கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

படக்குறிப்பு, கோவை–சத்தியமங்கலம் இடையே புதிய 4 வழிச்சாலை அமைத்து, அங்கிருந்து மலைப்பாதையில் தற்போதுள்ள சாலை கூடுமான வரை விரிவாக்கம் செய்யப்படும்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கோவை–சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையுடன் 7 விவசாய அமைப்புகள் ஓரணியில் திரண்டுள்ளன.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டத்தையே மாநில அரசு செயல்படுத்துவதாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, “விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியே நிலம் கையகப்படுத்தப்படுகிறது. விவசாயிகள் தெரிவிக்கும் ஆட்சேபனைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கோவை–சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் என்ன நடக்கிறது?

பசுமை வழிச்சாலை அமைக்க திட்டம்

தேசிய நெடுஞ்சாலைகள் மறுவரையறை செய்யப்பட்டு, கோவை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையாக (NH 948) மாற்றப்பட்ட பின்பு கோவை–சத்தியமங்கலம் சாலை மட்டுமே இரண்டு வழிச்சாலையாக உள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வசமுள்ள இந்த 324 கி.மீ. சாலையில், தமிழகத்தில் 120 கி.மீ. துாரமும், கர்நாடகாவில் 204 கி.மீ. துாரமும் அமைந்துள்ளது. இதில், கோவை– சத்தியமங்கலம் இடைப்பட்ட சாலைதான் மிகவும் குறுகலாக உள்ளது. அதற்கு அடுத்ததாக மாநில எல்லை வரை மலைப்பாதை உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போதே, கோவை–சத்தியமங்கலம் சாலைக்கு இணையாக 92 கி.மீ. துாரத்துக்கு பசுமை வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. அதற்காக சாத்தியக்கூறு அறிக்கையும், விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட திட்ட அறிக்கையில், கோவை–சத்தியமங்கலம் இடையே புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், அங்கிருந்து மலைப்பாதையில் தற்போதுள்ள சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அன்னுார், புளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய 3 நகரங்களில் மொத்தம் 34.83 கி.மீ. துாரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அதில் விளக்கப்பட்டிருந்தது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் அரசு நிலம் 48 ஏக்கர், தனியார் நிலம் 732 ஏக்கர் என மொத்தம் 780 ஏக்கர் நிலம் தேவையென்று அதிமுக ஆட்சியின் போது நில ஆர்ஜித பிரேரணை தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. அதற்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்த 351 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கான நிதியுடன் சாலை அமைப்பதற்கு ரூ.1345.51 கோடி, பிற பணிகளுக்கு ரூ.217.41 கோடி என மொத்தம் ரூ.1912.86 கோடி நிதி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்டது. ஆனால், கொரோனா பேரிடரின் தாக்கத்தால் நிலம் கையகப்படுத்துதல் பணிகள் நடக்கவில்லை.

இந்தத் தாமதத்தால் நில மதிப்பு உயர்ந்தது. ஆகையால், மறு மதிப்பீடு செய்து நிலம் கையகப்படுத்துவதற்கென 2023 மார்ச் 28-ஆம் தேதி ரூ.639.18 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சகத்தால் ஒப்புதல் தரப்பட்டு, அதே ஆண்டு மே 22-ஆம் தேதி நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது.

பணிகளில் தாமதம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தத் திட்டத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுவிடம் பிபிசி தமிழ் பெற்ற தகவலின்படி, கோவை–சத்தியமங்கலம் பசுமை வழிச் சாலைக்கு 2018 பிப்ரவரி 5-ஆம் தேதி அந்த குழுவிலும், 2020 நவம்பர் 20-ஆம் தேதி நிலமெடுப்புக் குழுவிலும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் 2021 மார்ச் 26-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2022 பிப்ரவரி 14-ஆம் தேதி நிலமெடுப்பதற்கான 3A அறிவிக்கையை வெளியிட்டது.

அதற்குப் பிறகு, பசுமை வழிச்சாலை அமைக்கும் பணியைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் 2022 மே 27-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி, 2022 அக்டோபர் 13-ஆம் தேதி அதே விரிவான திட்ட அறிக்கையின்படி, இந்தச் சாலை அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலைத் துறையிடம் ஆணையம் ஒப்படைத்துள்ளது.

கடந்த 2022 பிப்ரவரி 14-ஆம் தேதி ஆணையம் வெளியிட்ட நிலம் கையகப்படுத்துவதற்கான 3A அறிவிக்கை, 2023 பிப்ரவரி 13-ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. நிலம் கையகப்படுத்த உருவாக்கப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 2 நிலமெடுப்பு சிறப்பு அலகுகளும் கலைக்கப்பட்டுவிட்டன.

