ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தது எப்போது? – சிடிஎஸ் அனில் சௌகான் புதிய தகவல்

படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாத முகாம்களை தாக்கும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட இந்தியா, நடவடிக்கை முடிந்த ஐந்து நிமிடத்திலேயே இது குறித்து பாகிஸ்தானுக்குத் தெரிவித்துவிட்டதாக இந்தியப் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் செளகான் தெரிவித்துள்ளார்.

நேற்று (2025 ஜூன் 3 ), புனேயில் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் ‘எதிர்காலப் போர்கள் மற்றும் போர்முறை’ என்ற தலைப்பில் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் செளகான் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

“நாம் தாக்குதல் நடத்திய அதே நாளில் (மே 7) அந்தத் தகவலை பாகிஸ்தானுக்கு தெரிவித்துவிட்டோம். இரவு 1 மணி முதல் 1:30 மணி வரை தாக்குதல் நடத்தினோம். தாக்குதல் முடிந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தானிடம் தெரிவித்தோம்” என்றார்.

எல்லை தாண்டி நடத்திய தாக்குதலின் போது இந்திய ராணுவம் ‘மிகவும் பகுத்து ஆராய்ந்து’ செயல்பட்டதாக ஜெனரல் செளகான் கூறினார். ‘பயங்கரவாத மறைவிடங்களை மட்டுமே தாக்கினோம், பொதுமக்கள் மற்றும் ராணுவ இலக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தவிர்த்தோம்,’ என்று அவர் கூறினார்.

பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்க, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டத்தைத் தொடங்கியது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“பயங்கரவாத மறைவிடங்கள் மட்டுமே எங்கள் இலக்கு என்றும், ராணுவ மறைவிடங்கள் இலக்கு வைக்கப்படவில்லை என்று பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலிடம் தெரிவித்தோம். கூடுதல் சேதம் ஏற்படாமல் அதிலும், குறிப்பாக பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் பார்த்துக் கொண்டோம்” என்று ஜெனரல் செளகான் கூறினார்.

பட மூலாதாரம், MOHD RASFAN/AFP via Getty

படக்குறிப்பு, ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அனில் செளகான் சிங்கப்பூரில் தலைமைத் தளபதி அனில் செளகான் தெரிவித்த கருத்து

முன்னதாக, மே மாதம் நடைபெற்ற பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த கேள்விகளுக்கு ஜெனரல் செளகான் பதிலளித்திருந்தார். சிங்கப்பூரில் மே 31 சனிக்கிழமையன்று ப்ளூம்பெர்க் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘எத்தனை விமானங்கள் சேதமடைந்தன என்பதை விட, சேதம் ஏற்பட்டது ஏன் என்பதை அறிவதே முக்கியமானது’ என்று அவர் சொன்னார். ஆனால், ஆறு இந்திய விமானங்களுக்கு சேதம் விளைவித்ததாக பாகிஸ்தான் கூறியதை அவர் மறுத்தார்.

சிங்கப்பூரில் ஜெனரல் செளகான் அளித்த இந்த நேர்காணல் பரவலாக விவாதிக்கப்பட்டது. சில நிபுணர்கள் இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்தனர், அவர் ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு கதையை உருவாக்குவதாக’ சிலர் குற்றம் சாட்டினர்.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், முப்படை தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்தது. மேலும், இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானின் கூறுவது தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

இந்த விஷயம் தொடர்பாக தனது சமூக ஊடகங்களில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியதாகவும், இப்போது நிலை மெதுவாக தெளிவாகி வருவதாகவும் எழுதியுள்ளார். கார்கில் மறுஆய்வுக் குழுவின் மாதிரியில், நாட்டின் பாதுகாப்பு தயாரிப்புகளை ஒரு சுயாதீன நிபுணர் குழு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.முப்படைகளின் தலைமைத் தளபதியின் கருத்தை விமர்சிக்கும் நிபுணர்

மூலோபாய விவகார நிபுணர் பிரம்மா செலானி, முப்படைகளின் தலைமைத் தளபதியின் அறிக்கைக்கு எதிர்வினையாற்றுகையில், இது மோசமான ராஜதந்திரம் என்று கூறியுள்ளார்.

“மோசமான ராஜதந்திரம் இது, மோதி அரசாங்கம் தேவையில்லாமல் இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவரை சிங்கப்பூருக்கு அனுப்பியது, அங்கு அவர் அளித்த பேட்டியில் இந்திய போர் விமானங்களின் இழப்பை ஒப்புக்கொண்டு பாகிஸ்தானுக்கு வெற்றியை வழங்கினார்,” என்று அவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இத்தகைய ஒப்புதல் வாக்குமூலம் இந்திய மண்ணில்தான் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த தரவுகளை இந்தியாவும் வழங்க வேண்டும்” என்று பிரம்மா செலானி எழுதினார்.

மற்றொரு பதிவில், “ராணுவ நடவடிக்கையை முன்கூட்டியே நிறுத்துவது பற்றிய விமர்சனங்களை நிறுத்த பிரதமர் மோதி பிரசார நிகழ்ச்சிகளை நடத்தினார். ஆனால் முப்படை தலைமைத் தளபதியின் அறிக்கை மோதியின் முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளது” என்று பிரம்மா செலானி எழுதியுள்ளார்.

ஜெனரல் செளகானின் கருத்துக்கு ஆதரவு

பட மூலாதாரம், ani

ஜெனரல் அனில் செளகானின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு நிபுணர் சி உதய் பாஸ்கர், மிகவும் பொருத்தமான பதிலை பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி அளித்துள்ளதாகக் கூறினார்.

“சிடிஎஸ் கூறியது மிகவும் பொருத்தமானது. ஏனெனில் இந்தியாவைப் பொறுத்தவரை இது இழப்பு என்பதைவிட உத்தி ரீதியிலான சேதம் ஆகும். இதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது முக்கியம். இந்த இழப்புக்கு வழிவகுத்த தவறுகள் மற்றும் குறைபாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். அவை எவ்வாறு சமாளிக்கப்படவேண்டும் என்ற படிப்பினை கிடைத்தது என்று அவர் சொல்வது சரியானதே” என்று சி உதய் பாஸ்கர் கூறினார்.

இதற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், நமது தரப்பின் இழப்புகள் குறித்து இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளதாக உதய் பாஸ்கர் கூறினார்.

“ராணுவத்தின் விளக்கங்கள் உங்கள் நினைவில் இருந்தால், ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி சொன்னதை நினைத்துப் பாருங்கள். நாம் போர் சூழ்நிலையில் இருக்கிறோம், இழப்புகளும் அதில் ஒரு பகுதி தான் என அவர் தெரிவித்தார்” என்று அவர் கூறினார்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த ஜெய்சங்கரின் அறிக்கையும் சர்ச்சையும்

பட மூலாதாரம், ani

படக்குறிப்பு, ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக ‘பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தது’ தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியது குறித்து காங்கிரஸ் கட்சி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, அதில் மத்திய அரசின் மீது கேள்விகளை எழுப்பியது.

எஸ். ஜெய்சங்கரின் அறிக்கைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, “எஸ். ஜெய்சங்கரின் அறிக்கையால், பாகிஸ்தான் மட்டுமல்ல, சர்வதேச சமூகமே நம்மைப் பார்த்து நகைக்கிறது” என்று கூறினார்.

எஸ் ஜெய்சங்கரின் தெரிவித்த கருத்தால் ஏற்பட்ட சலசலப்புக்குப் பிறகு, அவரது கருத்தை இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியது.

“மத்திய அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரின் அறிக்கை தவறான கோணத்தில் முன்வைக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் கூறப்படும் இதுபோன்ற கூற்றுகளை PIB இன் உண்மை சரிபார்ப்பு நடைமுறை மறுத்துள்ளது” என்று PIB இன் உண்மை சரிபார்ப்புப் பிரிவு எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் பதிவிட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன், ராகுல் காந்தியின் ட்வீட் முற்றிலும் தவறானது மற்றும் ஆபத்தானது என்று விமர்சித்திருந்தார்.

“இது, உண்மையைத் திரித்து, நமது ஆயுதப் படைகளை அவதூறு செய்யும் வகையில் உண்மைகளைத் தவறாக சித்தரிக்கிறது.” என்று அவர் தெரிவித்திருந்தார்.

பத்திரிகையாளர்களுடனான உரையாடலின்போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடக்கத்தில், நாங்கள் தீவிரவாத கட்டமைப்புகளைத் தாக்குகிறோம் என்று பாகிஸ்தானுக்கு ஒரு செய்தியை அனுப்பினோம். நாங்கள் ராணுவத்தைத் தாக்க மாட்டோம். எனவே, ராணுவம் அதிலிருந்து விலகி இருக்கவும் தலையிடாமல் இருக்கவும் ஒரு வழி உள்ளது என்று தெரிவித்தோம். எங்களது இந்த ஆலோசனையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்” என்று கூறுவதைக் காணொளியில் காணலாம்.

8 மணி நேரத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் மேற்கொண்ட ஆபரேஷன் பன்யான்-உம்-மர்சூஸ், மே 10ஆம் நாளன்று ‘எட்டு மணி நேரத்திற்குள் தோல்வியடைந்தது’ என்று ஜெனரல் அனில் செளகான் கூறினார்.

ராணுவ மோதல் ஒன்றில் ஏற்படும் இழப்புகள், அந்த நடவடிக்கையால் அடையப்பட்ட முடிவுகளை விட முக்கியமானது அல்ல என்று இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் கூறினார்.

“மே 10 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் தொடங்கப்பட்ட பாகிஸ்தானின் நடவடிக்கை ஆபரேஷன் பன்யான்-உம்-மர்சூஸின் நோக்கம், 48 மணி நேரத்தில் இந்தியாவை மண்டியிட வைப்பதாகும். அவர்களின் தரப்பில் இருந்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாங்கள் அவர்களின் தீவிரவாத மறைவிடங்களை மட்டுமே தாக்கினோம், ஆனால் அவர்கள் இந்த மோதலை அதிகரித்து விட்டனர்” என்று ஜெனரல் செளகான் கூறினார்.

“தங்களது ராணுவ நடவடிக்கை 48 மணி நேரம் நீடிக்கும் என்று பாகிஸ்தான் நினைத்தது, ஆனால் அது சுமார் 8 மணி நேரத்தில் முடிந்துவிட்டது. பின்னர் அவர்கள் தொலைபேசியை எடுத்து, மோதல் நிறுத்தம் பற்றி பேச விரும்புவதாகக் கூறினார்கள்” என்று பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அனில் செளகான் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு