திருகோணமலையில் , சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையை கண்டித்து , தேசிய மக்கள் சக்தியின் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் கோரியுள்ளார். திருகோணமலை சம்பவம் தொடர்பில் சுமந்திரன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவொன்றினை இட்டே அவ்வாறு கோரியுள்ளார். குறித்த பதிவில் , அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிசாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. எனவே தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. எனவே அக்கட்சியைச் சேர்ந்த திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, அனைத்து தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்களும், உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க வேண்டும் – சுமந்திரன் பகிரங்க கோரிக்கை
2