போர் விமானங்களை சேதப்படுத்திய சாதாரண ட்ரோன்கள் – யுக்ரேனின் “சிலந்தி வலை”யில் ரஷ்யா சிக்கியதா?

பட மூலாதாரம், USS

படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ விமான தளங்களில் நடந்த தாக்குதல் குறித்து யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு பாதுகாப்பு சேவை (SSU) தலைவர் வாசில் மாலியுக் தகவல் தெரிவித்தார்.எழுதியவர், லாரா கோஸிபதவி, இருந்து பிபிசி செய்திகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், அசாதாரணமான திறமையுடன் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

18 மாதங்களாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதின் விளைவு தான் இந்த மிகப்பெரிய தாக்குதல்.

ஜூன் 1 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட யுக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவிற்குள் உள்ள விமானப்படைத் தளங்களைத் தாக்கி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட விமானங்களை குறிவைத்தன.

இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு “ஸ்பைடர் வெப்” எனக் குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்டது.

தாக்குதல் தொடங்கப்பட்ட தருணத்திலேயே அதன் பரவலான தாக்கத்தை உணர முடிந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் இச்சம்பவம் பற்றிய தகவல்கள் வெளி வரத்தொடங்கின.

வடக்கில் ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே உள்ள மர்மன்ஸ்க் முதல், கிழக்கில் யுக்ரேனில் இருந்து 8,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த அமுர் பகுதி வரை அதன் தாக்கம் பரவியிருந்தது.

மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் ஆகிய ஐந்து பகுதிகளில் தாக்குதல்கள் நடந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது, ஆனால் மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் மட்டுமே விமானங்கள் சேதமடைந்ததாகவும், மற்ற இடங்களில் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் கூறியது.

ரஷ்யா அறிவித்த இடங்களுடன் பொருந்தக்கூடிய விமான படைத்தளங்களின் செயற்கைக்கோள் வரைபடத்தை, யுக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) தலைவர் வாசில் மாலியுக் பார்த்துக்கொண்டிருப்பதை, தாக்குதலுக்குப் பிறகு வெளியிடப்பட்ட படங்கள் காட்டின.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த தாக்குதல் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?

யுக்ரேனின் ராணுவப் புலனாய்வு அமைப்பான எஸ்பியூவின் (SBU) மூலம் ஊடகங்களுக்குக் கசிந்த தகவல்களின் அடிப்படையில், ட்ரோன்கள் மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, லாரிகள் வழியாக ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டன.

தொலைதூரத்தில் இருந்தபடியே திறக்கப்படக் கூடிய கூரைகளின் கீழ், இந்த பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

பின்னர் விமான நிலையங்களுக்கு இந்த லாரிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அவற்றின் ஓட்டுநர்களுக்கு லாரிகளில் என்ன பொருட்கள் உள்ளன என்பது குறித்து எதுவும் தெரியாது. அங்கு சென்றதும், இலக்குகளை நோக்கி குறிவைத்து,ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.

ஒரு லாரியிலிருந்து ட்ரோன் வெளியே பறப்பதை இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று காட்டுகிறது.

ரஷ்ய அரசு ஊடகமான ஆர்ஐஏ (RIA) நோவோஸ்டியிடம் பேசிய ஒரு லாரி ஓட்டுநர், தானும் மற்ற ஓட்டுநர்களும் ட்ரோன் பறப்பதைத் தடுக்க முயன்று, அதன் மீது கற்களை எறிந்ததாகக் கூறினார்.

ரஷ்ய டெலிகிராம் சேனலான “பாசா”வின் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளின்படி, பல லாரி ஓட்டுநர்கள் ரஷ்யாவின் வெவ்வேறு இடங்களுக்கு பெட்டிகளை வழங்குவதற்காக வணிகர்களால் முன்பதிவு செய்யப்பட்டதாகக் கூறினர்.

சில ஓட்டுநர்கள், லாரியை எங்கு நிறுத்துவது என்பது குறித்து தொலைபேசியில் வழிகாட்டுதல்கள் கிடைத்ததாகக் கூறினர்.

அந்த ஓட்டுனர்கள் அவ்வாறு செய்தபோது, ​​ட்ரோன்கள் வெளியே வருவதைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர்.

துணிச்சலாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதலில் 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலுக்குத் தயாராக “ஒரு வருடம், ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது நாட்கள்” ஆனது என்றும் இந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்பார்வையிடும் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு, சமூக ஊடகங்களில் கூறினார்.

தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் ஒன்று எஃஎஸ்பி (FSB-ரஷ்ய பாதுகாப்பு சேவை) அலுவலகத்திற்கு அடுத்ததாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் சிலர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது, ஆனால் இந்தத் தாக்குதலுக்கு உதவியவர்கள் “ரஷ்ய எல்லையிலிருந்து வெளியேற்றப்பட்டு… இப்போது பாதுகாப்பாக உள்ளனர்” என்று ஸெலன்ஸ்கி தெரிவித்துளார்.

இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உஸ்ட்-குட் நகரின் உள்ளூர் அதிகாரிகள், பெலாயா ராணுவ விமானப்படை தளத்தின் மீதான ட்ரோன் தாக்குதல் தொடர்பாக யுக்ரேன் வம்சாவளியைச் சேர்ந்த 37 வயது நபரைத் தேடுவதாக ஒரு டெலிகிராம் பதிவில் தெரிவித்தனர். ஆனால் அந்த டெலிகிராம் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய ராணுவ விமானங்களை பழுதுபார்ப்பது ரஷ்யாவிற்கு கடினமாக இருக்கும் என்று யுக்ரேன் கூறுகிறது.மரத்தால் ஆன ஒரு அறையில் டஜன் கணக்கான கருப்பு நிற ட்ரோன்கள் சேமிக்கப்பட்டுள்ளதை யுக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) பகிர்ந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.

ரஷ்ய ராணுவம் குறித்து பதிவிடும் பதிவர்கள் இதை செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள ஒரு கிடங்காக அடையாளம் கண்டுள்ளனர்.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ட்ரோன் நிபுணர் ஸ்டீவ் ரைட்டின் கூற்றுப்படி, இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் கனரக வெடிபொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய எளிய குவாட்காப்டர்கள் என அறியப்படுகின்றது.

ட்ரோன்கள் ரஷ்யாவிற்குள் கடத்தப்பட்டு, பின்னர் செயற்கைக்கோள் அல்லது இணைய இணைப்புகள் வழியாக தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்ட விதம் தான் இந்த தாக்குதலை அசாதாரணமாக்கியது என்கிறார் ரைட்.

117 ட்ரோன்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பைலட்டுகள் இருந்தனர் என்று யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி கூறியிருந்தார்.

ட்ரோன்களால் ஜிபிஎஸ்ஸைப் பயன்படுத்தி பறக்க முடியும், மேலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் உள்ளூர் ரஷ்ய ஜாமிங் நுட்பங்களையும் தவிர்க்கலாம் என்கிறார் ரைட்.

யுக்ரேன், அந்த ட்ரோன்களை எங்கிருந்து பெற்றது என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

ஆனால் போர் தொடங்கியதிலிருந்து அது ட்ரோன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம்.

இலக்கு

பட மூலாதாரம், SBU

படக்குறிப்பு, மரப் பெட்டியில் மறைத்து வைத்து ட்ரோன்கள் கொண்டு செல்லப்பட்டதாக எஸ்பியூ கூறுகிறது.”ரஷ்யா பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது, அது நியாயமானது” என்று ஸெலன்ஸ்கி தனது உரையில் கூறினார்.

யுக்ரேனின் கூற்றுப்படி, நீண்ட தூரம் ஏவக்கூடிய ரஷ்யாவின் போர் விமானங்களில் 41 விமானங்கள் குறிவைக்கப்பட்டு “குறைந்தபட்சம்” அவற்றில் 13 அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் சில விமானங்கள் சேதமடைந்ததாக மட்டுமே ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

மர்மன்ஸ்கில் உள்ள ஒலெனெகோர்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் உள்ள பெலாயா விமானத் தளங்களில் காணப்பட்ட சேதமடைந்த விமானங்களை, பிபிசியால் சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன.

நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய போர் விமானங்கள் இத்தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் Tu-95, Tu-22 மற்றும் Tu-160 ஆகிய போர் விமானங்களை ரஷ்யா தற்போது உற்பத்தி செய்வதில்லை என்பதால், அவற்றை பழுதுபார்ப்பது கடினம். அவற்றை மாற்றவும் முடியாது.

பெலாயா விமான தளத்தில் , நீண்டதூர இலக்குகளைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட நான்கு ரஷ்ய போர் விமானங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்பதை கேபெல்லா ஸ்பேஸால் பகிரப்பட்ட ரேடார் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

“போரின் விதிகள் மற்றும் மரபுகளுக்கு இணங்க, நாங்கள் முற்றிலும் முறையான இலக்குகளைத் தங்கினோம். அதாவது அமைதியான எங்களது நகரங்களைத் தாக்கிய ராணுவ விமானநிலையங்கள் மற்றும் விமானங்களைத் தாக்கினோம்.” என்று SBU தலைவர் வாசில் மாலியுக் கூறினார்.

இராணுவ புலனாய்வு விமானங்களும் குறிவைக்கப்பட்டன

பட மூலாதாரம், Ukraine Presidential Press Service/EPA-EFE/Shutterstock

படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ விமான தளங்களில் நடந்த நடவடிக்கை குறித்து யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு பாதுகாப்பு சேவை (SSU) தலைவர் வாசில் மாலியுக் தகவல் தெரிவித்தார்.யுக்ரேனிய ஏவுகணைகளை இடைமறித்து தாக்குதல் நடத்தக்கூடிய திறனை மேம்படுத்தும், ரஷ்யாவின் ராணுவ உளவு விமானமான ஏ-50 இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டது.

ரஷ்யாவில் எத்தனை ஏ-50 கள் உள்ளன என்று தெரியவில்லை.

ஆனால் எட்டு ஏ-50 கள் உள்ளன என்று பிப்ரவரி 2024 இல் யுக்ரேனிய ராணுவ உளவுத்துறைத் தலைவர் கிரிலோ புடனோவ் அந்த எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்.

எனவே எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், ரஷ்யாவிற்கு அது பெரும் இழப்பு தான்.

“ஸ்பைடர் வெப்” தாக்குதல், ரஷ்யாவிற்கு 7 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியதாக எஸ்பியூ சமூக ஊடகங்களில் கூறியது.

ரஷ்ய அரசு ஊடகங்கள் இந்தத் தாக்குதல் குறித்து மௌனம் காத்து வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமையன்று முக்கிய நேரங்களில் வெளியான தொலைக்காட்சி செய்திகள், பிராந்திய அதிகாரிகளின் அறிக்கைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் வெளியிட்டன.

திங்கட்கிழமைக்குள், இந்தச் செய்தி செய்தித்தாள்களில் இருந்து முற்றிலும் மறைந்துவிட்டது.

இந்த நடவடிக்கை குறித்து இணையத்திலும் பிற இடங்களிலும் யுக்ரேனியர்கள் பரவலாகப் பாராட்டி வருகின்றனர்.

ஒருவர் இதை

“மிகப்பெரிய சாதனை” என்று விவரித்துள்ளார்.

“நிச்சயமாக, எல்லாவற்றையும் இப்போதே சொல்ல முடியாது, ஆனால் யுக்ரேன் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறும்” என்று ஸெலன்ஸ்கி டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு