Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கில் இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள் – எங்கே செல்கின்றன?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பட்டாம்பூச்சிகளை யாருக்குத்தான் பிடிக்காது. அத்தகைய பட்டாம்பூச்சிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்லும் வலசை மிகவும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு.
ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் செல்லும் பட்டாம்பூச்சிகளின் வலசை குறித்து இங்கு வெகு குறைவான மக்களே அறிந்துள்ளனர்.
பட்டாம்பூச்சி வலசை எவ்வாறு, எங்கே, எப்படி நடக்கின்றன? இந்த வலசையில் கோயமுத்தூர் எத்தகைய முக்கியப் பங்கை வகிக்கிறது? தமிழ்நாட்டில் உள்ள பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
பட்டாம்பூச்சி வலசை என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் நான்கு வகையான பட்டாம்பூச்சிகள் நீண்டதூர வலசை செல்கின்றனஒவ்வோர் ஆண்டும் பருவமழைக்கு முன்பு, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள், சமவெளிக்கு வந்து, அங்கிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளை அடைகின்றன. நீலகிரி, கல்லார், ஆனைக்கட்டி, சத்தியமங்கலம் போன்ற இடங்களில் இந்த வலசைகளைக் காண இயலும்.
ஒவ்வோர் ஆண்டும் இந்த வலசையைக் கண்காணித்து, முறையாக ஆய்வுகளை நடத்தி வருகின்றனர் ‘தி நேச்சர் அண்ட் பட்டர்ப்ளை சொசைட்டி’ அமைப்பினர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதன் தலைவராக இருக்கும் பாவேந்தன், பிபிசி தமிழிடம் பேசும்போது, “பட்டாம்பூச்சி வலசையானது ஆண்டுக்கு இரு முறை நடைபெறுகிறது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் துவங்கி, ஜூன் மாதம் முதல் வாரம் தென்மேற்குப் பருவமழைக்கு முன்பும், தென்மேற்குப் பருவமழை முடிந்த பிறகும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து மீண்டும் ஒரு வலசையும் நடைபெறும்.
பருவமழையின் தீவிரத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், உணவு, தங்குமிடம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த வலைசை நடைபெறுகிறது. மேற்குத் தொடர்ச்சியில் இருந்து வலசை செல்லும் பட்டாம்பூச்சிகளின் மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறையைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகளே மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குத் திரும்பி வரும் என்பது குறிப்பிடத்தக்கது,” என்று கூறினார்.
வலசைகளின் வகைகளும், தமிழகத்தில் வலசை செல்லும் பட்டாம்பூச்சிகளும்
பட மூலாதாரம், RajeshGopinath/ifoundbutterflies.org
படக்குறிப்பு, கோவாவின் மாநில பட்டாம்பூச்சியான ஐடியா மலபாரிக்கா மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்று.வலசைகளின் வகைகள் குறித்துப் பேசும்போது பாவேந்தன் தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு வலசைகளைப் பட்டியலிட்டார்.
“நீண்டதூர வலசை, குறைந்த தூர வலசை மற்றும் குறைந்த உயரத்தில் இருந்து அதிக உயரத்திற்குச் செல்லும் வலசை என்று இதில் பல வகைகள் உள்ளன. பருவமழைக்கு முன்னதாக நடைபெறுவது நீண்டதூர வலசையாகவே உள்ளது,” என்று குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்தமட்டில் இந்த பட்டாம்பூச்சிகள் 200 முதல் 300 கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொள்கின்றன.
தமிழ்நாட்டில், பருவமழைக் காலத்தில் நான்கு வகை பட்டாம்பூச்சிகள் மட்டுமே அதிக அளவில் வலசை மேற்கொள்கின்றன. “மில்க்வீட் (milkweed) வகை செடிகளில் முட்டையிடும் டைனேனே (Danainae) துணைக் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள நான்கு வகை பட்டாம்பூச்சிகள் இந்த நீண்டதூர வலசையை மேற்கொள்கின்றன. முறையே, ப்ளூ டைகர் (Blue Tiger), டார்க் ப்ளூ டைகர் (Dark Blue Tiger), டபுள் பிராண்டட் க்ரோஸ் (Double Branded Crows) மற்றும் காமன் க்ரோஸ் (Common Crows) பட்டாம்பூச்சிகள்தான் அவை,” என்று பாவேந்தன் விளக்கினார்.
“இந்த பட்டாம்பூச்சிகளின் வலசையானது ஒரே சீராக இருக்காது. வலசை செல்லும் நூறு பட்டாம்பூச்சிகளை கணக்கில் கொண்டால் அதில் இந்த நான்கு வகையும் சரியான அளவில் இடம் பெற்றிருக்காது. ஓர் ஆண்டு ‘க்ரோஸ்களின்’ எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஓராண்டு ‘ப்ளூ டைகரின்’ எண்ணிக்கை மட்டும் அதிகமாக இருக்கலாம். இது சீரான தன்மையில் இருப்பதில்லை,” என்று அவர் தெரிவிக்கிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்த ஆண்டு வலசை நடைபெற்றதா?
“தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களிலும் வலசை நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வலசை நடக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். கோவை – ஈரோடு எல்லைப் பகுதியில் வெகு சில இடங்களில் மட்டுமே வலசை நடைபெற்றது பதிவு செய்யப்பட்டது,” என்று கூறுகிறார் பாவேந்தன்.
தற்போது பருவமழை துவங்கிவிட்ட காரணத்தால் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் வலசை நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான் என்றும் அவர் கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் ஶ்ரீனிவாச ரெட்டி, தமிழகத்தில் பரவலாக சில இடங்களில் பட்டாம்பூச்சி வலசை நடைபெற்றதாகக் கூறினார்.
முந்தைய ஆண்டுகளில், குறைந்த அளவே வலசை நடைபெற்றதற்கு அல்லது வலசை முற்றிலுமாக நடைபெறாமல் போனதற்கான காரணம் குறித்துக் கேட்டபோது, “பட்டாம்பூச்சி இங்கு அதிகமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படாத உயிரினமாக இருக்கிறது. வலசையின் தன்மை மற்றும் நடைபெறாமல் போவதற்கான காரணங்கள் குறித்து நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
பட்டாம்பூச்சிகளின் இருப்பு, எண்ணிக்கை எதைச் சுட்டிக்காட்டுகிறது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் 329 பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.”சுற்றுச்சூழல் சிறப்பாக இருப்பதன் ஒரு அறிகுறியே பட்டாம்பூச்சிகளின் இருப்பு என்று கூறலாம். ஹோஸ்ட் ப்ளாண்ட் (Host Plant) எனப்படும் தாவரங்கள் அதிகமாகவும், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு போன்றவை குறைவாகவும், மாசில்லாத இடங்களிலும் பட்டாம்பூச்சிகளை அதிகமாகக் காணலாம்.
ஓர் இடத்தில் பட்டாம்பூச்சி இருந்தால் அங்கே சுற்றுச்சூழல் மேம்பட்ட நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். நகர்ப்புறங்களில் பட்டாம்பூச்சிகள் குறைவாக இருப்பதற்கும் இதுவே காரணம். தமிழ்நாட்டில் புற்களை உண்டு உயிர் வாழும் பட்டாம்பூச்சிகள்கூட உண்டு. ஆனால் அழகு என்று கூறி அதை நாம் வெட்டிவிடுகிறோம்.
கிராமப்புறங்களில் உள்ள வயல்களில் உங்களால் பட்டாம்பூச்சிகளைப் பார்க்க இயலாது என்றால் அங்கே பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை ஒரு பிராந்தியத்தில் சில இடங்களில் செறிவாகவும், சில இடங்களில் குறைவாகவும் உள்ளது,” என்று கூறுகிறார் பாவேந்தன்.
காலநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்வு காரணமாக வலசை மற்றும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியபோது, “கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பட்டாம்பூச்சி வலசையை ஆவணப்படுத்தி வருகிறோம். பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. காப்புக் காடுகளில் உள்ள பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை மற்றும் வகைகளில் கண்கூடாகக் காணும் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
பட்டாம்பூச்சிகள் குறித்துப் போதுமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லையா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெப்பநிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக மோனார்க் பட்டாம்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி மற்றும் வலசை முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது மற்ற பெரிய பெரிய விலங்குகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்புக்கு காட்டப்படும் ஆர்வம் பட்டாம்பூச்சிகள் பற்றி அறிந்து கொள்வதில் காட்டப்படுவதில்லை, என்று கூறுகிறார் தி நேச்சர் அண்ட் பட்டர்ஃப்ளை சொசைட்டியின் தலைவர் பாவேந்தேன்.
ஶ்ரீனிவாச ரெட்டி இதுகுறித்துக் குறிப்பிடும்போது, “இங்கு பெரும்பாலான நேரங்களில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள், வலசை செல்லும் பட்டாம்பூச்சிகளின் வகை மற்றும் செல்லும் திசை ஆகியவற்றை மட்டுமே கணக்கெடுக்கிறோம். அதிக மக்கள் ஈடுபாடானது அதன் இயற்கை செயல்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும்,” என்று கூறினார்.
ஆனால் மக்களிடம் பட்டாம்பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வனத்துறையினருக்கு உள்ளது என்று தெரிவிக்கிறார், ஆனைக்கட்டி மலையில் பட்டாம்பூச்சிகள் குறித்து ஆய்வு நடத்திய, ஆராய்ச்சி மாணவியும், சாலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் முன்னாள் பணியாளருமான ஶ்ரீ சௌமியா முருகேஷன்.
“தமிழ்நாட்டில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இங்கு 329 பட்டாம்பூச்சியினங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவற்றில் 327 பட்டாம்பூச்சியினங்களை ஆர்வலர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். ஆனால் நமக்குத் தெரிந்ததெல்லாம் ராஜா பட்டாம்பூச்சியும், எம்.ஜி.ஆர் பட்டாம்பூச்சியும்தான். நூற்றுக்கணக்கான வண்ணமயமான பட்டாம்பூச்சிகளின் வாழ்விடமாக கோயம்புத்தூரும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் இருக்கின்றன என்பதே பலருக்கும் தெரியவில்லை. அதற்குக் காரணம், அதுபற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஆராய்ச்சியாளர்கள், வன ஆர்வலர்கள் ஏற்படுத்த தவறிவிட்டனர் என்பதுதான்.
ஒவ்வொரு கல்லூரியிலும் எக்கோ-க்ளப்கள் உள்ளன. மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து கற்றுக்கொடுக்க இயற்கை நடை போன்றவற்றை, தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து ஏற்படுத்தலாம். ஆனால் இவை அனைத்தும் பொதுவாக பேருயிர்களான யானைகள் மற்றும் புலிகளுக்குத்தான் நடக்கிறது. சில நேரங்களில் பறவையினங்களைப் பட்டியலிட ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பட்டாம்பூச்சிகளில் அது பெரும்பாலும் மேற்கொள்ளப்படுவது இல்லை,” என்று விளக்குகிறார் ஶ்ரீசௌமியா.
தமிழ்நாட்டின் பட்டாம்பூச்சிகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் ஒருவர் கட்டாயமாக கோவையின் கல்லார் மற்றும் திருச்சியின் பட்டாம்பூச்சி பூங்காவை நிச்சயமாகப் பார்வையிட வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
தனித்துவமான பட்டாம்பூச்சிகளின் தாயகமாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பட்டாம்பூச்சி இனமான, சதர்ன் பேர்ட்விங் பட்டாம்பூச்சி தென்னிந்தியாவில் மட்டுமே பார்க்க இயலும். மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பிறப்பிடமாகக் கொண்ட பட்டாம்பூச்சிகளின் தனித்துவம் குறித்து சில ஆச்சர்யம் அளிக்கும் விஷயங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் ஶ்ரீ சௌமியா.
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பட்டாம்பூச்சி இனமான, சதர்ன் பேர்ட்விங் (Southern birdwing) பட்டாம்பூச்சி தென்னிந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணக் கிடைக்கும்.மற்றொரு பெரிய வகை பட்டாம்பூச்சி ஐடியா மலபாரிகா. பறக்கும் போது பட்டம் போல போன்று பறக்கும் என்பதால் “பேப்பர்காத்தாடி” என்று இதற்கு பட்டப்பெயர் உண்டு. வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் காணப்படும் இந்த பட்டாம்பூச்சி பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிக ஈரப்பதமான காடுகளில் மட்டுமே காணப்படும். அழிவுக்கு அருகில் இருக்கும் (Near Threatened) உயிரினமாக இந்த பட்டாம்பூச்சியை ஐ.யு.சி.என் அறிவித்துள்ளது. இதைப் பாதுகாக்கும் நோக்கிலும், இந்த பட்டாம்பூச்சி குறித்துப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கோவாவில் இதை மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்துள்ளனர். இதுபோன்ற தனிச்சிறப்புகள் கொண்ட பட்டாம்பூச்சிகளும் தமிழ்நாட்டில் உள்ளன. “முறையாக ஆவணப்படுத்துவது மட்டுமின்றி, மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினால், அவர்களைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பல்லுயிர்களும் வந்து வாழும் பகுதிகளாக மாற்ற மக்கள் சிறிதேனும் முயற்சிகள் மேற்கொள்வார்கள்,” என்று கூறுகிறார் அவர்.
“விதைப் பரவல்கள் என்பது பேருயிர்களால் நடைபெறுகிறது என்றால் மகரந்தச் சேர்க்கை என்பது பட்டாம்பூச்சிகளால் அதிகமாக நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொண்டால், பட்டாம்பூச்சிகளால் இந்தச் சூழலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள இயலும்.”
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு