Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், மனோஜ் சதுர்வேதிபதவி, பிபிசி ஹிந்திக்காக3 ஜூன் 2025, 11:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர்
ஒரு ஐபிஎல் கோப்பைக்காகக் கடந்த 17 ஆண்டுகளாக விராட் கோலி காத்திருக்கிறார். உண்மையில், இந்த 17 ஆண்டுகளும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு உணர்ச்சிபூர்வமானதாகவும், கொஞ்சமும் இரக்கமற்றதாகவும் இருந்தன.
இறுதிப் போட்டிகளில் விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஒரு கேப்டனை, விராட் கோலி இன்றைய இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளப் போகிறார்.
ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த ஐந்து ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), டெல்லி கேபிடல்ஸ் மற்றும் இப்போது பஞ்சாப் கிங்ஸ் என மூன்று அணிகளை இறுதிப் போட்டிக்கு வழிநடத்தியுள்ளார். இதில், கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாம்பியனாக்கினார்.
ஆர்சிபி அணியைத் தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதால், இந்த முறை ஐபிஎல் தனது வரலாற்றில் ஒரு புதிய சாம்பியனைப் பெறப் போகிறது என்பது உறுதி.
ஆர்சிபி அணி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த அணி 2009, 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ் அணி 2014ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது, அப்போது அவர்கள் கிங்ஸ் XI பஞ்சாப் என்ற பெயரில் விளையாடினர். இறுதிப் போட்டியில் கேகேஆர் அணியிடம் தோற்றனர்.
ஆர்சிபியின் கோப்பைக் கனவு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த சீசனில் விராட் கோலி தனது ஆர்.சி.பி அணிக்காக இதுவரை 614 ரன்கள் எடுத்துள்ளார்.ஆர்சிபி ஆகட்டும் அல்லது பஞ்சாப் கிங்ஸ் ஆகட்டும், விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தவிர இரண்டு அணிகளிலும் சில நல்ல மேட்ச் வின்னர்கள் உள்ளனர், ஆனால் இன்னும் இந்த இறுதிப் போட்டி இந்த இரண்டு வீரர்களுக்கு இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
உண்மையில், அவர்கள் இருவரும் தங்கள் அணிகளின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறார்கள், மேலும் அவர்கள் விக்கெட்டில் நிற்பது, போட்டியின் போக்கையே மாற்றுகிறது.
விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் தனது சிறந்த ஆட்டத்திற்காக அறியப்பட்டவர். இந்த முறையும் அவர் 614 ரன்களுடன் ஆர்சிபி அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக இருக்கிறார்.
இருப்பினும், இந்த முறை விராட்டை ஆதரிக்கும் பேட்ஸ்மேன்களில் பில் சால்ட், கேப்டன் ரஜத் பட்டிதர், மயங்க் அகர்வால் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரும் அடங்குவர்.
இந்த பேட்ஸ்மேன்களின் அணியில் இருப்பதால் தான் விராட் கோலியின் ஆர்சிபி இந்த முறை சாம்பியன்களைப் போல விளையாடியுள்ளது.
அவர்கள் சொந்த ஊருக்கு (பெங்களூரு) வெளியே வெல்ல முடியாதவர்களாகவே உள்ளனர். இந்த இறுதிப் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிறது, எனவே ஆர்சிபி அணியைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பஞ்சாபின் நம்பிக்கையை மீட்டெடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை 6 அரைசதங்களுடன் 603 ரன்கள் எடுத்துள்ளார்.ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு முக்கிய வீரராகக் கருதப்படுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர்-2 போட்டியில் தனது இன்னிங்ஸ் மூலம் இதை நிரூபித்துள்ளார்.
அந்த ஆட்டத்தில், 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸின் தகர்க்கப்பட்ட நம்பிக்கையை வெற்றியாக மாற்றினார்.
இந்த இன்னிங்ஸின் போது, தேவைப்பட்டால் தன்னால் ஆக்ரோஷமான பாணியையும் வெளிப்படுத்தமுடியும் என்பதைக் காட்டினார் ஷ்ரேயாஸ், எட்டு சிக்ஸர்களை அடித்து அதை நிரூபித்தார்.
