Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பொது மன்னிப்பில் ஆள்மாறாட்டம் – இலங்கையில் ஜனாதிபதி பெயரிலேயே நடந்த முறைகேடு
பட மூலாதாரம், PMD
எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக33 நிமிடங்களுக்கு முன்னர்
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற சிறைக் கைதிகள் தொடர்பில் இம்முறை பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு பதிலாக வேறு கைதி விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பில் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் நாயகம், கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையின் பொறுப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.என்ன நடந்தது?
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர், இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
நாற்பது லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனமொன்றின் அநுராதபுரம் கிளை முகாமையாளருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தண்டனை முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாசமினால், இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர், மீண்டும் முறைப்பாடு ஒன்றைச் செய்த நிலையிலேயே இந்தச் சம்பவம் மீண்டும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள், எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெசக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.
இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளிக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை செய்திருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் பதில்
பட மூலாதாரம், PMD
இந்நிலையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிதி மோசடியுடன் தொடர்புடைய நபரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது முறைகேடான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி செயலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனம் எடுத்தள்ளது.
அரசியலமைப்பின் 34 (1) பிரிவின்படி, கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
எவ்வாறாயினும், மேற்குறித்த சம்பவத்திற்கு அமைவாக 2025-05-06 தேதியிடப்பட்ட மற்றும் (06ஃ01 යෝජිතஃ ජ.පො.සමාஃ 05-12ஃ2025) இலக்கத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தன.
அத்துடன், அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாகச் சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஜூன் 06ஆம் தேதி ‘ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக’ என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவா?
கடந்த காலங்களில் நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளில் தகுதியற்ற சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவோரின் பட்டியலில் தகுதியற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றமைக்குப் பின்னணியில் சிறைச்சாலை ஆணையாளர் மாத்திரமன்றி, பின்னணியில் பலரும் இருக்கக்கூடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஃபேஸ்புக் பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.
அதோடு, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, விசாரணை, குற்றப் பத்திரிகை, வழக்கு, சிறைத் தண்டனை என்ற பாதையில் பயணிக்க வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இது நிச்சயமாக முதல் சம்பவமாக இருக்க முடியாது எனவும், முன்னைய ஆட்சிக் காலத்திலும் நடந்த இத்தகைய விடுவிப்பு சம்பவ வரலாறுகள் தோண்டி எடுக்கப்பட்டு சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு