் வண்ணம், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பை வழங்கியதற்காக இரானுக்கு நன்றி” என தெரிவித்தார்.
இந்த தாக்குதல் “மிகவும் பலவீனமானது” என அவர் குறிப்பிட்டார். எந்தவொரு அமெரிக்கரும் இதனால் பாதிக்கப்படவில்லை என்றும், மிகச்சிறிய சேதமே ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். “அவர்கள் (இரான்) என்ன செய்ய வேண்டும் என நினைத்தார்களோ, அதை செய்துவிட்டனர்,” என்று கூடிய டிரம்ப், தற்போது “அமைதி” ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
கத்தார் வெளியுறவு துறையின் செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதல் “ஆச்சர்யகரமானது” என்றும், “தங்களது இறையாண்மையை அப்பட்டமாக மீறும் செயல்” என்றும் தெரிவித்தார். “இந்த பிராந்தியத்தில் இஸ்ரேலிய மோதல் அதிகரிப்பதால் விளையும் ஆபத்துகளுக்கு எதிராக முதலாவதாக எச்சரித்த நாடுகளுள் கத்தாரும் ஒன்று” என அவர் கூறினார்.
இதனிடையே, இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கூறுகையில் இந்த தாக்குதல் மூலம் இரான் யாரையும் காயப்படுத்தவில்லை என்று தெரிவித்தார். ஆனால், “யாருடைய மீறலுக்கும் தங்கள் நாடு கீழ்படியாது,” என்றும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் யார் மீதும் அத்துமீறவில்லை, அதேபோன்று எங்கள் மீது யாரும் அத்துமீறுவதை எந்தவிதத்திலும் ஏற்க மாட்டோம். யாருடைய அத்துமீறலுக்கும் நாங்கள் கீழ்படிய மாட்டோம்; இதுதான் இரானின் நிலைப்பாடு,” என அவர் தன் எக்ஸ் பக்கத்தில் (பிபிசி பெர்சிய சேவையால் மொழிபெயர்க்கப்பட்டது) தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இரான் தாக்குதலுக்கு முன்பான சமிக்ஞைகள் என்ன?
கத்தார் மீது இரான் ஏவுகணைகளை ஏவுவதற்கு தாயாராகி வருவதற்கான அறிகுறிகள் திங்கட்கிழமை தெரிந்ததாக அமெரிக்கா சந்தேகித்தது.
இந்த தாக்குதலுக்கு சில மணிநேரத்திற்கு முன்பாக, தங்களுடைய வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக கத்தார் தெரிவித்தது. அதன்பின், சிறிது நேரத்தில் தங்கள் நாட்டு குடிமக்களை “பாதுகாப்பான இடங்களுக்கு” செல்லுமாறு அமெரிக்காவும் பிரிட்டனும் அறிவுறுத்தின.
இந்த எச்சரிக்கைகள், தாக்குதல் நடைபெற போகிறது என்பதை தெளிவாக உணர்த்தவில்லை: “அதீத எச்சரிக்கை நடவடிக்கையாக” இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்காவை பின்தொடர்ந்து இந்த முடிவை எடுத்ததாக பிரிட்டன் தெரிவித்தது.
எனினும், இந்த தாக்குதலுக்கு சுமார் ஒரு மணிநேரம் முன்னதாக, அமெரிக்க ராணுவ தளத்தின் மீது “தாக்குதல் நிகழப் போவதாக” பிபிசிக்கு தகவல் கிடைத்தது.
கத்தாரை நோக்கி இரானிய ஏவுகணைகள் சாத்தியமான தாக்குதலுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக, அடையாளம் தெரியாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
தாக்குதலுக்கு முன்பாக, விமானங்கள் ஏற்கெனவே மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதை விமான கண்காணிப்பு இணையதள தரவுகள் காட்டுகின்றன.
சர்வதேச விமான போக்குவரத்துக்கு உலகின் 10 பரபரப்பான விமான நிலையங்களுள் ஒன்றாக கத்தாரில் உள்ள ஹமாட் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நாளொன்றுக்கு 1,40,000 பயணிகள் இந்த விமான நிலையம் வாயிலாக பயணிக்கின்றனர்.
இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளான பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வெளியை சிறிது நேரத்துக்கு மூடின.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்இதற்கு முன்பு நடந்தது என்ன?
இரானின் மூன்று அணுசக்தி கட்டமைப்புகள் மீது சனிக்கிழமை அமெரிக்கா பெரியளவிலான தாக்குதலை நடத்தியது.
இரானுக்கு எதிராக கடந்த 13-ம் தேதி தொடங்கிய இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இணையுமா என்ற நிச்சயமற்ற சூழலுக்கு நடுவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இரானுக்குள் அதன் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தினசரி வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்கு இந்த தாக்குதல்கள் அவசியமானது என இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், இரான் அணு ஆயுத தயாரிக்க முயற்சிப்பதை தடுக்க முயன்றுள்ளன. குடிமக்களின் அமைதி நோக்கத்துக்காகவே தங்களது அணுசக்தி திட்டம் இருப்பதாக இரான் எப்போதும் கூறிவந்துள்ளது.
இரானின் அணுசக்தி திட்டம் தங்கள் தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அந்த தாக்குதல்களின் முழுமையான விளைவுகள் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு