முன்னாள் அமைச்சர் தயா கமகேவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை பொது ஏலத்தில் விட கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயா குரூப் லிமிடெட் , தயா எப்பரல் எக்ஸ்போர்ட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களே இவ்வாறு ஏலம் விடப்படவுள்ளது

இது தொடர்பாக நீதிமன்றப் பதிவாளர் மற்றும் பிரதி நிதித்துறை அதிகாரி வெளியிட்ட அறிவிப்புக்கமைவாக இந்த ஏலம் எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது. பீப்பிள்ஸ் லீசிங் ஃபைனான்ஸ் பி.எல்.சி நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், சுமார் 104.2 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்த நிலுவைத் தொகையான 108.3 மில்லியன் ரூபாவில், இதுவரை 4.08 மில்லியன் ரூபா மட்டுமே பிரதிவாதிகளால் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்தான வழக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கமைய, மீதமுள்ள நிலுவைத் தொகையை வசூலிக்க அங்கீகாரம் அளித்ததன் அடிப்படையில் ஏலம் நடத்தப்படவுள்ளது.