Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று கூறத்தக்க பொருத்தமான கூட்டுக்கள்தான் உண்டு.இப்பொழுது கஜேந்திரக்குமார் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டும் அப்படித்தான். அதுவும் ஒரு சமயோசிதக் கூட்டுத்தான். தந்திரோபாயக் கூட்டுத்தான்.எனினும், தமிழ்த் தேசிய நோக்கு நிலையில், பொது எதிரிக்கு எதிராக ஆகக்கூடிய பட்ஷம் ஒரு தேசமாகத் திரள்வது என்ற அடிப்படையில் அந்த கூட்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள்.அதேசமயம் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள். எனவே நீதிக்கான போராட்டத்தில் யாரைப் பிரதான குற்றவாளியாகக் காணப் போகிறோம்; யாருக்கு எதிராக அணி திரளப் போகிறோம் என்பதில் தமிழ் மக்களிடம் மிகத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.அதாவது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வது.எங்களுக்குள் ஒருவர் மற்றவரை குற்றஞ்சாட்டி நாங்கள் பல துண்டுகளாகச் சிதறிப் போவதா? அல்லது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வதா? என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம்.
இந்த அடிப்படையில் பார்த்தால் கஜேந்திரக்குமார் டிரிஎன்ஏயோடு கூட்டுக்குப் போவது என்று முடிவெடுத்தது ஒரு திருப்பகரமான மாற்றம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தியாகி-துரோகி வாய்ப்பாட்டுக்கு வெளியே அந்தக் கூட்டு உருவாகியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகால வாய்ப்பாட்டுக்கு வெளியே முன்னணி வந்திருக்கிறது.அது இரண்டு தரப்புக்கும் மெய்யான ஒரு பண்புருமாற்றமாக இருந்தால் கூட்டு நிலைக்கும்.
அந்தக் கூட்டின் மூலம் அவர்கள் பின்வரும் நன்மைகளை அடைய முயற்சிக்கலாம். முதலாவதாக, பொது எதிரிக்கு எதிராக ஒப்பீட்டளவில் பெரிய கூட்டு. இரண்டாவதாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளை உருவாக்கலாம். மூன்றாவதாக, தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியைத் தனிமைப்படுத்தலாம். நான்காவதாக, மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு பலமான முன்னணியை உருவாக்கலாம். ஐந்தாவதாக, கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தலாம்.
டிரிஎன்ஏயைப் பொறுத்த்தவரை அவர்கள் யாரோடாவது கூட்டுச் சேர வேண்டும். தனியாக நின்று பிடிக்க முடியாது. தமிழரசுக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்தால் மாகாண சபையிலும் அதற்குப் பின் வரக்கூடிய தேர்தல்களிலும் அதிகரித்த வெற்றி வாய்ப்புகள் அவர்களுக்கு இருக்கக்கூடும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவ்வாறான வெற்றி வாய்ப்புகளை இனிமேல்தான் நிரூபிக்க வேண்டாம். ஆனால் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது தொடர்பாக தமிழரசுக் கட்சியோடு அவர்கள் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளில் திருப்தியான பெறுபேறுகள் இல்லாத ஒரு பின்னணிக்குள் அவர்கள் முன்னணியை நோக்கி வந்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சி தன்னை முதன்மை கட்சியாகவும் பெரிய கட்சியாகவும் கருதி, தனது மேலாண்மையை வலியுறுத்த முற்பட்டதன் விளைவு இது.
புதிய கூட்டை எப்படி உளவியல் ரீதியாகவும் நடைமுறையிலும் பலவீனப்படுத்தலாம் என்று சிந்தித்து சுமந்திரன் அணி திட்டமிட்டு வேலை செய்கின்றது.சுமந்திரன் அணி இந்தக் கூட்டைக் கண்டு பதட்டமடைகிறது. எதிர்காலத்தில் தலைமைத்துவம் முன்னணியிடம் சென்று விடக்கூடாது என்ற பயமும் அதில் உண்டு. எனவே இந்தக் கூட்டை உடைப்பதற்காக எந்த ஒரு வெளி எதிரியையும் விடக் கூடுதலாக சுமந்திரன் அணி வேலை செய்கின்றது.
ஈபிடிபியுடன் தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தைக்கு போனதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் அதனால் ஏற்படும் பின்னுதைப்பு கட்சியைக் கடுமையாக பாதிக்கக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன. இதில் சுமந்திரனுக்கு ஆறுதலான விடயம் என்னவென்றால்,சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் காணப்படும் சக்திகளுக்கு தலைமை தாங்க இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை தயாரில்லை என்பதுதான். இதனால் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் படிப்படியாக கட்சிக்குள் தன் பிடியை பலப்படுத்தி வருகிறார். மந்திரித்து ஏவி விடப்பட்ட சேவலைப்போல அவர் அங்கலாய்ப்போடு ஓடிக்கொண்டேயிருக்கிறார். ஒரு கட்சியின் பதில் செயலாளர் இவ்வளவுக்குத் தீயாக வேலை செய்வதில்லை. ஆனால் சுமந்திரன் தொடர்ந்து இயங்குகிறார். முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்சியின் எல்லாமுமாக அவர் தோன்றினார். இப்பொழுதும் அந்தப் பாத்திரத்தை எப்படித் தக்க வைப்பது என்று சிந்தித்துத் திட்டமிட்டு உழைக்கிறார்.அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் எப்படியும் மக்கள் ஆணையைப் பெற்று விட வேண்டும் என்ற தவிப்பு அதில் தெரிகிறது.
தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைப் போட்டி என்பது பலமான தலைமைகள் இரண்டு இருப்பதால் ஏற்பட்டது அல்ல. இரண்டுமே பலவீனமான தலைமைகள் என்பதால் ஏற்பட்டதுதான் என்பதைக் கடந்த ஆண்டு நிரூபித்து விட்டது. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தை பலப்படுத்த இதுதான் தருணம் என்று நம்புவதாகத் தெரிகிறது.கடந்த வெள்ளிக்கிழமை கஜேந்திரகுமார் கொழும்பில் நடாத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் சுமந்திரன் அணிக்குப் பொறி வைப்பவை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த 15 ஆண்டுகளாக தன்னை ஒரு மாற்று அணியாகத்தான் ஸ்தாபித்து வந்திருக்கிறது. தன்னை ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாகக் கருதி வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக தன்னை கட்டமைத்துக் கொள்ள அக்கட்சி தவறிவிட்டது. 15 ஆண்டுகளின் பின் கஜேந்திரக்குமார் உடல் ரீதியாகவும் நோய்வாய்ப்பட்டு தேறிய பின், அந்தக் கட்சி அவருக்கு நெருக்கமான சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் தூண்டுதலால் தனது வழமையான வாய்ப்பாட்டிலிருந்து இறங்கி வருவதாகத் தெரிகிறது. ஆனால் வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக அவர்கள் வளர்வதற்கு இதை விடக் கடுமையாக உழைக்க வேண்டும்.அதாவது தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக வளர மேலும் கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் அப்படி உழைக்கும் வரையிலும் தமிழரசுக் கட்சிதான் முதன்மைக் கட்சியாக தொடர்ந்துமிருக்கும். புதிய கூட்டு நிலைத்திருக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சிப் பண்பு மீண்டும் தலை தூக்கும்.
தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட கூட்டுக்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய கட்சிகளும் சரி ஆயுதப் போராட்ட இயக்கங்களும் சரி தங்களுக்குள்ளேயும் மோதியிருக்கின்றன.தங்களுக்கு இடையிலும் மோதியிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தொடங்கி ஆயுதப் போராட்ட காலத்தில் திம்பு பேச்சு வார்த்தையை நோக்கி உருவாக்கப்பட்ட இயங்கங்களின் கூட்டு. அதன்பின் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதன் பின் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை. அதன்பின் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு வரையிலுமான எல்லாக் கூட்டுக்களும் ஒரு கட்டத்தின் பின் குலைந்து விட்டன. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலான தொகுக்கப்பட்ட தோல்வியென்பது கூட்டுக்களின் தோல்வியுந்தான்.
இப்பொழுது ஒரு கூட்டு உருவாகியிருக்கிறது. எனினும் இதுகூட பிரம்மாண்டமான ஒரு கூட்டு இல்லை.தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் வடக்கு கிழக்கு தழுவிய பெருங் கட்சியாக, முதன்மைக் கட்சியாகக் காணப்படுகின்றது. எனவே இப்பொழுது ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் ரத்தச் சுற்றோட்டங்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி நிலையை பலப்படுத்துமா? மேற்கத்திய ஜனநாயகங்களில் உள்ளது போல இரு கட்சிப் போட்டி நிலைமை என்பது அங்கு ஆரோக்கியமானது. ஆனால் நீதிக்காக போராடும்,அரசற்ற மக்களாகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த 16 ஆண்டு காலத் தேக்கம், தோல்வி என்பவற்றின் பின்னணியில், அது ஆரோக்கியமானது அல்ல.பொது எதிரிக்கு எதிராகத் தேசம் திரண்டு நிற்காது.இரண்டாக நிற்கும். கட்சி மைய அரசியல் இப்படித்தான் இருக்கும்.கட்சிகளால் மட்டும் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது