நுவரெலியா மாவட்ட கொட்டகலை பிரதே சபையின்  தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ராஜமணி பிரசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப -தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜோசப் யாகுள மேரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில்  இன்று (17.06.25 ) நடைபெற்ற கொட்டகலை பிரதேச சபையின் முதற்கட்ட  அமர்வில் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம்  தலைவர்,  உப தலைவர் தெரிவு இடம்பெற்றது.

சபை அமர்வில் 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில்  ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்  ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கோரினர். எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பை கோரினர்.  அதிக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.

ஆணையாளரின் அறிவிப்புக்கு  எதிர்ப்பு  தெரிவித்து   ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்  நால்வர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது  வெளிநடப்பு செய்தனர்.

12 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்ட போதும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பினர் ஒருவர் மற்றும்  ஜனநாயக தேசிய முன்னணி உறுப்பினர்கள் ஒருவருமாக இருவர்    வாக்களிக்காது நடுநிலை வகித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.

இதன் படி 10 வாக்குகளின் மூலம் தலைவர், உப- தலைவர் தெரிவு செய்யப்பட்டனர்.