தற்போது மீண்டும் அந்த அலகுகள் அமைக்கப்பட்டு, மறுபடியும் நிலமெடுப்புக்கான 3A அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் எதிர்ப்பு

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 விவசாய அமைப்புகள் ஓர் அணியில் திரண்டுள்ளன2020ஆம் ஆண்டில் இருந்தே இந்த பசுமை வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். கொரோனா காலத்திலேயே இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. அப்போது 3 மாவட்டங்களிலும் தனித்தனியாகப் போராடி வந்த விவசாய அமைப்புகள் இப்போது ஓர் அணியில் இணைந்து விவசாயப் பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பைத் துவக்கியுள்ளன.

இதில், 7 விவசாய சங்கங்கள் இணைந்துள்ளதாக இதன் தலைவர் முருகசாமி தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய முருகசாமி, ”இந்த பசுமை வழிச் சாலை திட்டத்தால் 3 மாவட்டங்களில் உள்ள ஆயிரம் விவசாயிகளும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.” என்றார்.

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, கோப்புப் படம்விவசாயிகளின் எதிர்ப்புக்கு, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையே காரணம் என்று மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரும், கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் (consumer cause) செயலாளருமான கதிர்மதியோன் குற்றம் சாட்டுகிறார்.

”நிலம் கையகப்படுத்த 2023 மே மாதத்திலேயே ரூ.639 கோடியை மத்திய அரசு ஒதுக்கிவிட்டது. கடந்த 2023–2024 நிதியாண்டுக்குள் இதில் 90% நிதியை, அதாவது 575.26 கோடியைச் செலவிட்டிருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக இருந்தது. ஆனால், இப்போது வரை ஒரு சதவிகித நிலம்கூட கையகப்படுத்தப்படவில்லை.

நிலமெடுப்பு சிறப்பு அலகை உருவாக்கவே தமிழக அரசுக்கு 18 மாதங்களாகிவிட்டன. இந்த தேவையற்ற தாமதத்தால்தான் இப்போது பிரச்னை அதிகமாகியுள்ளது.” என்கிறார் கதிர்மதியோன்.

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, கோப்புப் படம்பிபிசி தமிழிடம் பேசிய தேசிய நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்டப் பொறியாளர் தனபால், ”நிலமெடுப்பதற்காக சிறப்பு அலகு அமைப்பதற்கு சற்றுத் தாமதமாகி விட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை. நிலத்தின் அளவையும், சாலை அமைப்பையும் இனிமேல் எந்த வகையிலும் மாற்ற இயலாது” என்றார்.

தமிழக அரசு நினைத்தால் இந்தத் திட்டத்தைக் கைவிட்டு, தற்போதுள்ள சத்தியமங்கலம் சாலையை விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

ஆனால், இதனை மறுக்கும் நெடுஞ்சாலைத் துறையின் கோவை கோட்டப் பொறியாளர் தனபால், ”இது இரண்டு மாநிலங்களை இணைக்கின்ற முக்கியமான தேசிய நெடுஞ்சாலை. விவசாயிகள் கூறுகிறபடி, இப்போதுள்ள சத்தியமங்கலம் சாலையை விரிவாக்கம் செய்வது சாத்தியமே இல்லை. அதில், ஏராளமான கட்டடங்களை அகற்ற வேண்டியிருக்கும். நகருக்குள்ளும் சாலையை விரிவாக்கம் செய்ய முடியாது. பசுமை வழிச்சாலை அமைப்பது மட்டுமே போக்குவரத்துப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்” என்கிறார் .

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.நிலத்தின் மதிப்பு நிர்ணயம் எப்படி?

விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து கருத்துக் கேட்பதற்காக, தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, நில நிர்வாக ஆணையர் பழனிசாமி ஆகியோரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் பதில் அளிக்கவில்லை.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த பசுமை வழிச்சாலைக்கு நிலமெடுக்கும் பணியை மேற்கொள்ளும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி பிபிசி தமிழிடம் பேசியபோது, ”விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய பிறகே நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதுவரை 409 ஆட்சேபனைகள் வந்துள்ளன. விவசாயிகள் தெரிவிக்கும் ஆட்சேபனைகள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். நிலத்தை கையகப்படுத்தும் பணி, மிகவும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் நிலங்களுக்கான மதிப்பை இப்போது கணிக்க முடியாது. அதை அரசே தீர்மானிக்கும்” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு