“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என,  காரைக்கால் திண்மக் கழிவகற்றல்  நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல் மருத்துவ கழிவுகளை வகைப்படுத்தாது தீயிட்டுக் கொழுத்தபடுவதால் சூழல் மாசடைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

அத்துடன்  , சித்தர்கள் பலர் வாழ்ந்து சமாதியடைந்த இடமாகவும் , சமாதி கோவில் , ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைக்கால் சிவன் கோவில் ஆகியவை அமைந்துள்ள புண்ணிய பூமியில் கழிவுகள் கொட்டப்பட்டு , சேகரிக்கப்படும் இடமாக காணப்படுவதால் , குறித்த கழிவகற்றல் நிலையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் , இது வரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.