Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ், மேட் முர்ஃபி, ஜோஷுவா சீதம் பதவி, 13 ஜூன் 2025, 03:32 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஜூன் 12-ஆம் தேதி அன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் கோர விமான விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விமானத்தின் எண் AI 171 இந்தியாவின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக்கிற்கு செல்ல வேண்டிய விமானம். இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பதை முறையான விசாரணையின் மூலமே உறுதி செய்ய இயலும். இருப்பினும் விமானம் தரையில் இருந்து புறப்படும் தருணம் விமானப் பயணங்களில் மிகவும் சவாலான ஒன்றாகும்.
போயிங் நிறுவனத்தின் 787-8 ட்ரீம்லைனர் என்ற இந்த ரக விமானம், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வெறும் 1.5 கி.மீ தூரத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்திற்கு காரணம் என்ன என்ன என்பதை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நிபுணர்களுடன் இணைந்து இந்திய விசாரணை அதிகாரிகள் வருகின்ற நாட்களில் ஆய்வு மேற்கொள்வார்கள்.
2011-ஆம் ஆண்டு 787-8 ட்ரீம்லைனர் விமானங்கள் முதன்முறையாக பயன்பாட்டிற்கு வந்தன. இந்த ரக விமானம் விபத்துக்குள்ளாவது இதுவே முதல்முறை. வியாழக்கிழமை நடந்த விமான விபத்தில், பயணித்த 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் பற்றி அறிந்து கொள்ள பிபிசி விமான தொழில்நுட்பத் துறை வல்லுநர்களிடமும் இந்திய விமானிகள் சிலரிடமும் பேசினோம். அவர்கள் அடிக்கடி இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து ட்ரீம்லைனர் விமானங்களில் பயணிப்பவர்கள். சிலர் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, விமானத்தின் இறுதி நொடிகள்! விமானம் உயரே பறப்பதில் பிரச்னை
இந்த பயணிகள் விமானத்தை இயக்கிய விமானிகள், கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் க்ளைவ் குந்தர். இவர்கள் இருவரும் அனுபவம் மிக்க விமானிகள். இருவரும் இணைந்து மொத்தமாக 9000 மணி நேரம் விமானம் இயக்கிய அனுபவத்தைக் கொண்டவர்கள். அதில் சபர்வால் 22 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய தேர்ந்த விமானி ஆவார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
வியாழக்கிழமை மதியம் ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த விமானத்தில் பயணிகள் உள்பட 242 அமர்ந்திருந்தனர். இந்திய நேரப்படி சரியாக 13.39 மணி அளவில் விமானம், ஓடுபாதையில் இருந்து புறப்பட்டது.
விமானம் தரையில் இருந்து மேல் எழும்பிய சில நிமிடங்களிலேயே விமானிகள் ‘மேடே’ அழைப்பை விடுத்தனர் என்று இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டுபாட்டு ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு விமானத்தில் இருந்து எந்த விதமான தொடர்பும் மேற்கொள்ளப்படவில்லை.
‘மேடே’ அழைப்பை விடுக்கக் காரணம் என்ன என்பதில் இன்னும் தெளிவு இல்லை. ஆனால் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒரே ஒரு பயணி, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், விமானம் உயரப் பறக்க முயன்ற போது பெரும் வெடிப்பு சத்தத்தை கேட்டதாகக் கூறினார்.
பிபிசி வெரிஃபை குழுவினரால் உறுதி செய்யப்பட்ட வீடியோவில், குடியிருப்புப் பகுதிக்கு மேலே குறைந்த உயரத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது. இறுதியாக பகிரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் விமானம் 625 அடி உயரத்தை அடைந்திருந்தது. அதன் பின்னர், மேலே எழும்புவதற்கு பதிலாக அதன் உயரம் குறைந்து கொண்டே வந்தது. பெரிய வெடிப்பு ஏற்பட்டு, விண் நோக்கி புகை மண்டலம் எழும்புவதற்கு முன்பு அந்த விமானம், மரங்கள் மற்றும் கட்டடங்களுக்கு நடுவே பறந்து கொண்டிருந்தது.
“இரண்டு என்ஜின்களும் பழுதடைந்திருந்தால் உடனடியாக எதிர்வினையாற்ற நேரம் கிடைத்திருக்காது,” என்று ஒரு விமானி பிபிசியிடம் தெரிவித்தார். பிபிசி வெரிஃபை குழுவால் பார்க்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளின் படி, இந்த விமானம் விண்ணில் வெறும் 30 நொடிகள் மட்டுமே இருந்தது.
மக்கள் அடர்த்தியாக வசித்து வரும் பகுதியில் பறந்து சென்ற அந்த விமானம் மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களை உரசிக் கொண்டு சென்றது. இதனால், நிறைய கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதை அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உறுதி செய்கின்றன.
காணொளிக் குறிப்பு, வெறும் 30 நொடிகளில் பதபதைக்கும் விபத்து நேர்ந்தது எப்படி? 2 என்ஜின்களும் பழுதானதே காரணமா?
மிகக் குறைவான நேரம் மட்டுமே பறந்த விமானத்தின் வீடியோக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு விபத்து நடந்திருக்கக் கூடும் என்பதை கூற இயலாது.
விமானத்தின் கருப்புப் பெட்டியை சோதனையிடுவது, சேதமடைந்த பாகங்களை சோதனை செய்வது போன்ற போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகள் வருகின்ற நாட்களில் நடத்தப்படும். இந்த கறுப்புப் பெட்டி தான் தரவுகள் அனைத்தையும் பதிவு செய்து வைக்கும். ஆனால் தற்போது வரை வெளிவந்துள்ள வீடியோக்களை ஆய்வு செய்யும் போது, விமானத்தால் தரையில் இருந்து மேல் எழும்ப இயலவில்லை. போதுமான உந்துசக்தி இல்லாமல் இருந்ததைக் காட்டுகிறது.
விமானத்தில் மிகவும் அரிதாக ஏற்படும் இரட்டை என்ஜின் பழுது விமான விபத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். பிரதான என்ஜின்கள் செயல் இழந்து போனால், அத்தியாவசிய அமைப்புகளை இயக்கத் தேவையான சக்தியை வழங்குவதற்காக விமானங்களில் ரேம் ஏர் டர்பைன் (RAT) பொருத்தப்பட்டிருக்கும். தற்போது விபத்துக்குள்ளான விமானத்தில் இந்த டர்பைன் பொறுத்தப்பட்டிருந்ததா என்ற கேள்வி இதன் மூலம் எழுகிறது.
இரட்டை என்ஜின் பழுது மிக அரிதாகவே நிகழ்கிறது. 2009-ஆம் ஆண்டு இப்படியான ஒரு நிகழ்வு அரங்கேறியது. ஆனால் நல்வாய்ப்பாக விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு அமெரிக்க விமானமான A320 நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதன் மீது பறவை மோதியதால் அதன் இரண்டு என்ஜின்களும் செயல் இழந்தன. ஆனால் மிகவும் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதனை ‘மிராக்கில் ஆன் தி ஹட்சன்’ என்று கூறுகின்றனர்.
மூத்த விமானி ஒருவர் பிபிசியிடம் பேசிய போது, தரமற்ற எரிபொருள் அல்லது எரிபொருள் அடைத்துக் கொள்ளுதல் போன்றவற்றாலும் இரண்டு என்ஜின்களும் செயல்படாமல் போவதுண்டு என்று தெரிவிக்கிறார். விமானத்தில் என்ஜின்கள் துல்லியமான எரிபொருள் அளவீட்டு அமைப்பை நம்பியுள்ளன. அந்த அமைப்பு சரியாக செயல்படாத பட்சத்தில், என்ஜினில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும். பிறகு என்ஜின் செயல்பாடு நின்று போகும்.
வெறுமனே வீடியோக்களை பார்த்து மட்டுமே என்ஜின்களில் பழுதாகியிருக்கலாம் என்று கூறிவிட இயலாது என்று பிபிசி வெரிஃபை குழுவுக்கு தெரிவிக்கிறார் முன்னாள் விமானி மார்கோ சான்.
மிகமிக அரிதாகவே இத்தகைய இரட்டை என்ஜின் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று சென்னையைச் சேர்ந்த விமான போக்குவரத்து நிபுணரான மோகன் ரங்கநாதன் தெரிவிக்கிறார்.
இந்த விமானத்தின் என்ஜினை உருவாக்கிய ஜி.இ. ஏரோஸ்பேஸ் நிறுவனம், விசாரணைக்கு உதவும் வகையில் தன்னுடைய குழு ஒன்றை அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. போயிங் நிறுவனமும் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பறவைகள் இடையூறு
விபத்திற்கான மற்றொரு சாத்தியமான காரணம் பறவை மோதல் என்று இந்தியாவில் உள்ள சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
விமானத்தின் மீது பறவை மோதும் நிகழ்வு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பறவைகள் என்ஜினில் மோதும் பட்சத்தில் என்ஜின் செயல் இழக்கக் கூடும். கடந்த ஆண்டு தென் கொரியாவின் ஜேஜூ ஏர் விமானத்தின் விபத்து இப்படியான பறவை மோதலினால் ஏற்பட்டது. அந்த விபத்தில் 179 நபர்கள் கொல்லப்பட்டனர்.
ஆமதாபாத் சர்வதேச விமான நிலையம் பறவை இடையூறு அதிகம் ஏற்படும் இடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது என்று அந்த விமான நிலையம் குறித்து நன்றாக அறிந்த நிபுணர்கள் மற்றும் விமானிகள் கூறுகின்றனர்.
இந்த விமான நிலையத்தில் விமானங்களை இயக்கிய 3 இந்திய விமானிகள் கூறியதை உறுதி செய்யும் வகையில் நிபுணர் மோகன் ரங்கநாதனும், “அங்கே பறவைகள் எப்போதும் இருக்கும்,” என்று தெரிவிக்கிறார்.
இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சரகம் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையின் படி, அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் 462 பறவை மோதல்கள் நிகழ்வு குஜராத்தில் நடந்திருந்தன. அவற்றில் பெரும்பாலானவை ஆமதாபாத் விமான நிலையத்தில் நிகழ்ந்திருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் தரவுகள் படி, 2022-23 காலகட்டத்தில் ஆமதாபாத்தில் 38 பறவைகள் மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கு முந்தைய 12 மாதங்களைக் காட்டிலும் இது 35% அதிகரித்திருப்பதை அந்த தரவுகள் சுட்டிக்காட்டுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.
2009-ஆம் ஆண்டு நடந்த நிகழ்வின் போது சீகல் என்ற பறவை 2700 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் மோதியது. நேற்று ஏர் இந்தியா விமானம் பறந்து கொண்டிருந்த உயரத்தைக் காட்டிலும் அது நான்கு மடங்கு அதிகமானது. இப்படியான சூழலை விமானிகள் நேற்று எதிர்கொண்டிருந்தால், விமானத்தை பாதுகாப்பாக இயக்க போதுமான உயரமும் நேரமும் அவர்களிடம் நேற்று இல்லை.
பறவை மோதல்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இரண்டு எனஜின்களையும் பாதித்தால் மட்டுமே அது இத்தகைய பேரிடரை ஏற்படுத்தும் என்று மற்றொரு மூத்த விமானி தெரிவிக்கிறார்.
ஆமதாபாத் விமான விபத்துக் குறித்து மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே இருக்கும் இணைப்பை க்ளிக் செய்யவும்
இறக்கைகளால் பிரச்னையா?
பிபிசி குழுவுடன் பேசிய மூன்று நிபுணர்கள், விமானம் புறப்படும் போது சரியான முறையில் இந்த ஃப்ளாப்கள் முழுமையாக விரிவடையாமல் இருந்திருக்கும் பட்சத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் சில நிபுணர்கள் மற்றும் விமானிகள் இதற்கு மாற்றுக் கருத்தைக் கொண்டுள்ளனர்.
ஃப்ளாப்கள் விமான புறப்பாடு நேரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. குறைந்த வேகத்தில் அதிகமாக மேல் எழும்ப விமானத்திற்கு இவை உதவுகின்றன.
பயணிகள் மற்றும் நீண்ட நேர பயணத்திற்கு தேவையான எரிபொருள் போன்றவற்றை முழுமையாக நிரப்பிக் கொண்டுள்ள விமானம் மற்றும் அதிக வெப்பம் போன்றவை நிகழும் போது இந்த ஃப்ளாப்கள் சரியாக விரிவடையவில்லை என்றால் விமானம் மேலே எழும்ப சிரமப்படும்.
வியாழக்கிழமை அன்று ஆமதாபாத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. அடர்த்தியற்ற காற்றில் விமானம் மேல் எழும்ப அதிகப்படியான ப்ளாஃப் செட்டிங்கும் என்ஜின் உந்து விசையும் தேவை என்று ஒரு விமானி பிபிசியிடம் கூறினார். இத்தகைய சூழலில் சிறிய கவனக்குறைவும் பேரழிவை ஏற்படுத்தும்.
வியாழக்கிழமை மதியம் வெளியான சிசிடிவி காட்சிகளில் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மேலே எழும்ப சிரமப்பட்டு அதன் உயரம் மெதுவாக குறைந்து இறுதியில் வெடித்ததை காட்டுகிறது.
ஆனால் முழுமையாக விரிவடையாத ஃப்ளாப்கள் விமானத்தின் புறப்பாடு தொடர்பான ‘கான்ஃபிகரேஷன் வார்னிங் சிஸ்டத்திற்கு’ எச்சரிக்கை சமிக்ஞையை அளித்திருக்கும். பாதுகாப்பற்ற சூழலுக்கான சமிக்ஞையை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று ஒரு விமானி பிபிசியிடம் பேசும் போது தெரிவித்தார்.
பிபிசி வெரிஃபையிடம் பேசிய முன்னாள் விமானி சான், விமான நிலையத்தில் இருந்து நேற்று வெளியான காட்சிகள், ஃப்ளாப்கள் விரிவடைந்திருப்பதை உறுதி செய்யும் அளவுக்கு தெளிவாக இல்லை என்று தெரிவிக்கிறார். மேலும் இதுபோன்ற தவறு மிகவும் அரிதாகவே நிகழும் என்றார் சான்.
விமான புறப்பாட்டிற்கு முன்பு ஃப்ளாப் செட்களை விமானிகளே உறுதி செய்கின்றனர். இதுமட்டுமின்றி விமானம் புறப்படுவதற்கு முன்பு சில முக்கிய அம்சங்கள் சரியாக இருக்கிறதா என்பது சோதனைக்குட்படுத்தப்படும் என்று சான் தெரிவிக்கிறார்.
“ஃப்ளாப்கள் சரியாக விரிவடையவில்லை என்றால் இது சாத்தியமான மனித தவறால் நடந்த விபத்தாக கருதப்படும்.”
கூடுதல் செய்திகளை வழங்கியவர் ஜேக் ஹார்டோன்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு