Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மெக்காவில் பேட்ரியாட்: பல லட்சம் பேர் கூடும் ஹஜ் சமயத்தில் சௌதி அரேபியா முடிவு ஏன்?
பட மூலாதாரம், @modgovksa/X
படக்குறிப்பு, 33 நிமிடங்களுக்கு முன்னர்
சௌதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சமீபத்தில் எக்ஸ் வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்திருந்தது. அந்த புகைப்படங்கள் அந்த நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருப்பதை காட்டுகிறது.
ஒரு புகைப்படத்தில், ஹெலிகாப்டர் ஒன்று தரையில் நிறுத்தப்பட்டிருக்கும் வான் பாதுகாப்பு அமைப்பை மேற்பார்வையிடுகிறது. மற்றொரு புகைப்படத்தில் மெக்காவில் அமைந்திருக்கும் அல்-ஹராம் மசூதி (காபா) இடம் பெற்றிருந்தது. இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது இந்த நகரம்.
இந்த புகைப்படங்களை பகிர்ந்த சௌதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை, “ஒரு நொடியும் கண் இமைக்காத வான் பாதுகாப்புப் படை… புனிதப் பயணம் மேற்கொள்ளும் நபர்களின் பாதுகாக்கும் பணியில்,” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது.
எக்ஸ் தளத்தில் இரண்டு பதிவுகளை தனித்தனியாக வெளியிட்டிருந்த சௌதியின் பாதுகாப்பு அமைச்சகம், மெக்கா நகரில் நிறுத்தப்பட்டிருக்கும், வான் பாதுகாப்பு அமைப்பின் படங்களை பதிவிட்டிருந்தது. அதில் ஒன்றில், அல்-ஹராம் மசூதியின் புகழ்பெற்ற சௌதியின் மணிக்கூண்டு முன்பு வான் பாதுகாப்பு அமைப்பு நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.
மற்றொரு பதிவில், அல்-ஹராம் மசூதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை கண்காணிக்கும் ராணுவ ஹெலிகாப்டரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்திற்காக 12.5 லட்சம் நபர்கள் மெக்காவுக்கு வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஹஜ் புனித யாத்திரை நடைபெறும் இந்த நேரத்தில் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவியதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.
யேமன் ஹூதி படையினரின் சாத்தியமான தாக்குதலில் இருந்து ஹஜ் பயணிகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
ஹூதிகளுக்கு எதிராக சௌதி அரேபியா ராணுவ தாக்குதலை நடத்த ஆரம்பித்த தருணத்தில் இருந்து, ஹூதி படையினர் சௌதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
ஹூதிகள் மெக்கா மீது கடந்த காலத்தில் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக சௌதி அரேபியா குற்றம் சுமத்துகிறது. இருப்பினும் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஹூதிகள் மறுத்துள்ளனர்.
பட மூலாதாரம், X/@modgovksa
படக்குறிப்பு, சௌதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட புகைப்படங்கள் சௌதி அரேபிய நிர்வாகம் கூறுவது என்ன?
அமெரிக்க தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்பான பேட்ரியாட் (Patriot) மெக்கா நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சௌதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சௌதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான சௌதி பிரஸ் ஏஜென்சியின் படி, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து அறிவிக்க இந்த வாரத்தின் துவக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை உள்துறை அமைச்சகம் நடத்தியது. அப்போது மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், ஹஜ்ஜின் போது செயல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டனர்.
சௌதி அரேபியாவின் பொது பாதுகாப்பு இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் முகமது அல் பஸ்ஸாமி அந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சௌதி அரேபியா உறுதி பூண்டுள்ளதாக கூறினார். அதற்காக கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு மட்டுமின்றி, அமைதி மற்றும் ஒழுங்கு, கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசலை சீரமைத்தல் மற்றும் அவசர உதவி போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மெக்கா மற்றும் மெதீனாவில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர்.
ஹஜ் பயணிகளின் பாதுகாப்புக்காகவும், ஏதேனும் அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் உதவவும் கண்காணிப்பு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை கூறிய அவர் இந்த பணிகளுக்காக டிரோன்கள் பயன்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்தார். இதுமட்டுமின்றி, மேலும் 5 ஆயிரம் கண்காணிப்புக் கேமராக்கள் அங்கே பொருத்தப்பட்டுள்ளன.
சௌதி பிரஸ் ஏஜென்சியின் படி, சௌதி விமானப்படையும் விரிவுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக பயன்படுத்தப்படும். தரையில் உள்ள இதர படையினருக்கு தேவையான தடவாள ஆதரவையும் சௌதியின் விமானப்படை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வான் எல்லை கண்காணிப்பு, வான் போக்குவரத்து டிராஃபிக் போன்றவற்றையும் சௌதி விமானப்படை கண்காணிக்கும்.
கடந்த ஆண்டு மோசமான மேலாண்மை, அடிப்படை வசதிகள் பற்றாக்குறை மற்றும் அதீத வெப்பம் காரணமாக ஹஜ் பயணிகள் பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாயின.
பட மூலாதாரம், X/@modgovksa
படக்குறிப்பு, ஹஜ் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக சௌதியின் பாதுகாப்புத் துறை அறிவிப்பு பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு என்றால் என்ன?
சௌதி அரேபிய பாதுகாப்புத்துறையினரால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் வான் பாதுகாப்பு அமைப்பானது பேட்ரியாட் எம்.ஐ.எம். 104 ஆகும். இது வான்வழி தாக்குதல் தடுப்பு அமைப்பு ஆகும். ரேதியோன் மற்றும் லாக்ஹீட் மார்டின் என்ற அமெரிக்க நிறுவனங்களால் இது தயாரிக்கப்பட்டது.
இந்த பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பானது நீர்வழி, க்ரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை சமாளிக்கும் திறனோடு உருவாக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை கண்காணித்து அழிக்கும் திறன் கொண்ட நவீன ரேடார் தொழில்நுட்பத்திற்காக இந்த ஏவுகணை அமைப்பு நன்கு அறியப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய நேரத்திற்குள் இதனை செயல்படுத்த இயலும். ‘எலக்ட்ரானிக் ஜாமிங்’ போன்றவற்றை தவிர்க்கவும் இது உதவுகிரது.
இது 150 கி.மீ தொலைவுக்கு அப்பாலேயே எதிரி ஏவுகணை உள்ளிட்ட இலக்குகளை கண்டறிந்து, தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என்று நேட்டோ குறிப்பிடுகிறது. 1980களில் அமெரிக்க ராணுவத்தில் இது சேர்க்கப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக இதன் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பாதுகாப்பு தொடர்பான உலகின் பல இதழ்களும், பேட்ரியாட்டை முதல் 10 அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்று என்று பட்டியலிடுகின்றன.
1990-களின் துவக்கத்தில் வளைகுடா போரில் பயன்படுத்தப்பட்ட இந்த பாதுகாப்பு அமைப்பின் செயல்திறன் பல ராணுவ நிபுணர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த ஏவுகணை அமைப்புகளை உருவாக்கும் நிறுவனங்களில் ஒன்றான ரேதியோனின் அதிகாரப்பூர்வ இணையத்தின் தரவுகள் படி, இதில் ரேடார், ‘கமெண்ட் அண்ட் கண்ட்ரோல்’ தொழில்நுட்பம், சில இண்டெர்செப்டர்கள் (தாக்குதலை தடுத்து அழிக்கக் கூடியது) உள்ளிட்டவை இணைக்கப்பட்டிருக்கிறது.
டிரோன்கள், ஏவுகணைகள், நவீன போர் விமானங்கள் மற்றும் இதர அச்சுறுதல்களை கண்டறிந்து, தடுத்து, அழிக்கும் திறனைக் கொண்டவையாக இந்த பாதுகாப்பு அமைப்பு உள்ளது.
அந்த இணையம் அளித்த தகவலின் படி, 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பானது 150க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழித்ததாக குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா உட்பட மொத்தம் 19 நாடுகளில் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு