கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின்  முதலாவது  கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது.

அதற்கமைய, நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு அமைய பிரதி மேயராக ஹேமந்த குமார தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாநகர சபை உள்ளிட்ட இரண்டு பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி இன்று (16.06.25) மற்றுமொரு மாநகர சபை மற்றும் இரண்டு பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

அதன்படி, இரத்தினபுரி மாநகர சபையின் அதிகாரத்தையே இவ்வாறு தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இரத்தினபுரி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் கே.ஏ.டி.ஆர்.ஐ. கட்டுகம்பல 14 வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி மேயர் வேட்பாளர் 12 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

அதேபோல், தம்புள்ளை மற்றும் கல்பிட்டி பிரதேச சபைகளின் அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசமானது.

தம்புள்ளை பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் கட்சியின் டபிள்யூ.எம். திலகரத்ன இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர் 15 வாக்குகளைப் பெற்றார்.

எதிர்க்கட்சியில் இருந்து இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர், அதில் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் 6 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் 5 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

கல்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ் இன்று நியமிக்கப்பட்டார்.

இன்று காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் 16 வாக்குகளைப் பெற்றதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மொஹமட் ஆசிக் 15 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்.