உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை முன்னெடுத்த நகர்வுகள் ஒரு சாராரிடம் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கருணா, பிள்ளையான், டக்ளஸ் போன்ற தமிழினத் துரோகிகளோடு பேச்சு என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது. அவ்வாறு பேசினால் பேசுபவர்கள் எம்மோடு இருக்க முடியாதென கொந்தளித்துள்ளார் சுகாஸ் கனகரட்ணம்.விடுதலைப்போரில் 50,000 பேரும் வெடித்துச் சிதறியது இலட்சியத்திற்காகவே அன்றி கதிரைகளுக்காகவல்லவெனவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இதனிடையே சைக்கிள் கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்களை இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாக கஜேந்திரகுமாரின் நெருங்கிய உறவை கொண்ட கொழும்பு மைய காண்டீபன் தெரிவித்துள்ளார்.ஊடக நிகழ்வொன்றில் விரைவில் கொள்கை அளவில் உடன் பாடு ஏட்டப்பட்டால் டக்லஸ் தேவானந்தா உடன் பேசி அவருடன் இணக்கம் ஏற்படுத்த முன்னணி தயார் என முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் பகிரங்க அறிவிப்பினை விடுத்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் ஈபிடிபி சார்பு பிரமுகர் சந்திரகுமார் தரப்புடன் கூட்டை உருவாக்கியுள்ள நிலையில் புதிய அறிவிப்பு சர்ச்கைகளை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே நல்லாட்சி காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட சந்திரகுமார் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் ஊடாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

எனினும் வெட்டொன்று துண்டு இரண்டாக அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் சந்திரகுமாருடன் பகிரங்க கூட்மை உருவாக்கிக்கொண்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தற்போது ஈபிடிபிக்கு அழைப்பு விடுத்துள்ளமை சீற்றத்தை கட்சியின் தீவிர விசுவாசிகளிடம் தோற்றுவித்துள்ளது. 

இந்நிலையில் தற்போது ஒதுங்கியிருக்கும் சுகாஸ் கனகரட்ணத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.