கேரளாவில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களின் உரிமை மறுக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டின் முழு பின்னணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்35 நிமிடங்களுக்கு முன்னர்

கேரளாவில் தமிழ் வழிக்கல்வியில் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் தமிழில் வினாத்தாள் வழங்கப்படாமல் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் வழங்கப்பட்டதால், தமிழ் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவில் சரிந்துள்ளது.

இது தமிழ் வழிக்கல்வியை முடக்குவதற்கான முயற்சி என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று கேரள ஆளுங்கட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மொழி சிறுபான்மையினரின் நலனுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு விஷயங்களையும் அரசு பரிசீலித்து வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம் போன்ற சில மாவட்டங்களில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்காக அந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

அதேபோல கேரளாவை ஒட்டி தமிழகப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி போன்ற சில மாவட்டங்களில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களின் குழந்தைகளுக்காக மலையாள வழிக் கல்வி முறையும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’தமிழ் ஆசிரியர்கள் இல்லை, தமிழ் வழி புத்தகங்களும் இல்லை’

இதற்காக பிரத்யேக ஆசிரியர்களும் இரு மாநிலங்களிலும் நியமிக்கப்படுகின்றனர்; அந்தந்த மொழிகளில் பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கேரளாவில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படிப்பதற்குத் தேவையான புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் போதிப்பதற்கான ஆசிரியர்களும் போதிய அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ் வழியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, “அதற்குரிய புத்தகம் வழங்கப்படுவதில்லை, போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை, இதன் உச்சமாக சமீபத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழில் வினாத்தாள் வழங்கப்படவில்லை” என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதற்கேற்ப, மாநில எல்லையிலுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த ஏராளமான மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

உதாரணமாக, பாலக்காடு மாவட்டம் முதலமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதிய 13 மாணவர்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அனைத்து தமிழ் மாணவர்களும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல், கல்லுாரியில் சேரும் வாய்ப்பை தற்காலிகமாக இழந்துள்ளனர்.

இந்தப் பள்ளியில் கல்வி ஆண்டின் துவக்கத்தில் 22 பேர் தமிழ் வழியில் பயின்றதாகவும், இந்தப் பிரச்னைக்கு பயந்தே பலர் அருகிலுள்ள வெவ்வேறு பள்ளிகளில் வேறு மொழி வழிக்கல்வியில் சேர்ந்துவிட்டதாகவும் அந்தப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுபான்மையினரின் நலனுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு விஷயங்களையும் அரசு பரிசீலித்து வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய முதலமடை பள்ளி பிளஸ் 2 மாணவர் ஹரிஹரன், ”எங்களுக்கு ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில்தான் வினாத்தாள் தரப்பட்டது. நாங்கள் படித்தது தமிழ்வழியில் என்பதால், எங்களால் வினாக்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

வேறு எந்தவிதமான மொழிபெயர்ப்பு உதவியும் கிடைக்கவில்லை. வேற்று மொழியில் தரப்பட்ட கேள்விகளுக்கு நாங்கள் தமிழில் பதில் எழுதினோம். அதனால் மற்ற பாடங்கள் அனைத்திலும் நாங்கள் தேர்ச்சி பெற முடியவில்லை” என்றார்.

இதே கருத்தை வேறு சில மாணவர்களும் பிபிசி தமிழிடம் பகிர்ந்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் தங்களுக்கு தமிழில் வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும், அதனால் நல்ல மதிப்பெண் பெற முடிந்ததாகவும் தெரிவித்தனர்.

சமீபகாலமாக தமிழ் வழிக்கல்வியில் படிப்பவர்களுக்கு, ஆங்கிலம் அல்லது மலையாள மொழிகளிலேயே வகுப்புகள் எடுக்கப்படுவதாகவும், அதைப் புரிந்து கொண்டு, தாங்கள் தமிழில் தேர்வெழுதும் சூழல் இருக்கும் நிலையில், தற்போது வினாத்தாளும் தமிழில் இல்லாததால் தேர்ச்சி பெற முடியவில்லை என்றும் கூறினர்.

தமிழில் தேர்வெழுத சட்டப் போராட்டம்

கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்னைகளில் இதுவும் ஒன்று என்கிறார் கேரள தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பேச்சிமுத்து. இவர் கேரளா வாழ் தமிழர்களுக்கான சாதிச் சான்றிதழ், மொழி சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, தமிழ் வழிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக வழக்குகளைத் தொடுத்து, அவற்றில் சில வழக்குகளில் வெற்றியும் கண்டுள்ளார். இவர் கேரள அரசின் மொழி சிறுபான்மையினர் நலனுக்கான மாநிலக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார்.

வினாத்தாள் பிரச்னை பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய பேச்சிமுத்து, ”ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வில் தமிழில் வினாத்தாள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அடுத்த ஆண்டில் தருவதாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர். இந்த ஆண்டில் உறுதியாகக் கிடைக்குமென்று நம்பியிருந்த நிலையில், இப்போதும் வழங்காததால் ஏராளமான தமிழ் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்” என்றார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழில் எழுதும் வாய்ப்பே மறுக்கப்பட்டு வந்த நிலையில், கேரள தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்தான், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தமிழில் தேர்வெழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது என்றும் பிபிசி தமிழிடம் பேச்சிமுத்து குறிப்பிட்டார். இந்தச் சூழ்நிலையிலேயே, இந்த வேற்றுமொழி வினாத்தாள் பிரச்னை எழுந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வெழுதிய 2,000க்கும் அதிகமான தமிழ் மாணவர்களில் 70–80 சதவிகித மாணவர்கள், தமிழில் வினாத்தாள் கிடைக்காததால் தேர்ச்சி பெறும் வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறுகிறார் அவர்.

ஆனால், கேரளாவில் தமிழ் வழிக்கல்வியில் பிளஸ் 2 தேர்வெழுதி, தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

”பத்தாம் வகுப்பு வரை இங்கே பிரச்னையில்லை. ஆனால் பிளஸ் 1 வந்துவிட்டால் தமிழ் வழிக்கல்வியில் படித்தாலும் அவர்களுக்கு தமிழில் வகுப்புகள் எடுக்கப் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. தமிழ் வழியில் படிக்க விரும்பும் மாணவர்களிடம், ‘தமிழில் படித்தால் வேலை கிடைக்காது’ என்று மிரட்டும் பரப்புரையும் சமீபகாலமாக நடந்து வருகிறது. இதனால் தமிழ் மாணவர்கள் பலர், மலையாள வழிக்கல்விக்கு மாறிவிட்டனர்” என்று கேரளாவில் உள்ள தமிழ் மாணவர்களுக்கான பிரச்னைகளை விளக்கினார் பேச்சிமுத்து.

நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வின்போது, தமிழில் வினாத்தாள் கொடுக்காதது பற்றி, கேரள தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலருக்கும் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதேபோன்று, கேரளாவில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு, கேரள மொழிச் சிறுபான்மை தமிழ் ஆசிரியர் சங்கமும் கேரள அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய இந்த அமைப்பின் மாநில துணைத் தலைவர் பரமேஸ்வரன், ”பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்ப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டாலும் வகுப்புகள் எடுப்பதற்கு தமிழ் தெரிந்த ஆசிரியர்கள் இருப்பதில்லை. அதனால் அவர்கள் ஆங்கிலம் அல்லது மலையாளத்தில் நடத்தும் பாடங்களை, தமிழ் மாணவர்கள் தங்களுக்குப் புரிந்த வரைக்கும் படித்து, அதை வைத்தே தமிழில் தேர்வு எழுத வேண்டியுள்ளது” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ”அவர்கள் தமிழில் எழுதும் விடைத்தாள்களைத் திருத்துவதற்கும் தமிழ் தெரிந்த ஆசிரியர்கள் இல்லை. அதனால் அவர்கள் தமிழ் விடைத்தாள்களை எப்படித் திருத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை.

அதுவே தமிழ் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரிவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதுபற்றி அமைப்பு சார்பாகப் பலமுறை அரசிடம் மனு கொடுத்துவிட்டோம். எப்போது கேட்டாலும் நிதியைக் காரணம் காட்டியே அனைத்தும் மறுக்கப்படுகிறது” என்றார்.

ஆங்கிலத்தில் படிப்பதற்கும் சிரமம்

இதேபோன்று மேலும் சில தமிழ் வழிக்கல்வி ஆசிரியர்களிடம் பிபிசி தமிழ் பேசியபோது, தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நேரும் பலவிதமான பாரபட்சங்களையும் பட்டியலிட்டனர்.

உதாரணமாக, ஒரு பள்ளியில் மலையாள வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் இரு பிரிவுகள் (Division) இருந்தால் அதில் ஒன்றை மலையாளப் பிரிவாகவும், மற்றொன்றை ஆங்கிலப் பிரிவாகவும் வைத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த மாணவர்கள் எந்தப் பிரிவை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியும்.

ஆனால், அதே பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இரு பிரிவுகள் இருந்தாலும், இரண்டுமே தமிழ் வழிக்கல்வியாக மட்டுமே நடத்த வேண்டுமென்றும் அரசு உத்தரவிட்டுள்ளதாக விளக்குகின்றனர். இதனால் சில பாடங்களை ஆங்கில வழியில் கற்கத் தயாராக இருந்தாலும் அதற்கு வழியில்லை என்கின்றனர்.

”இந்தக் கோரிக்கைளை கேரள அரசிடம் மட்டுமின்றி, மொழிச் சிறுபான்மையினர் நலன்களை ஆய்வு செய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான நடுவட்டம் கோபாலகிருஷ்ணனிடமும் மனுக்களாகக் கொடுத்தோம். அந்தக் குழுவும் இவை உள்ளிட்ட பல விஷயங்களையும் அரசுக்குப் பரிந்துரை செய்துவிட்டது. ஆனால் எதையுமே நடைமுறைப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” என்கிறார் கேரள மொழி சிறுபான்மை தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பரமேஸ்வரன்.

மத சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படுவது போல, மொழி சிறுபான்மையினருக்கும் 5 சதவிகித இட ஒதுக்கீடு வாங்குவதற்கு சட்டப் போராட்டம் நடத்தியதை விளக்கும் கேரள தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பேச்சிமுத்து, அதனால் தமிழர்களுக்கு கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவிகிதம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார். ஆனால், கல்லுாரிக்கே போகாத வகையில் மாணவர்களைப் பல வழிகளில் முடக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

படக்குறிப்பு, கல்லுாரிக்கே போகாத வகையில் மாணவர்களைப் பல வழிகளில் முடக்கும் முயற்சி இது எனக் குற்றம் சாட்டுகிறார் பேச்சிமுத்து தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, தமிழ் வினாத்தாள் தராததால் தேர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, கேரள அரசின் கவனத்திற்கு யாரும் கொண்டு போகவில்லை என்பதும், கொண்டு செல்லப்பட்டால் தீர்வு காணப்படும் என்பதும் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தரப்பில் தரும் விளக்கமாகவுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டிலேயே இதுபற்றி கேரள அரசின் பொதுக் கல்வித் துறைக்குக் கொண்டு சென்றதை கேரளா தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தமிழ் வழிக் கல்வி ஆசிரியர்களுக்கான அமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் விரிவாக விளக்குகின்றனர்.

மேலே உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அதை நடைமுறைப்படுத்த கீழே இருக்கும் அதிகாரிகள் விரும்புவதில்லை என்கிறார் பேச்சிமுத்து. பல்வேறு அமைச்சர்களிடம் இதுபற்றிப் பலமுறை பேசியும், எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்கின்றனர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.

இதுபற்றிப் பெயர் கூற விரும்பாத கேரள அரசுப் பள்ளி தமிழ் வழிக்கல்வி ஆசிரியர், ”தமிழ் மொழியில் பிளஸ் 2 வினாத்தாள் கொடுப்பதில் என்ன பிரச்னை என்று கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், பிளஸ் 2 வினாத்தாளை மொழி மாற்றம் செய்யும்போது, ரகசியம் கசிவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர். அதோடு, நிதிச்சுமையையும் காரணம் காட்டுகின்றனர். ஆனால் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை முற்றிலும் குறைப்பதே அரசின் மறைமுக நோக்கமாகவுள்ளது” என்றார்.

கேரளாவில் தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு குறித்து கருத்து கேட்பதற்காக கேரள பொதுக்கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டியை பிபிசி தமிழ் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் அவரிடம் பதில் பெற முடியவில்லை.

மறுபுறம், இதுபற்றி சட்டமன்றத்தில் கேரள முதலமைச்சர் அளித்துள்ள விளக்கமே இதற்கான பதில் என்கின்றனர் கேரள ஆளும்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்.

படக்குறிப்பு, இந்த ஆண்டில் தமிழ்வழிக் கல்வி பயின்ற பிளஸ் 2 மாணவர்கள் இவ்வளவு பேர் தேர்ச்சி பெறாதது பற்றி என் கவனத்துக்கு வரவில்லை என்கிறார் வாழூர் சோமன்தமிழ் அமைப்புகளின் கூட்டு முயற்சியால், எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வாழூர் சோமன், தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ராஜா ஆகிய இருவரும், இந்த விவகாரத்தை கேரள சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளனர். இருவரிடமும் பிபிசி தமிழ் பேசியபோது, இருவரும் அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்னை பற்றி தான் சட்டமன்றத்தில் பேசியதும், மொழி சிறுபான்மையினர் நலனுக்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை கேரள அரசு ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருப்பதாக வாழூர் சோமன் குறிப்பிட்டார்.

அதில் இந்தப் பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், “இந்த ஆண்டில் தமிழ் வழியில் கல்வி பயின்ற பிளஸ் 2 மாணவர்கள் இவ்வளவு பேர் தேர்ச்சி பெறாதது பற்றி என் கவனத்துக்கு வரவில்லை. விவரங்களைக் கொடுத்தால் நான் முதலமைச்சரிடம் மீண்டும் வலியுறுத்துவேன்” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு