மனிதத் தலையுடன் மயான வேட்டை நிகழ்வு – சுடலை மாடன் கோவில் திருவிழாவின் வரலாறு என்ன?

பட மூலாதாரம், Facebook/ கோவில்பட்டி புதுக்கிராமம் வேம்படி சுடலைமாடசாமி திருக்கோவில்

எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றிருக்கும் விவரணைகள் சிலருக்கு சங்கடம் தரலாம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள உப்பூர் கிராமத்தில் ஊர்க்காடு சுடலைமாடசாமி கோவில் விழாவில் இறந்தவரின் தலை, கை, கால்களுடன் சாமியாடிகள் பங்கேற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கோவிலில் நடைபெற்ற ‘சாமக் கொடை’ நிகழ்வின்போது, சுடுகாட்டுக்கு சுடலைமாடசாமி ஆடுபவர் வேட்டைக்குச் செல்வார். பொதுவாக அவ்வாறு வேட்டைக்குச் செல்லும் சாமியாடிகள் ஒன்றிரண்டு எலும்புத் துண்டுகள், அல்லது சில நேரங்களில் எதுவுமின்றித் திரும்பி வருவர்.

ஆனால் சனிக்கிழமை நடைபெற்ற வேட்டையில் சாமியாடி ஒருவர் இறந்தவரின் தலையை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். முழுவதும் எரிக்கப்படாத நிலையில் இருந்த அந்த உடல் பாகத்தை அவர் கையில் பிடித்து ஆடியுள்ளார். இதேபோன்று மற்ற சாமியாடிகள் கையில் இறந்தவரின் கை, கால்கள் இருந்துள்ளன. இவை வாழை இலை, மண் சட்டியில் கடவுளுக்குப் படையலாக வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சாமியாடிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சாமியாடிகள் உள்பட ஐந்து பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கடந்த 2001ஆம் ஆண்டு இதேபோன்ற சம்பவத்தில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல்துறையினர் சாமியாடிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். பாதி எரிந்த நிலையில் இருந்த மனிதத் தலை ஒன்றை ஏந்திக்கொண்டும், கல்லூரணி சுடலைமாடசாமி கோவில் திருவிழாவின்போது மனித மாமிசத்தை உண்டதாகவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தென் மாவட்டங்களின் சுடலை மாடன்

இறந்தவரின் உடல் பாகத்தைக் கையில் வைத்து சாமியாடிகள் ஆடும் வீடியோ பொதுவெளியில் பகிரப்பட்டுள்ள நிலையில், இந்தச் சடங்கு குறித்துக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தச் சடங்கு ஆண்டாண்டு காலமாக தென் மாவட்டங்களில் சுடலை மாடன் சாமி கோவில்களில் கடைப்பிடிக்கும் ஒன்று.

சுடலை மாடன் சாமி என்பவர் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தேவர், நாடார், ஆதி திராவிடர், பழங்குடியினர் எனப் பல்வேறு சமூகத்தினராலும் வணங்கப்படும் தெய்வமாகும். நூற்றுக்கணக்கான சுடலைமாடசாமி கோவில்கள் உள்ள நிலையில், ஒவ்வோர் ஊரிலும் சுடலை மாடனுக்கு ஒரு கதை உண்டு. அந்தக் கதைகளில் சில ஒற்றுமைகள் இருக்கும், சிற்சில வித்தியாசங்களும் உண்டு.

அதில், “சுடலை தலை இல்லாமல் பிறந்ததால் சிவன் ஒரு குயவரிடம் மகனுக்கு ஒரு தலையைச் செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார். சுடலை சிறு வயது முதலே விரும்பியது மனித மாமிசம். பூமிக்கு இறங்கி வந்து சுடுகாட்டுக்குச் சென்று, இறந்தவர்களின் உடல்களைச் சாப்பிடத் தொடங்கியுள்ளார். கழுத்தில் குடல்களை மாலையாக அணிந்து, கல்லீரல்களையும் எலும்புகளையும் சாப்பிட்டுள்ளார். பார்வதிக்கு இது தெரிய வந்தவுடன் அவரை பூமிக்கு விரட்டியுள்ளார். கிளம்புவதற்கு முன், தனக்கு எட்டு நாள் விழா நடத்தி மக்கள் வணங்க வேண்டும், தனது சாம்பல் உடல்நலம் குன்றியவர்களைக் குணப்படுத்த வேண்டும், தீய ஆவிகளை விரட்டியடிக்கும் சக்தி தனக்கு வேண்டும் என்று வேண்டியுள்ளார். அவரது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பூமியில் அவர் பகவதியம்மனின் காவல் தெய்வமானார், அதற்கு பதிலாக அவருக்கு மனித பலி கொடுக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

இதே கதையைக் கூறும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் ஞா.ஸ்டீபன் மற்றொரு கதையும் நம்பப்படுவதாகக் கூறுகிறார். “சுடலை என்பது ‘சுடர்’ என்று பொருள் கொள்ளும் வகையில் தீப்பொறியில் இருந்து வந்தவர் சுடலைமாடன் என்று நம்பப்படுகிறது. அவர் மெக்காவில் உள்ள கொடி மரத்தின் மீது இறங்கி வந்ததாகவும், அங்கிருந்து நாங்குநேரி வந்ததாகவும் கதைப் பாடல் இருக்கிறது. நாங்குநேரியில் உள்ள ஒத்தைப்பனை சுடலைமாடன் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானது. வேறு சுடலைமாடன் கோவில்களில் நாங்குநேரியில் இருந்து அந்த கோவிலுக்கு சுடலை எப்படி வந்தார் என்பதையும் சேர்த்துப் பாடுவார்கள்” என்றார்.

தூத்துக்குடி கயத்தாறு சுடலைமாடன் குறித்த இரண்டு நாட்டுப்புறப் பாடல்கள், கமுதி சுடலைமாடசாமி கோவில் குறித்த வில்லுப்பாட்டு, எழுத்தாளர் ஜெயமோகனின் மாடன் மோட்சம் என்ற சிறுகதை, கன்னியாகுமரி அருள்மிகு சிவ சுடலைமாடன் சாமி கோவில் குறித்த ஸ்தல வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து “சி. மாதவா அனுசுயா எழுதிய ஆய்வுக் கட்டுரையில், சுடலை என்ற சொல் ‘சுடு’ என்பதிலிருந்து வருகிறது. சுடலை என்பது சுடுகாடுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும், சுடலை மாடன் என்பது சுடுகாடுகளின் காவலன் என்று பொருள் கொண்டதாகவும்” தெரிவிக்கப்படுகிறது.

மயான வேட்டை என்பது என்ன?

சுடலை மாடனுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் விழா ‘கொடை’ எனப்படும். இந்த விழாவின்போது நடைபெறும் பல்வேறு சடங்குகளில் ஒன்று ‘சாமக் கொடை’ (இரவு நேர பூசை) ஆகும். சுடலை சாமி குறித்து நம்பப்படும் கதையை நிகழ்த்தி, அவரே இறங்கி வந்தது போல நடிப்பதே இந்தச் சடங்குகளாகும்.

“இரவு 12 மணிக்கு சுடலைமாடசாமி வேட்டைக்குச் செல்வார், அதாவது மயானத்துக்குச் செல்வார். இதற்கு முந்தைய நாள் அந்த ஊரில் ஓர் இறப்பு நிகழும் என்று நம்பப்படுகிறது. மறுநாள் சுடலைமாடசாமி சுடுகாட்டுக்குச் செல்லும்போது அங்கு எலும்புகளைக் கடித்து, சாம்பலை உடலில் பூசிக்கொள்ளும். இந்தச் சடங்கின்போது சாமி மட்டுமே தனியாகச் செல்லும். சாமி செல்லும்போது அவரை யாரும் பார்க்கக் கூடாது, எதிரில் யாரும் வரக்கூடாது” என்று விளக்குகிறார் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் ஞா.ஸ்டீபன்.

இது மட்டுமின்றி மதிய நேரத்தில் நடைபெறும் ‘உச்சி கொடை’ கனியான் கைவெட்டு சடங்கின்போது, 21 சாமியாடிகள் 21 வாழை இலைகள் முன் அமர்ந்திருக்க, அவர்களுக்கு கனியான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரின் கைகளில் இருந்து ஒவ்வொரு சொட்டு ரத்தம் இலையில் சொட்ட, அதன் பிறகு அதில் வாழைப் பழத்தை தோய்த்துச் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது என்றும் பேராசிரியர் ஸ்டீபன் கூறுகிறார்.

சாமக் கொடை சடங்கு குறித்த வீடியோ தற்போது வெளியானதால் வேறு பகுதியில் உள்ள மக்கள் இதைச் சற்று ஆச்சர்யத்துடன் பார்ப்பதாகவும், ஆனால் இது பல காலமாக நடைபெற்று வரும் வழக்கம் என்றும் அவர் கூறுகிறார்.

கடந்த 2013இல் வெளியான சைமன் ஜான் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் திருநெல்வேலியில் உள்ள 100 வயது விவசாயத் தொழிலாளி, ஊர் பூசாரி, சடங்கு செய்பவர் உள்பட பலரிடம் வாய்மொழிக் கதைகளை ஆவணப்படுத்தியபோது, முந்தைய காலத்தில் இந்தச் சடங்கின்போது பிணங்களை தேடித் தின்றதாகவும், இப்போது அந்த வழக்கம் இல்லை என்றும் அவர்கள் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்ற வேறு சடங்குகள் வட மாவட்டங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடத்தப்படுகின்றன. ‘மயானக் கொள்ளை’ அல்லது ‘மசானக் கொள்ளை’ என்று பெயரில் சுடுகாடுகளில் சடங்குகள் நடைபெறும்.

சாமியாடிகள் யார்?

பட மூலாதாரம், YouTube/Kumarsmk

சாமியாடி என்பவர் சுடலைமாடசாமி இறங்கி வருவதாகக் கருதப்படும் நபராவார். “ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட சிலரே சாமியாடிகளாக இருப்பார்கள், கொடைக்கு 41 நாட்களுக்கு முன்பே, சாமியாடிக்கு காப்பு (கைகளில் கட்டப்படும் புனிதக் கயிறு) கட்டப்படும். எனவே அப்போதே யார் சுடலைமாட சாமியாடி என்பது தெரிந்துவிடும். காப்பு கட்டியது முதல் விழா நடைபெறும் வரை எங்கும் செல்ல மாட்டார். அவருக்கு எந்த ஆபத்தும் வராமல் அவர் பத்திரமாக இருப்பது மிகவும் அவசியம். ஏதாவது காரணத்தால் அவர் உயிரிழந்துவிட்டால், அவருக்குப் பதிலாக மற்றொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றார்.

ஊர்க்காடு சுடலைமாடசாமி கோவில் சடங்கின்போது பலர் சாமி ஆடியதாகவும், அதில் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“சுடுகாட்டுக்குள் நுழைந்து உடல் பாகங்களை எடுத்து வந்ததால், சொத்துக்குச் சேதம் விளைவித்தல், தொற்று நோய் உருவாக வழிவகுத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. பாரத் நியாய் சன்ஹிதா பிரிவுகள் 270, 272, 301 மற்றும் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பை தடுத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளாங்குளி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில், பெயர் குறிப்பிட்ட ஐந்து பேர், மேலும் மற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று மாவட்ட காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு விலங்குகள் பலியிடுவதைத் தடுக்கும் கடுமையான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்தபோது, நாங்குநேரியில் சுடலைமாடசாமி கோவிலில் சுமார் 600 ஆடுகளை ஒரே நேரத்தில் பலி கொடுக்கும் நிகழ்வுக்குத் தடை ஏற்பட்டது என்று நினைவுகூர்கிறார் பேராசிரியர் ஸ்டீபன்.

“அப்போது அந்த சுடலைமாட சாமியாடி, யாரும் கோவிலுக்கு வந்து பலி கொடுக்க வேண்டாம், எங்கெங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே பலி கொடுத்துவிடுங்கள் என்று கூறினார். அவரவர் தோட்டத்திலும், வீட்டிலும் பலி கொடுத்தனர்” என்று குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், vaymolikataikal.blogspot.com

இறப்புடன் தொடர்புடைய வெவ்வேறு சடங்குகள் உலகம் முழுவதும் இருந்துள்ளன. இறந்த மனிதர்களின் மாமிசத்தை உண்ணும் பழக்கம் ஐரோப்பாவில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக லண்டன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் நிபுணர்கள் பங்கேற்ற, Quaternary Science Reviews என்ற ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு கூறுகிறது.

“இறப்பு என்பதே பயம் சார்ந்த ஒன்று, மனிதன் தனது பயத்தை வெளிப்படுத்தும் விதங்களில் ஒன்றாகவே இந்தச் சடங்குகள் உள்ளன. இவை இப்போதும் கடைப்பிடிக்கப்படுவது காட்டுமிராண்டித்தனமானது” என்கிறார் சென்னைப் பல்கைலைக்கழக தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைவரான பேராசிரியர் வீ.அரசு கூறுகிறார்.

ஆனால், வழக்குப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் தேவையற்றது என்று பேராசிரியர் ஸ்டீபன் கூறுகிறார். “ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். அதில் சரி, தவறு என்று கூற ஒன்றும் இல்லை” என்கிறார்.

அதோடு, கோவில்களும் தற்போது மாறி வருவதாகச் சுட்டிக்காட்டுகிறார் அவர். “பல இடங்களில் ‘ஶ்ரீ’ அல்லது ‘அருள்மிகு’ சுடலைமாடன் கோவில்கள் உருவாகி வருகின்றன, அதுபோன்ற கோவில்களில் இந்தச் சடங்குகள் இருக்காது” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு