இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவரான 86 வயதுடைய  அயத்துல்லா அலி கொமெனி  குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 13 ஆம் திகதி ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் 4 அணு சக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. அந்த நாட்டின் 14 அணு சக்தி விஞ்ஞானிகள், 3 இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. நான்காவது நாளாக நேற்றும் போர் நீடித்தது.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று (16.06.25) ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உளவுத் துறை தலைவர் முகமது கசாமி நேற்று கொல்லப்பட்டார். தெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகம், வெளியுறவுத் துறை அலுவலகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் இரு அலுவலகங்களும் தரைமட்டமாகின.

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி, தலைநகர் தெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் உள்ள பாதாள அறையில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து உள்ளார் என இஸ்ரேல் இராணுவ தரப்புகள் கூறுகின்றன.

மேலும் கடந்த 13 ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாகவும்,  அன்றைய தினமே அயத்துல்லா அலி கொமேனி மீதும் தாக்குதல் நடத்தியிருக்க முடியும். எனினும் தாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதாகவும் இஸ்ரேல் கூறுகறது.

ஈரானின் அணு ஆயுத திட்டத்தை அவர் முழுமையாக கைவிட வேண்டும். இல்லையெனில் அணு ஆயுத திட்டத்துக்கான கட்டமைப்புகளை இஸ்ரேல் முழுமையாக அழிக்கும். அயத்துல்லா அலி கொமேனி பாதாள அறையில் பதுங்கியிருந்தாலும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்று  தெரிவித்துள்ளன.