விராட்டைப் போலவே, ஷ்ரேயாஸும் இந்த சீசனில் தொடர்ந்து ரன்கள் எடுத்து வருகிறார். இதுவரை ஆறு அரைசதங்களுடன் 603 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரியும் ஏறக்குறைய விராட்டைப் போலவே உள்ளது, அதாவது 54.81. இந்த ஐபிஎல் சீசனில் விராட் மற்றும் ஷ்ரேயாஸ் ரன்கள் எடுப்பதில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளனர்.
ஷ்ரேயாஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். கடந்த ஆண்டு கே.கே.ஆரின் கேப்டனாக, இதைச் சாதித்தார். மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் இவர்தான்.
நரேந்திர மோதி மைதானத்தில் விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த மைதானத்தில் ஆறு போட்டிகளில் விளையாடிய விராட், இரண்டு அரை சதங்கள் உட்பட 219 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் அவர் எடுத்த 70 ரன்கள் அவரது சிறந்த ஸ்கோராகும்.
இந்த மைதானத்தில் ஷ்ரேயாஸ் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். மூன்றிலும் அரைசதம் அடித்து, 242 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ஒரு சதத்தை தவறவிட்டார்.
இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த மூன்று போட்டிகளில், ஷ்ரேயாஸால் எந்தப் போட்டியிலும் ரன்கள் எடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் விராட் கோலி ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த சீசனில், ஆர்சிபியின் பில் சால்ட் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்வதைக் காண முடிகிறது.ஆர்சிபியின் வெற்றி, தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் செயல்திறனைப் பொறுத்து உள்ளது.
பவர்பிளேயில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக சால்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு வரை விளையாடிய ஃபாஃப் டு பிளெசிஸின் ஆட்டங்களை மறக்கடிப்பதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை 12 போட்டிகளில் 387 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 175க்கு மேல் உள்ளது.
தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் விராட் மீதான அழுத்தம் அதிகரிக்க அவர் அனுமதிக்கவில்லை. மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக முதல் 30 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து விராட்டை அழுத்தமின்றி வைத்திருந்தது போல.
தொடக்க வீரர்களாக இறங்கும் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடியே இந்த சீசனின் இரண்டாவது வெற்றிகரமான ஜோடியாக உள்ளது. முதல் ஜோடி குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மான் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரின் வசம் உள்ளது. இந்த சீசனில் விராட் கோலிக்குப் பிறகு ஆர்சிபி அணிக்காக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் சால்ட் ஆவார்.
ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சு ஆர்சிபி அணியின் பயணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதுவரை 11 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் அவரது எகானமி ரேட் 8.30 ஆகும்.
குவாலிஃபையர்-1 இல் பஞ்சாப் கிங்ஸ் அவரது மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொண்டது. இந்த போட்டியில், பவர்பிளேயில் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்தார் ஹேசில்வுட்.
ஆட்டத்தை மாற்றக்கூடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஜோடி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பஞ்சாப் கிங்ஸின் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஜோடி பஞ்சாப் கிங்ஸின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த ஜோடி இந்த சீசனில் தங்களுடைய ஆக்ரோஷமான பாணியால் பலமுறை பேசப்பட்டனர். இந்த ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக 360 ரன்கள் எடுத்துள்ளது, இதில் இரண்டு அரைசத பார்ட்னர்ஷிப்களும் அடங்கும்.
கே.கே.ஆருக்கு எதிரான ஆட்டத்தில், மழை காரணமாக மெதுவாக ஆடக்கூடிய வகையில் இருந்த விக்கெட்டில் 120 ரன்கள் எடுத்ததில் இருந்து, இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தை புரிந்து கொள்ளலாம். வெறும் 72 பந்துகளில் 120 ரன்கள் எட்டப்பட்டன.
இந்த ஜோடி பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக ஆடினால், போட்டியை எதிரணி அணியிடமிருந்து பறிக்கும் திறன் கொண்டது.
முன்னதாக பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஜோஷ் இங்கிலிஸ் தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் பிரியான்ஷுவுடன் பிரப்சிம்ரான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று ஷ்ரேயாஸ் விரும்பினார். ஷ்ரேயாஸின் முடிவு எதிர்பார்த்த பலனைத் தருகிறது என்றே சொல்லலாம்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு