பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் – ஐசிசி புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 17 ஜூன் 2025, 03:51 GMT

புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்

சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகளையும், ஏற்கெனவே இருக்கும் விதிகளையும் காலத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றி, இன்னும் உயிர்ப்புடன் கிரிக்கெட்டை வைத்திருக்கிறது.

ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டி விதிகளில் மாற்றம் செய்வது, புதிய விதிகளைப் புகுத்துவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரிக்கெட் விளையாட்டின் அம்சங்களை மறுஆய்வு செய்து, விமர்சனங்களுக்கு ஏற்ப விதிகளில் மாற்றத்தையும், புதிய விதிகளையும் ஐசிசி அவ்வப்போது அறிவிக்கும். இது உலகக் கோப்பைத் தொடக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கியத் தொடர்களுக்கு முன்பாக ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில், ஏற்கெனவே இருக்கும் இரு விதிகளில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்து ஒப்புதல் அளித்துள்ளது.

ஐசிசி அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜூன் 17ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஜூலை 2ம் தேதியும், டி20 போட்டிகளில் ஜூலை 10ம் தேதியும் சர்வதேச அளவில் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய விதிகள் என்ன? அவை யாருக்கு சாதகமாக அமையும்?

ஐசிசி கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியிலும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கன்கசனில் (தலையில் அடிபடும் வீரர்) வெளியேறும் வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதியிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஒருநாள் போட்டியில் இரு பந்துகளை பயன்படுத்துவதில் மாற்றம்

தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு இரு பந்துகளைப் பயன்படுத்துகிறது. ஒரு முனையிலிருந்து வீசுவதற்கு ஒரு புதிய பந்தும், மறுமுனையில் இருந்து வீசும்போது ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தலா 25 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து, பந்துவீசும் அணியால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, இன்னிங்ஸ் தொடக்கம் முதல் 34 ஓவர்களுக்குள் இரு புதிய பந்துகளையும் பந்துவீசும் அணி பயன்படுத்த வேண்டும். அதாவது 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும், அடுத்த 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும் பயன்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இரு பந்துகளில் இருந்து ஏதாவது ஒரு பந்தையே கடைசி 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமநிலையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்னாகும்?

மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகவோ அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டால், பந்துவீசும் அணி ஒரு புதிய பந்து மட்டுமே பயன்படுத்தி பந்துவீச வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமாக 2 பந்துகள் பயன்படுத்தும் விதி இதற்குப் பொருந்தாது.

ஐசிசி கன்கசன் விதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் என்ன?

கன்கசன் (தலையில் அடிபடும் வீரர்) முறையில் ஒரு பேட்டர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக எந்த மாற்று வீரரைக் கொண்டுவருவது குறித்து ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, போட்டி தொடங்கும் முன்பே இரு அணிகளும் கன்கசனுக்கான மாற்று வீரர் குறித்த பட்டியலை போட்டி நடுவரிடம் வழங்க வேண்டும். அந்த 5 வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் இருக்குமாறு வீரர்கள் பெயரை வழங்க வேண்டும்.

கன்கசனில் எந்த மாதிரியான வீரர் வெளியேறுகிறாரோ, அதற்கு ஏற்றபடியே மாற்று வீரரை களமிறக்க வேண்டும். ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு தலையில் அடிபட்டு கன்கசனில் வெளியேறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் வர வேண்டும். ஒரு பேட்டர் தலையில் அடிபட்டு கன்கசனில் சென்றால் அவருக்குப் பதிலாக பேட்டர்தான் வர வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது கன்கசன் விதியில் திருத்தம் செய்ய என்ன காரணம்?

கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி செய்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுதான் காரணம். கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தனர்.

அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். கன்கசன் மாற்று வீரருக்கு பேட்டிங் ஆல்ரவுண்டருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேர்க்க போட்டி நடுவர் ஒப்புதல் அளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, கன்கசனில் மாற்று வீரராகக் களமிறங்குவோருக்கு குறிப்பிட்ட ரோலில் களமிறங்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டுவர திட்டமிட்டது.

அதாவது, பந்துவீச்சாளர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம், விக்கெட் கீப்பர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக விக்கெட் கீப்பரை விளையாட அனுமதிக்கலாம் என்று விதிகளைக் கொண்டுவந்துள்ளது.

பவுண்டரி எல்லையில் கேட்ச் விதிகளில் மாற்றம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் “பன்னி ஹாப்” (bunny hop) முறைக்கு, அதாவது பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தால் அதை வானில் தூக்கிப் போட்டோ அல்லது தட்டிவிட்டோ பீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிக்கும் முறைக்கு எம்சிசி (மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்) தடை விதித்துள்ளது.

ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக சில கேட்சுகள் அமையக்கூடும். அதில் பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்து அல்லது கேட்ச் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு பீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும்போது பந்தை வானில் தூக்கி வீசியோ அல்லது மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசியோ கேட்ச் பிடிக்கிறார்கள். இந்த கேட்சில் பல்வேறு சந்தேகங்களும், பீல்டிங்கில் இருக்கும் நேர்மைத் தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. இதையடுத்து, முற்றிலுமாக பன்னிஹாப் கேட்சுக்கு எம்சிசி தடை விதித்துள்ளது.

இதன்படி, ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே செல்லும் பந்தை கேட்ச் பிடிக்க பந்தை ஒருமுறை மட்டுமே தட்டி பிடிக்க வேண்டும், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை பிடிக்க முற்பட்டு, வானில் பலமுறை தட்டிவிட்டு மீண்டும் பவுண்டரி எல்லைக்குள் பீல்டர் வந்து பிடிக்கும் முறை இனி செல்லாது. அவ்வாறு 2வது முறையாக பந்தை கையால் தட்டிவிட்டு பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது.

பந்தை தட்டிவிட்டு கேட்ச் பிடிக்கும் முன்பாக, பீல்டர் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும், பந்தை பிடித்த பின்பும் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். பந்தை தொட்ட பின் பீல்டர் பவுண்டரி எல்லைக்கு அப்பால் சென்றாலோ அல்லது பவுண்டரி எல்லையைக் கடந்து பந்தை பலமுறை அந்தரத்தில் தட்டிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் வந்தபின் பீல்டர் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. அது சிக்ஸராக அல்லது பவுண்டரியாக கருதப்படும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐபிஎல் ஆட்டம் ஒன்றில் சிஎஸ்கே வீரர் பிரேவிஸ் அபாரமாக கேட்ச் பிடித்த காட்சிமாற்றம் கொண்டுவர என்ன காரணம்?

ஆஸ்திரேலியாவில் 2023 சீசன் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி சிக்ஸர் இடையிலான போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச்-தான் விதியில் திருத்தம் செய்ய காரணமாக அமைந்தது. சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஜோர்டான் சில்க் லாங் ஆன்திசையில் அடித்த ஷாட்டை பிரிஸ்பேன் வீரர் நீசர் கேட்ச் பிடித்தார்.

நீசர் கேட்ச் பிடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் பறந்துகேட்ச் பிடித்தார், கேட்ச் பிடித்த அடுத்த நொடியே பந்தை வானில் தூக்கி வீசி பவுண்டரி எல்லைக்குள் நீசர் வந்து, மீண்டும் அந்தரத்தில் குதித்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது அவரின் இரு கால்களும் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் இருந்ததே தவிர தரையில் படவில்லை, கேட்ச் பிடித்த பிறகு அவர் தனது காலை பவுண்டரி எல்லைக்குள் வைத்தார் என்பதால் இது கேட்சாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் நீசர் கேட்ச் பிடித்தது பெரிய சர்ச்சையானது, பன்னி ஹாப் முறையில் பிடிக்கும் கேட்சுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ரிலே கேட்சில் வந்துள்ள மாற்றம் என்ன?

பழைய விதியின்படி, ஒரு பீல்டர் கேட்ச் பிடித்த தருணத்தில் அவர் பந்துடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்ல முயலும்போது, பந்தை மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசும்போது அந்த பீல்டரும் பவுண்டரி எல்லைக்குள் இருந்தவாறே அந்த பந்தை பிடித்தால் அது கேட்சாக கருதப்படும்

ஆனால், புதிய விதியின்படி முதல் பீல்டர் அல்லது பந்தை இரண்டாவதாக பிடிக்கும் சகவீரர் பந்தை கேட்ச் பிடித்து முடிக்கும்போது கண்டிப்பாக பீல்டிங் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவேளை பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பே, கேட்ச் பிடிக்கும் வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்து, அதை தூக்கி வீசி மற்றொரு வீரருக்கு வீசி எறிந்து அவரும் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது, அது பவுண்டரி அல்லது சிக்ஸராகவே கருதப்படும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு