Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இரானுக்குள் ஒரு ரகசிய வலையமைப்பை உருவாக்கி தளபதிகள், ராணுவ தளங்களை ‘மொசாட்’ தாக்கியது எப்படி?
பட மூலாதாரம், the IDF
படக்குறிப்பு, இரானில் தாக்குதல்களை மேற்கொள்வதில் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக ஊகங்கள் உள்ளன.எழுதியவர், பிபிசி பாரசீக சேவைபதவி, 21 ஜூன் 2025, 08:36 GMT
புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்
இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு வெளிவந்த பல அறிக்கைகள், போர் முனை வானத்தில் மட்டுமல்ல, நிலத்திலும் இருப்பதைக் குறிக்கின்றன.
இரானில் ஆழமாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவும் செயல்பாடுகள் மூலம் இஸ்ரேல் இதற்கு நீண்ட காலமாக தயாராகி வந்துள்ளது.
இருப்பினும், இரானின் பாதுகாப்புப் படைகளுக்குள், இஸ்ரேல் ஊடுருவலாம் என்ற அச்சத்தை இரானிய அதிகாரிகள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் இந்த முழு சம்பவத்தில் இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் பங்கு எந்தளவுக்கு இருந்தது என்பதை மதிப்பிடுவது எளிதான காரியமல்ல.
இஸ்ரேல் பொதுவாக மொசாட்டின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை.
அதேபோல், இரானில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பிற உளவுத்துறை அமைப்புகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆயினும், இரானிய மண்ணில் இலக்குகளை அடையாளம் காண்பதிலும், நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.
பட மூலாதாரம், ATTA KENARE/AFP via Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெஹ்ரானில் ஒரு பதாகை வைக்கப்பட்டது.இரானுக்குள் நீர்மூழ்கி எதிர்ப்பு அமைப்புகள், ஏவுகணை கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தனிநபர்கள் மீது ஒரே நேரத்திலும், மிகவும் துல்லியமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை பல ஊடக அறிக்கைகளும், சில இஸ்ரேலிய அதிகாரிகளின் கருத்துகளும் தெளிவுபடுத்துகின்றன.
இரானுக்குள் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த உளவுத்துறை நடவடிக்கைகள் மூலம் இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் சாத்தியமாக்கியுள்ளது.
இரான் உளவுத்துறைக்கு பெரும் இழப்பு
பட மூலாதாரம், MAJID SAEEDI/GETTY IMAGES
படக்குறிப்பு, இரானின் தலைநகர் டெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலின் புகைப்படம் (13 ஜூன் 2025)இஸ்ரேலின் தாக்குதல்கள் இரானின் ராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்தது மட்டுமல்லாமல், அதன் உளவுத்துறை திறன்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் இரான் தலைவர்களும், ராணுவத் தளபதிகளும் குழப்பமும், திகைப்பும் அடைந்துள்ளனர்.
தாக்குதல்கள் நடந்த ஐந்தாவது நாளில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, உளவுத்துறை அபாயங்கள் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் கடுமையான கவலை இருப்பதைக் காட்டுகிறது.
அந்த அறிக்கையில், அதிகாரிகள் மற்றும் அவர்களது பாதுகாப்புக் குழுக்கள் மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் அல்லது மடிக்கணினிகள் போன்ற எந்தவொரு தகவல் தொடர்பு நெட்வொர்க்குடனும் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல.
பொதுமக்களும் இந்த சாதனங்களை முடிந்தவரை குறைவாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த அளவிலான பொது எச்சரிக்கை என்பது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமன்றி, இரானுக்குள் சைபர் பாதுகாப்பில் ஆழமான ஊடுருவல் குறித்த அச்சம் வேகமாக வளர்ந்து வருவதைக் காட்டும் ஒரு அறிகுறியாகவும் உள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இரானுக்குள் தளவாடங்களை கடத்தி, ஒருங்கிணைத்து, ஆயுத உற்பத்தியா?
இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் கூறுவதுபோல, இஸ்ரேலின் நடவடிக்கைகள் வெறும் முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை.
இஸ்ரேல், இரானிய மண்ணில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கவும் , அவற்றை பயன்படுத்தவும் ஒரு திட்டமிட்ட வலையமைப்பை உருவாக்கியிருப்பதாக இந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
நீண்ட காலம் நீடித்ததாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள், உள்ளூர் முகவர்களின் வலையமைப்பு, அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு, போக்குவரத்து அமைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.
சமீபத்திய தாக்குதல்களுக்கான அடித்தளம் இந்த முன்தயாரிப்புகளில் இருந்தே கட்டமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இராக் வழியாகச் செல்லும் லாரிகள், வணிகக் கொள்கலன்கள் மற்றும் பயணிகளின் சூட்கேஸ்களில் பொருட்கள் மறைத்து வைக்கப்படும் கடத்தல் முறைகளை பயன்படுத்தி, இஸ்ரேல் டிரோன்கள் மற்றும் ஏவுகணை உபகரணங்களை ஒவ்வொன்றாக இரானுக்குள் நகர்த்தியுள்ளதாக ராணுவ விவகார கண்காணிப்பாளரான ‘தி வார் சோனும்’ மற்றும் பிற ஆதாரங்களும் தெரிவித்துள்ளன.
இந்த சாதனங்களில் மின்னணு கருவிகள் (electronic fuses), மேம்பட்ட எலக்ட்ரோ-ஆப்டிகல் கேமராக்கள், லித்தியம் பேட்டரிகள், இலகு ரக இயந்திரங்கள், ஜிபிஎஸ் அடிப்படையிலான வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவையும் அடங்கும்.
பின்னர், பல ஆண்டுகளாக இரானின் பல்வேறு பகுதிகளில் மொசாட் அமைத்த ரகசிய இடங்களில், இந்த பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக மாற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஹ்ரானுக்கு அருகில் மூன்று மாடி கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்கொலை டிரோன்களை தயாரிக்கவும் சேமிக்கவுமான ஒரு தளமாக இருந்ததாக அதிகாரிகள் விவரித்துள்ளதாகவும் இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பட மூலாதாரம், Mizan
படக்குறிப்பு, இரானின் பல்வேறு பகுதிகளில், மொசாட் அமைத்த ரகசிய இடங்களில், பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஆயுதங்களாக மாற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு செய்தியில், கட்டடத்தின் உள்ளே உள்ள மேசைகள் மற்றும் அலமாரிகளில் குறைந்தது ஒரு ட்ரோன், அதன் இறக்கைகள், பல்வேறு பாகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு உபகரணங்கள் இருந்தது காட்டப்பட்டது.
அங்கே ஒரு 3D பிரிண்டரும் காணப்பட்டது.
‘தி வார் ஸோன்’ என்ற வலைதளத்தின் தகவல்படி, இந்த வகையான பிரிண்டர் யுக்ரேனில் டிரோன் பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 16 திங்கட்கிழமையன்று டெஹ்ரானில் உள்ள ஒரு பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில், மொசாட்டுடன் தொடர்புடைய 2 “முகவர்கள்” கைது செய்யப்பட்டதாக இரானிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர்களிடம் இருந்து 200 கிலோகிராமுக்கும் அதிகமான வெடிபொருட்கள், 23 டிரோன் பாகங்கள், லாஞ்சர்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒரு நிசான் கார் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இரானின் மிகவும் முக்கியமான அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள இஸ்ஃபஹானில், ஏராளமான டிரோன் மற்றும் மைக்ரோ-டிரோன் உற்பத்திக்கான உபகரணங்கள் மற்றும் பாகங்களை வைத்திருந்த ஒரு பட்டறையை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோதனை செய்தார். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3D பிரிண்டர்கள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி டிரோன்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன என்பது இந்த தகவல்களின்படி தெரியவருகின்றது.
இதனால் அதிக அளவில் பாகங்களை கடத்த வேண்டிய தேவை இல்லாமல் போவதால், இரான் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மொசாட் சப்ளை சங்கிலியை கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டிருந்தது.
இந்தக் கூற்றுகளை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை இரானிய பாதுகாப்பு நிறுவனங்கள் இதற்கு முன்பு பலமுறை கைது செய்துள்ளன.
ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துதல்
பட மூலாதாரம், Telegram
படக்குறிப்பு, ஸ்பைக் ஏவுகணை லாஞ்சர்களின் படங்கள், தரையில் உள்ள முக்காலி போன்ற அமைப்பின் மீது அதன் உருவத்தை மறைக்கும் உறைகளுடன் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்களின்படி, இஸ்ரேல் ரகசிய நடவடிக்கையின் ஒரு முக்கிய அம்சமாக, இரானிய மண்ணில் உள்ள இலகுரக, துல்லியமான மற்றும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஏவுகணை அமைப்புகள் காணப்படுகின்றன.
இத்தகைய நவீன மற்றும் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை, அவற்றை இயக்குபவரின் உதவி இல்லாமல் இரானுக்குள் இருந்து சுட முடியும். தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், இது பாரம்பரிய முறைகளை நேரடியாக சவால் செய்யும் ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது.
இரானின் ஆங்கில செய்தி சேவையான பிரஸ் டிவி திங்களன்று தனது டெலிகிராம் சேனலில், “இரானிய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஸ்பைக் ரக ஏவுகணைகளை இரானிய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
இந்த அமைப்புகளில் இணைய-தானியங்கி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பொருத்தப்பட்டிருந்தது” என்றும், “இந்த அமைப்பு மொசாட் முகவர்களால் இயக்கப்பட்டது”என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
அவை ஒரு வாகனத்திலோ அல்லது டிரோனிலோ பொருத்தப்படவில்லை.
மாறாக அவற்றை மறைக்கும் உறையுடன் கூடிய முக்காலி போன்ற அமைப்பின் மீது நிறுவப்பட்டு, தரையில் வைக்கப்பட்டிருந்தன என்பதை ஸ்பைக் லாஞ்சர் ஏவுகணைகளின் படங்கள் காட்டுகின்றன.
இந்த ஏவுகணைகளில் எலக்ட்ரோ-ஆப்டிகல் வழிகாட்டுதல் அமைப்புகள், அதிநவீன கேமராக்கள் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இதனால், தூரத்திலிருந்து கூட அவற்றுக்கு கட்டளை வழங்கப்படலாம்.
இதற்கு முன்பும், இரானில் இஸ்ரேல் ரிமோட் கண்ட்ரோல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020 நவம்பரில், இரானில் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த விஞ்ஞானி, ஒரு பிக்அப் வேனில் பொருத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்டதாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட எந்த நபரும் சம்பவ இடத்தில் இல்லை என்றும் இரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
பட மூலாதாரம், MAJID SAEEDI/GETTY IMAGES
படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்ட இரானிய கட்டிடம் (13 ஜூன் 2025)இரானின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் அமைப்புகளை முடக்க திட்டம்
இரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு, இரானின் வான் பாதுகாப்பு வலையமைப்பை முடக்க ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவதே இஸ்ரேலிய நடவடிக்கையின் முக்கிய பகுதி என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சிறிய தற்கொலை டிரோன்கள், தரையில் இருந்து ஏவப்படும் இரானிய ஏவுகணைகள் மற்றும் மின்னணு போர் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பல்வேறு முயற்சிகள் இந்த உத்தியில் இணைக்கப்பட்டிருந்தன.
இரானின் ரேடார் அமைப்புகளை முடக்குவது, வான் பாதுகாப்பு ஏவுகணை கட்டமைப்பை அழிப்பது மற்றும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்த வசதியாக ஒரு பாதுகாப்பான வழியை உருவாக்குவது ஆகியவையே அதன் ஒட்டுமொத்த நோக்கமாக இருந்துள்ளது.
ராணுவ விவகாரங்களை மையமாகக் கொண்ட வலைத்தளங்களின்படி, இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், சிறிய மற்றும் இலகுரக குவாட்காப்டர் போன்ற டிரோன்கள் மற்றும் மைக்ரோ ட்ரோன்களின் தொகுதி ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முந்தைய மாதங்களில் இந்த டிரோன்கள் ஏற்கனவே இரானின் பல பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
இரானின் முக்கிய தளபதிகளுக்கு குறி
பட மூலாதாரம், TASNIM/KHAMENEI
படக்குறிப்பு, இரானிய இராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைக்கிறதுஇரானிய ராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் நிர்வாக அமைப்பை பலவீனப்படுத்துவதற்காக முக்கிய தளபதிகளுக்கு குறிவைத்தது தான் இஸ்ரேலின் நடவடிக்கையின் மற்றொரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது.
மொசாட் மற்றும் அதன் கூட்டாளிகள் உளவுத் தகவல்கள் மற்றும் ஸ்மார்ட் ஆயுதங்களை பயன்படுத்தி, இரானின் பாதுகாப்புத்துறையில் கட்டளை பிறப்பிக்கும் அதிகார கட்டமைப்பில் சேதத்தை ஏற்படுத்தி, அதன் ராணுவ தயார் நிலையை மந்தமாக்கவும் முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், ராணுவ தளங்கள் அல்லது ஏவுகணை ஏவுதளங்களை சில தாக்குதல்கள் குறிவைக்கவில்லை.
மாறாக, உயர் அதிகாரிகளின் வீடுகள் அல்லது அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தாக்குதல்கள் இரானுக்குள் இருந்தபடியே ஸ்பைக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன என ஊடக அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன.
இந்த ஏவுகணைகளால், நேரடி கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் கட்டடங்களுக்குள் இருக்கும் மனிதர்களை நேரடியாக குறிவைக்க முடியும்.
இரான் தளபதிகளுக்கு மொசாட் குறி
தாக்குதலுக்கு முன்பு மட்டுமல்லாமல், தாக்குதல் நடைபெறும் போதும் இஸ்ரேலின் உளவுத்துறை நடவடிக்கைகள் தொடர்ந்தன என்றும், அப்போது இரானின் உயர் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டனர் என்றும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மூன்றாவது நாள் நடந்த தாக்குதலில் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைப் பிரிவு தலைவர் முகமது கசெமியும் அவரது உதவியாளரும் குறிவைக்கப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட தளபதிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட அதிகாரியும் அடுத்த 4 நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார்.
இஸ்ரேலின் முழுமையான உத்தி பல வருடங்களாக நடந்த தயாரிப்புகளின் விளைவு என அமெரிக்க சிந்தனைக் குழு ‘ஹட்சன் இன்ஸ்டிடியூட்’ வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகின்றது.
இந்த திட்டத்தில், தொடர்ச்சியான தகவல் சேகரிப்பு, நேரலையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடப்பட்ட இலக்குகளை ஆழமாக அணுகும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு