இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசுவதால் ஏற்படக் கூடிய ஆபத்துகள்

பட மூலாதாரம், Getty Images/Maxar Technologies

படக்குறிப்பு, இரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது.எழுதியவர், ரெபேக்கா மோரேல், அலிசன் பிரான்சிஸ் & விக்டோரியா கில்பதவி, பிபிசி நியூஸ் அறிவியல் குழுஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் அணுசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்து வரும் இஸ்ரேல், இரானின் நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது முக்கிய கவனம் செலுத்துகிறது.

சர்வதேச அணுசக்தி முகமையின் கூற்றுப்படி (IAEA), இரானின் அணுசக்தி மையத்தில் உள்ள நடான்ஸ் நிலையம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது.

மற்றொரு தளமான ஃபோர்டோ, ஒரு மலையின் ஆழத்தில் அமைந்துள்ளது. அந்த நிலத்தடி அணுசக்தி நிலையத்தை அடைவதற்கு, அமெரிக்காவிடம் மட்டுமே உள்ள சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் தேவைப்படும்.

ஒருவேளை ஃபோர்டோ மீது குண்டுவீச்சு நடந்தால், அதனால் ஏற்படும் அபாயங்கள் என்னவாக இருக்கும்?

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் “மிகவும் கவலைக்குரியவை” என்று சர்வதேச அணுசக்தி முகமை விவரித்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

திங்கள் கிழமையன்று, அதன் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, ராணுவ விரிவாக்கம் “மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளுடன் கதிரியக்க வெளியீட்டிற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது” என்று கூறினார்.

யுரேனியத்தின் ஒரு குறிப்பிட்ட வகையை (ஐசோடோப்பை) உருவாக்கிச் சேமிக்க, செறிவூட்டல் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சர்ரே பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டன் தேசிய இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பேடி ரீகனின் கூற்றுப்படி, யுரேனியத்தை நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கும்போது, அது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவை,

பெரும்பகுதியாக, 99.3 சதவிகிதம் யுரேனியம்-238, அதோடு, 0.7% – அதாவது சுமார் 150 அணுக்களில் ஒரு அணு யுரேனியம்-235″அணு உலை வேலை செய்யத் தேவையானது இதுதான்” என்று விளக்குகிறார் பேராசிரியர் ரீகன்.

ஆற்றல் வெடிப்பு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானில் உள்ள முழுமையடையாத அராக் கனநீர் உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய காட்சிகளை இரானிய அரசு ஊடகம் வெளியிட்டதுஅணுசக்தி செறிவூட்டல் செயல்முறை, அடிப்படையில் யுரேனியம்-235 அளவை அதிகரிப்பதைக் குறிக்கிறது. யுரேனியத்தை அதன் வாயு வடிவத்தில் எடுத்து மைய விலக்குகள் (centrifuges) எனப்படும் இயந்திரங்களில் சுழற்றுவதன் மூலம் இந்தச் செயல்முறை நடைபெறுவதாக விளக்கினார் பேராசிரியர் ரீகன்.

மேலும் யுரேனியம்-238, தேவையான யுரேனியம்-235ஐ விட கனமாக இருப்பதால், அவை சுழலும்போது இரண்டும் பிரிந்து விடுகின்றன. செறிவூட்டலை அதிகரிக்க இந்தச் செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.

ஆற்றலை வெளியிடும் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு வினையை உருவாக்க அணுமின் நிலையங்களுக்குப் பொதுவாக இந்தச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் சுமார் 3-5% தேவைப்படுகிறது. ஆனால் அணு ஆயுதம் தயாரிப்பதே நோக்கமாக இருக்கும்போது, யுரேனியம்-235 சுமார் 90% தேவைப்படும்.

அடிப்படையில், யுரேனியம் எவ்வளவு செறிவூட்டப்படுகிறதோ, அந்த அணுக்கள் அனைத்தும் பிளவுபடும்போது ஆற்றல் வெடிப்பும் அதிகமாக இருக்கும்.

இரானின் யுரேனியம் சுமார் 60% செறிவூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. அதாவது, அணு ஆயுதம் தயாரிக்கப் போதுமான அளவு செறிவூட்டும் பாதையில் அது முன்னேறிக் கொண்டிருக்கிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆனால், முறையாகச் சேமித்து வைக்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மீது ராக்கெட்டை ஏவுவது, ஃபுகுஷிமா அல்லது செர்னோபில் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட பேரழிவுகளைப் போன்ற “அணுசக்தி விபத்தை” ஏற்படுத்தாது.

“அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம், செறிவூட்டப்படாத யுரேனியத்தைவிட மூன்று மடங்கு அதிக கதிரியக்கத் தன்மை கொண்டது. ஆனால், மொத்த அளவில் பார்த்தால், இரண்டுமே அடர்த்தியான கதிரியக்கத் தன்மை கொண்டவை அல்ல. இதனால் பெரியளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் அபாயமில்லை,” என்று செர்னோபில் பேரழிவின் பின்விளைவுகளை ஆய்வு செய்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜிம் ஸ்மித் விளக்குகிறார்.

“யுரேனியம், ஓர் அணு உலை அல்லது வெடிகுண்டில் பயன்படுத்தப்படும்போது பிளவுபடும். இதனால் கதிரியக்க சீசியம், ஸ்ட்ரோன்டியம், அயோடின் போன்ற பிளவுப் பொருட்கள் உருவாகின்றன. இந்தப் பொருட்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் முக்கியக் காரணிகள். அதனால், இவற்றைப் பற்றியே நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம்,” என்கிறார் அவர்.

ஆனால் செறிவூட்டல் தளங்களில் அணுசக்தி எதிர்வினை எதுவும் நடைபெறுவதில்லை. அதனால் ஒரு வெடிகுண்டு வெடித்தாலும் அது எந்த எதிர்வினையையும் தூண்டாது. எனவே, அந்த ஆபத்தான கதிரியக்க “பிளவுப் பொருட்கள்” இருக்காது என்று அவர் கூறுகிறார். ஆனால், வெடிப்பு ஏற்படும்போது, யுரேனியம் அந்த இடத்திற்குள் பரவிச் சிதறக்கூடும்.

அருகில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் டெஹ்ரானில் இருந்து வெளியேறி வருகின்றனர்நடான்ஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு, ஐ.ஏ.இ.ஏ அந்த இடத்தில் கதிரியக்க மாசுபாட்டைக் கண்டுபிடித்தது. ஆனால் வெளியே உள்ள கதிரியக்கத்தின் அளவுகள் மாறாமல் சாதாரண மட்டங்களில் இருப்பதாக ஐ.ஏ.இ.ஏ குறிப்பிட்டது.

“யுரேனியத்தின் கதிர்வீச்சு உண்மையில் அதிக தூரம் பயணிக்காது” என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் கனிமவியல் மற்றும் கதிரியக்க கழிவு மேலாண்மைத் துறையின் தலைவர் பேராசிரியர் கிளேர் கார்க்ஹில்.

ஆனால் அந்த நிலையத்திற்கு அருகில் இருப்பவர்களுக்கு, உடல்நல அபாயங்கள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். “மனித உடலுக்கு ஏற்படும் நச்சுத்தன்மையைப் பொறுத்தவரை, நீங்கள் நிச்சயமாக யுரேனியம் துகள்களைச் சுவாசிப்பதோ, உட்கொள்வதோ நல்லதல்ல,” என்று அவர் கூறினார்.

“ஏனென்றால் யுரேனியம் துகள்கள் நுரையீரல் அல்லது வயிற்றுக்குள் உள்ள செல்களில் தங்கி, மெதுவாக, கதிரியக்கத்தால் சிதைத்து, சேதத்தை ஏற்படுத்தும்.”

கதிரியக்கத் தன்மையுடன் ஏற்படும் ரசாயன வெளிப்பாடும் அருகில் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்கலாம்.

“ஏதேனும் விபத்து ஏற்பட்டு, மையவிலக்குகளில் (centrifuges) அடக்கப்பட்டிருந்த யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் (uranium hexafluoride) வாயு வெளியேறினால், அது மிக மோசமான ஒரு ரசாயன விபத்தாக மாறும்,” என பாங்கூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அணுப் பொருள் வல்லுநரான பேராசிரியர் சைமன் மிடில்பர்க் தெரிவித்தார்.

“இந்த யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் தொடர்புகொண்டால், அது மிகவும் அரிக்கும் தன்மையுடையதாகவும், ஆபத்தானதாகவும் மாறும். ஏனெனில் இது மிக வலிமையான ஓர் அமிலத்தை உருவாக்கக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆனால் அது அந்த உள்ளூர் பகுதிக்கு அப்பால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை.”

தங்கள் அவசர மையம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாகவும், இரானின் அணுசக்தி நிலையங்களின் நிலையும், அதன் தளங்களில் உள்ள கதிர்வீச்சு அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு