அமெரிக்காவின் கடுமையான சிறையிலிருந்து சமையல் கரண்டியின் உதவியுடன் தப்பிய கைதிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறையில் இருந்து தப்பிய மூவர்எழுதியவர், மைல்ஸ் பர்க்பதவி, 18 நிமிடங்களுக்கு முன்னர்

1962 ஜூன் 12 அன்று, மூன்று கைதிகள் அமெரிக்காவின் அல்காட்ராஸ் சிறையிலிருந்து தப்பினர். அதன் பிறகு அவர்களை ஒருபோதும் காணவில்லை. அங்கிருந்து தப்பிச்சென்ற ஃபிராங்க் மோரிஸ் மற்றும் ஆங்லின் சகோதரர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. ஆனால் அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான சிறையிலிருந்து புத்திசாலித்தனமாக அவர்கள் தப்பிய விதமும், உறுதியும் இன்று வரை கவனத்தை ஈர்க்கிறது. சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து பிபிசி அந்த இடத்துக்குச் சென்றது.

மே 1964ல், பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியின் நிருபர் மைக்கேல் சார்ல்டன், “குற்றவாளிகள் உலகில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய பயணம்” என்று அழைக்கப்படும் பயணம் ஒன்றை மேற்கொண்டார். சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவின் ஆக்ரோஷமான நீர்நிலைகளைக் கடந்து, அல்காட்ராஸ் தீவுக்குச் சென்றார்.

“தி ராக்” என்று அழைக்கப்படும் இந்தச் சிறை, அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளை அடைத்து வைத்த இடமாக இருந்துள்ளது. இந்த சிறை, ஒரு அசைக்க முடியாத கோட்டையாகவே கருதப்பட்டது. ஆனால் 1962 ஜூன் 12ஆம் தேதி அதிகாலை, சாத்தியமே இல்லை என்று நம்பப்பட்ட ஒரு விஷயம் நடந்தது. அல்காட்ராஸ் சிறையில் இருந்து, மூன்று கைதிகள் தப்பிச் சென்றனர்.

அல்காட்ராஸ் முதலில் கடற்படையின் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட ஒரு கோட்டையாக இருந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, இந்தத் தீவு தனியாகவும், அதன் பாறைகள் செங்குத்தாகவும், தீவைச் சுற்றி குளிர்ந்த, வேகமான நீரோட்டமும் இருந்ததால், பிடிபட்ட கூட்டமைப்புப் படை வீரர்களை இங்கே சிறைவைக்கப்பட்டனர்.

படக்குறிப்பு, அல்காட்ராஸ் சிறைபின்னர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இது ஒரு ராணுவச் சிறையாக மாற்றப்பட்டது. `1930களில், அமெரிக்காவில் அதிகரித்த ஒருங்கிணைந்த குற்றங்களைச் சமாளிகக் அந்நாடு முயற்சித்தபோது, அமெரிக்க நீதித்துறை இந்தச் சிறையை கைப்பற்றியது. அதன் பிறகு, மத்திய சிறைகளில் இருந்த மிகப் பயங்கரமான குற்றவாளிகள் இங்கு அனுப்பப்பட்டனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இந்தச் சிறையின் புகழ்பெற்ற கைதிகளில், குண்டர் அல் கபோன், மிக்கி கோஹன், ‘மெஷின் கன்’ கெல்லி, மற்றும் கொலைக் குற்றவாளி ராபர்ட் ஸ்ட்ரூட் ஆகியோர் அடங்குவர். ராபர்ட் ஸ்ட்ரூட், பின்னாளில் ‘அல்காட்ராஸின் பறவை மனிதன்” என்று அறியப்பட்டார். “இவர்கள் சாதாரண சிறைகளில் வைத்திருக்க முடியாத அளவுக்கு கொடூரமான, பிரச்னை விளைவிக்கும் மனிதர்கள்,” என்று பிபிசியின் சார்ல்டன் விளக்கினார்.

சார்ல்டன் அங்கு பயணிப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், ஃபிராங்க் லீ மோரிஸ் என்ற கைதி அல்காட்ராஸ் தீவுக்கு கொண்டு வரப்பட்டார். 11 வயதில்குடும்பத்தை இழந்த அவர், 13 வயதில் தனது முதல் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி சிறைகளிலும், சீர்திருத்த மையங்களிலும் கழிந்தது.

மோரிஸ் மிகவும் புத்திசாலி என்று அறியப்பட்டவர். ஆனால் அதே நேரத்தில், அனுபவமிக்க குற்றவாளியும் கூட. போதைப்பொருள் வைத்திருத்திருந்தது முதல், ஆயுதக் கொள்ளை, சிறையிலிருந்து தப்பித்தல் வரை பல குற்றங்களில் அவர் ஈடுபட்டிருந்தார். 1960 ஜனவரியில் லூசியானா மாநில சிறையிலிருந்து தப்பிய பிறகு, மோரிஸ் அல்காட்ராஸுக்கு அனுப்பப்பட்டார்.

அவர் அங்கு வந்தவுடன், எப்படித் தப்பிக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போது அவருடன் சேர்ந்து, வங்கிக் கொள்ளைக்காக தண்டனை பெற்ற ஜான் மற்றும் கிளாரன்ஸ் ஆங்லின் என்ற சகோதரர்கள் மற்றும் ஆலன் வெஸ்ட் என்ற கைதியும் இருந்தனர். ஆலன் வெஸ்ட் 1957 முதல் அங்கு கைதியாக இருந்தார். இவர்கள் முன்பே வேறு சிறைகளில் சந்தித்துக் கொண்டவர்கள். மேலும், சிறையில் அவர்களது செல்கள் அடுத்தடுத்து இருந்ததால், அவர்களால் இரவில் ஒருவரோடு ஒருவர் பேச முடிந்தது.

அல்காட்ராஸ் சிறை மூடப்பட்ட ஒரு வருடம் கழித்து, பிபிசியின் சார்ல்டன் அந்த இடத்திற்குச் சென்றார். சளைக்காத காவலர்கள், கடுமையான வாழ்க்கைச் சூழல், கைதிகள் எதிர்கொண்ட கடும் கடல் காற்று போன்றவற்றால் அந்தச் சிறைக்கு கிடைத்திருந்த பெயரைப் பற்றி அப்போது அவர் நன்கு அறிந்திருந்தார்.

“ஒருபோதும் நிற்காத இடைவிடாத காற்று, சிறைச்சாலை கம்பிகள் வழியே ஒலிக்கிறது. பழைய கோட்டையின் வழித்தடங்களின் மீது கட்டப்பட்ட இந்த இடத்தின் அடித்தளங்கள் பழுதடைந்து இப்போது உடைந்து கொண்டிருக்கின்றன”என்று அவர் கூறினார்.

ஒரு விரிவான திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அல்காட்ராஸ் சிறைமோரிஸ் தலைமையில், நான்கு கைதிகள் சிறையிலிருந்து தப்பிக்க, ஒரு சிக்கலான ஆனால் துணிச்சலான திட்டத்தைத் தயாரிக்கத் தொடங்கினர்.

பல மாதங்களாக, அவர்கள் கழிவறை சிங்க்குகளின் கீழ் காற்று வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி இருந்த சிமெண்டை மெதுவாகத் தோண்டினார்கள்.

அச்சிறைச்சாலையின் உணவுக் கூடத்திலிருந்து எடுத்த உலோக கரண்டிகள், வாக்யூம் கிளீனர் மோட்டாரில் செய்த கருவி, பழைய ரம்பக் கத்திகள் போன்றவற்றைப் பயன்படுத்தி, ஒரு நடைபாதையைத் தோண்டினர். அதனைச் செய்த போது வெளியே சத்தம் கேட்காமல் இருக்க, தினமும் கைதிகள் இசை கேட்கும் நேரத்தில் மோரிஸ் அக்கார்டியன் கருவியை வாசித்தார்.

பின்னர் பெரிய துளை செய்து, அதன் வழியாக ஊர்ந்து சென்று, அவர்களது செல்பிளாக்கின் மேல் காலியாக இருந்த இடத்தில் அவர்கள் ரகசிய பட்டறை அமைத்தனர். சுவரில் ஏற்பட்ட துளைகளை மறைக்க சிறை நூலகத்தில் இருந்த பத்திரிகைகளைப் பயன்படுத்தி போலி கிரில்களையும் செய்தனர்.

அந்த ரகசிய இடத்தில், அவர்கள் திருடிய 50-க்கும் மேற்பட்ட மழைக்கோட்டுகளைப் பயன்படுத்தி 6 x 14 அடி அளவுடைய ரப்பர் படகு (rubber raft) மற்றும் உயிர் காக்கும் ஆடைகளையும் அவர்கள் உருவாக்கினர்.

அதனை ஒன்றாக ஒட்டுவதற்கு, சிறையின் சூடான நீராவி குழாய்களை பயன்படுத்தினர்.

அவர்கள் உருவாக்கிய ரப்பர் படகில் காற்று அடிப்பதற்கு, காற்றின் மூலம் வாசிக்க உதவும் இசைக்கருவியை (concertina) உபயோகித்தனர். மரப்பலகைத் துண்டுகளைக் கொண்டு துடுப்புகளையும் செய்தனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆனால் அவர்கள் தப்பிப்பதற்கான வழிகளை உருவாக்கிக்கொண்டிருந்தபோது, காவலர்கள் இரவில் திடீரென ஆய்வுக்குத் திரும்பினால், அப்போது தாங்கள் இல்லாததை காவலர்கள் கவனித்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஒரு திட்டம் வைத்திருந்தனர்.

தங்களது தலை மாதிரிகளை சோப்பு, பற்பசை மற்றும் கழிப்பறை காகிதத்தால் அவர்கள் உருவாக்கினர். அவற்றை மிகவும் யதார்த்தமாகக் காட்ட, சிறையின் முடிதிருத்தம் செய்யும் கடையில் இருந்து எடுத்துவரப்பட்ட உண்மையான முடிகளை ஒட்டியும், திருடப்பட்ட கலைப் பொருட்களைப் பயன்படுத்தியும் மனித உடலில் உள்ள சதையின் நிறத்தில் அதற்கு வண்ணம் தீட்டினர்.

பிறகு, அந்த தலை மாதிரிகளை தங்கள் படுக்கைகளில் வைத்த அவர்கள், தங்களது உடல் வடிவத்தைப் போலவே துணிகள் மற்றும் துண்டுகளின் மூட்டைகளை போர்வைகளுக்கு அடியில் வைத்துள்ளார்கள்.

அதே நேரத்தில், தப்பிச்செல்ல ஒரு வழியையும் அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். சிறையிலுள்ள நீர்க்குழாய்களைப் படியாக மாற்றி, 30 அடி (9.1 மீட்டர்) உயரம் ஏறினர். அங்கிருந்த காற்றோட்டத்துக்கு உதவும் குழாயைத் (ventilator) திறந்து வைத்தனர். அந்தக் கதவை மூடிக்கொள்வதற்காக, சோப்பிலிருந்து ஒரு போலி நட்டை (bolt) உருவாக்கி, வெளியே பார்ப்பவர்களுக்கு அது சீராகப் பொருந்தி இருப்பது போல காட்டினார்கள்.

இறுதியாக, ஜூன் 11, 1962 அன்று இரவு, அவர்கள் தங்கள் புத்திசாலித்தனமான திட்டத்தை செயல்படுத்தத் தயாராக இருந்தனர். காவலர்களை ஏமாற்ற போலித் தலைகளைப் படுக்கைகளில் விட்டுவிட்டு, மோரிஸும் இரண்டு ஆங்கிலின் சகோதரர்களும் சிறைச் சாலைச் சுவர்களில் உள்ள துளைகள் வழியாக ஊர்ந்து சென்றனர். சரியான நேரத்தில் தனது சிறை அறையிலிருந்து வெளியே வர முடியாததால் வெஸ்டின் தப்பிக்க முடியவில்லை. மற்றவர்கள் அவரை விட்டுவிட்டு சிறைச்சாலை கூரையில் ஏறி, அங்கிருந்து தப்பினர்.

அச்சிறையின் காவல் கோபுரம் தெரியும் இடத்தில், தங்களது தற்காலிக படகை எடுத்துக்கொண்டு, வெளியே உள்ள வடிகால் குழாயில் இறங்கினர். பின்னர் சிறை வளாகத்தை கடந்து, இரண்டு 12 அடி (3.7 மீ) உயரமான முள்வேலியை மீறி, தீவின் வடகிழக்கு கரைக்கு செல்லும் ஒரு செங்குத்தான சுவரில் ஏறினர். பின்னர் அந்தக் கரையில் இருந்து தங்களது படகில் ஏறி அவர்கள் மறைந்தனர். மறுநாள் காலை வரை யாருக்கும் இச்சம்பவம் குறித்து எதுவும் தெரியவில்லை.

மறுநாள் காலையில் காவலர்கள் அந்தக் கைதிகளின் படுக்கைகளில் வைத்திருந்த போலி தலைகளைக் கண்டதும் தான் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. அந்தத் தீவு, சிறையில் வேலை பார்த்த காவலர்களின் குடும்பங்களும் வசித்த இடமாக இருந்தது. அவர்களைக் காணவில்லை என்று அறிந்ததும், அல்காட்ராஸின் வார்டனாக இருந்த ஜோலீன் பாபியாகின் தந்தை முதலில் எச்சரிக்கை ஒலியை எழுப்பினார்.

“நான் விழித்தபோது சைரன் ஒலித்துக்கொண்டு இருந்தது. காதைத் துளைப்பது போன்று, மிகவும் சத்தமாக ஒலி எழுப்பப்பட்டது. அது ஒரு வகையான பயத்தை ஏற்படுத்தியது,” என்று ஜோலீன் 2013ஆம் ஆண்டு பிபிசி ‘விட்னஸ் ஹிஸ்டரி’ நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். “நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அது தப்பிக்கும் முயற்சியாக இருக்க முடியாது என்பதுதான் என் முதல் எண்ணம், ஆனால், அது தான் உண்மையில் நடந்தது” என்றார் அவர்.

பின்னர் அச்சிறைச்சாலை உடனடியாக பூட்டப்பட்டது. காவலர்களின் தங்குமிடம் உள்ளிட்ட எல்லா கட்டடங்களிலும் கடுமையான சோதனை நடத்தப்பட்டது. அதே நேரத்தில், ஜோலீனின் தந்தை நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளையும், பாதுகாப்பு பிரிவினரையும் கொண்டு ஒரு பெரிய தேடுதல் வேட்டையைத் தொடங்கினார். அவர்கள் சுற்றியுள்ள பகுதியில் பல நாட்களாக விரிவாகத் தேடினர்.

ஜூன் 14-ம் தேதி கடலோர காவல்படை, கைதிகளில் ஒருவரின் துடுப்பை கண்டுபிடித்தது. அதே நாளில், ஒரு தொழிலாளி ரப்பரில் மூடப்பட்ட நிலையில் ஆங்கிலின் சகோதரர்களின் சில தனிப்பட்ட பொருட்களை கொண்ட பாக்கெட்டைக் கண்டுபிடித்தார். ஏழு நாட்களுக்குப் பிறகு, தப்பிக்கப் பயன்படுத்திய படகின் கிழிந்த துண்டுகள் கோல்டன் கேட் பாலத்தின் அருகே கரை ஒதுங்கின. மறுநாள் அவர்களால் தயாரிக்கப்பட்ட உயிர்காக்கும் உடைகளில் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அந்த மூன்று பேரையும் அதன் பிறகு மீண்டும் யாரும் காணவில்லை.

முடிக்கப்படாத வழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அல்காட்ராஸ் தீவுகைதிகள் சிறையிலிருந்து தப்பித்தாலும், அவர்கள் தீவை விட்டு வெளியேற முயன்ற போது ஆபத்தான நீரில் இறந்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கருதினர். 1964 ஆம் ஆண்டு பிபிசி நேர்காணல் செய்தபோது, அந்தச் சிறையின் வார்டனாகப் பணியாற்றிய ரிச்சர்ட் வில்லார்டின் கருத்தும் அதுதான்.

“ஆமாம், சில கைதிகளை காணவில்லை, ஆனால் அவர்களில் யாரும் வெற்றிகரமாக தப்பித்ததாக கூறவில்லை. எனவே, காணாமல் போன கைதிகள் அனைவரும் தப்பிக்க முயன்றபோது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுக்குத் தெரிந்தவரை, அவர்கள் அல்காட்ராஸிலிருந்து தப்பினார்கள் என இன்று யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. நான் எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றால், இங்கு வீசும் பலத்த காற்றையும், ஆபத்தான இந்த நீரையும் பாருங்கள். உண்மையாகவே யாராவது இதில் பிழைத்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா?” என்றார் ரிச்சர்ட் வில்லார்ட்.

அல்காட்ராஸ் சிறையில் இருந்து மூன்று கைதிகள் தப்பி ஓடிய ஒரு வருடத்துக்குப் பிறகு, அச்சிறை 1963-ல் மூடப்பட்டது. இதற்கு சிறையின் பழுதடைந்த கட்டடம் மற்றும் அதனை இயக்குவதற்கு ஆகும் அதிக செலவுகள் காரணமாக இருந்தாலும், சிறையில் இருந்த கடுமையான நிர்வாக முறையும் நீண்ட காலமாக விவாதப் பொருளாக இருந்துவந்தது.

1939-ல் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பிராங்க் மர்பி இச்சிறையை மூட முயன்றார். “இந்த சிறை முழுவதும் கைதிகளுக்கு ஒரு மோசமான, வெறுப்பான மனநிலையை உருவாக்கும் இடமாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

பல ஆண்டுகளாக, அங்கிருந்த கடுமையான சூழலைத் தாங்க முடியாமல், சில கைதிகள் தற்கொலை செய்துகொண்டனர். அல்லது தங்கள் உடலைக் காயப்படுத்திக் கொண்டனர். 1960களில், கைதிகளுக்கு வெறும் தண்டனை கொடுப்பதை விட, அவர்கள் வாழ்க்கையை மாற்றி நல்ல வழியில் வாழ வைக்கும் வழிகளைப் பற்றி, அமெரிக்கா யோசிக்கத் தொடங்கியது.

தப்பியோடிய அந்த மூன்று பேரையும் பொறுத்தவரை, விரிகுடாவில் அவர்களின் உடல்கள் எதுவும் கிடைக்காதபோதும், 1979ஆம் ஆண்டில் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எஃப்பிஐ (The Federal Bureau of Investigation – FBI) தனது விசாரணையை முடித்து, அந்த பொறுப்பை அமெரிக்க மார்ஷல்ஸ் சேவையிடம் ஒப்படைத்தது.

ஆனால், அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றிய ஊகங்கள் ஒருபோதும் தணியவில்லை. அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அதே 1979 ஆம் ஆண்டு, ஃபிராங்க் மோரிஸின் கதாபாத்திரத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த எஸ்கேப் ஃப்ரம் அல்காட்ராஸ் திரைப்படம் வெளியானது.

அதேபோல, 1962ல் அந்த கைதிகள் தப்பியதிலிருந்து அவர்களை பலரும் கண்டதாகவும், அவர்களிடமிருந்து தகவல்கள் வந்ததாகவும் கூறப்பட்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. அமெரிக்காவின் புகழ்பெற்ற அல்காட்ராஸ் சிறையிலிருந்து 1962 இல் தப்பிச் சென்றவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜான் ஆங்க்லினிடமிருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மர்மமான கடிதம் வந்ததாக சான் பிரான்சிஸ்கோ காவல்துறை 2018 ஆம் ஆண்டு கூறியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அல்கட்ராஸ் சிறை தற்போது பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளதுஅந்தக் கடிதத்தில், “நான் 1962 ஜூனில் அல்காட்ராஸிலிருந்து தப்பினேன். அந்த இரவு நாங்கள் மூவரும் தப்பினோம். ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் தப்பிய பிறகு ரகசியமாக வாழ்ந்து வருவதாகவும், ஃபிராங்க் மோரிஸ் 2005 ஆம் ஆண்டு அக்டோபரிலும், கிளாரன்ஸ் ஆங்க்லின் 2008 ஆம் ஆண்டிலும் உயிரிழந்ததாக அந்தக் கடிதம் கூறியது.

கடிதம் எழுதியவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோய் சிகிச்சைக்கு ஈடாக தான் சரணடைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் அவர் கூறினார். எஃபிஐ அந்தக் கடிதத்தை ஆய்வு செய்தபோதும், அது உண்மையானதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியவில்லை. தப்பியோடியவர்களின் நிலை இன்று வரை மர்மமாகவே உள்ளது.

அமெரிக்க மார்ஷல்ஸ் சேவை இந்த வழக்கை இன்றும் முடிக்காமல் வைத்திருக்கிறது.

2022ஆம் ஆண்டில், அல்காட்ராஸிலிருந்து தப்பிய மூன்று கைதிகள் இப்போது எப்படி இருக்க வாய்ப்புள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு புதுப்பிக்கப்பட்ட உருவங்களை அவர்கள் வெளியிட்டனர். அதே நேரத்தில், அவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் கூறுமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஒருநாள் இந்த மர்மம் தீரும் என்ற நம்பிக்கையோடு, அதிகாரிகள் இதைத் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு