Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பொள்ளாச்சி மனநலம் குன்றியவர் கொலையில் என்ன நடந்தது? மனநல காப்பகங்களை கண்காணிப்பது யார்?
பட மூலாதாரம், Yuthira Website
படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்25 நிமிடங்களுக்கு முன்னர்
பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில், ‘யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில், மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது.
ஆட்டிசம், டிஸ்லெக்சியா, டவுன்சிண்ட்ரோம் உள்ளிட்ட 5 வகையான மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கான காப்பகம் மற்றும் பயிற்சி மையம் என்ற பெயரில் இதற்கு இணையத்திலும் ஏராளமான புகைப்படங்களுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்இணைய விளம்பரத்தில் ஈர்க்கும் மனநல காப்பகம்
நட்சத்திர விடுதிகளுக்கு இணையான வசதிகளுடன் கூடிய கட்டடம், உள்விளையாட்டு அரங்கம், சிறப்புப் பயிற்சி மையங்கள், திறந்தவெளி மைதானங்கள், அதிநவீன பயிற்சி வகுப்பறைகள் என இந்தக் காப்பகத்தின் விளம்பரமே எல்லோரையும் ஈர்ப்பதாக உள்ளது.
இதை மனநல ஆலோசகரான டாக்டர் கவிதா, அவருடைய கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, ஷாஜி ஆகியோர் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்து நடத்தி வந்துள்ளனர். இங்கு மனநல பயிற்சியளிக்கும் பயிற்றுநர்கள், உடல் திறன் தேர்வுக்கான பயிற்சியாளர்கள், காப்பாளர்கள், பராமரிப்பாளர்கள் எனப் பலர் பணியாற்றி வந்தனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்தக் காப்பகத்தில், கோவை மாவட்டம் சோமனுார் அருகேயுள்ள கரவளி மாதப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் வருண் காந்த் (வயது 24) உள்பட 25க்கும் மேற்பட்டோர் மனநல சிகிச்சைக்காகத் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த மே 13ஆம் தேதி அவர்களை ஆழியாறு அணைக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றபோது, வருண் காந்த் காணாமல் போய்விட்டதாக, ரவிக்குமாருக்கு காப்பகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி ஆழியாறு காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு ரவிக்குமாரும், அவரின் மனைவியும் காப்பகத்திற்கு வந்து பார்த்துள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்
பட மூலாதாரம், TNPOLICE
படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட வருண் காந்த் அப்போது அங்கிருந்த சிலர் அளித்த தகவலின்பேரில், மே 13ஆம் தேதி பொள்ளாச்சிக்குச் சென்றுள்ளார் ரவிக்குமார்.
அங்கே காப்பகத்தில் இருந்து தனது மகன் வருண் காந்த் வாகனத்தில் ஏறுகின்ற காட்சி, காப்பகத்திலுள்ள சிசிடிவியில் இருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது, அவர் அங்கிருந்து ஏறவில்லை என்பதும், அதற்கு முதல் நாளிலேயே வருண் காந்த்-ஐ காப்பக ஊழியர்கள் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு காப்பக நிர்வாகிகள் மீது, மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் ரவிக்குமார் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து போலீசார், காப்பக ஊழியர்களிடம் விசாரித்தபோதுதான், வருண் காந்த் கொன்று புதைக்கப்பட்ட விவகாரம் வெளியில் வந்துள்ளது.
அதுகுறித்த விவரங்களை வழங்கிய மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் “கடந்த மே 12ஆம் தேதியன்று, வருண் காந்தை காப்பக ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார். ஆனால் அதை வருணின் பெற்றோர் மற்றும் காவல்துறையிடம் தெரிவிக்காமல், மறைக்க முயன்று, டாக்டர் கவிதாவுக்கு சொந்தமான நடுப்புணி பி.நாகூர் பகுதியிலுள்ள தோட்டத்தில் குழி தோண்டி வருண் காந்தின் உடலைப் புதைத்துள்ளனர்.
அதன் பிறகு மே 13ஆம் தேதியன்று, ஆழியாறுக்கு காப்பகத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் சுற்றுலா அழைத்துச் செல்வது போல அழைத்துச் சென்று, அங்கே வைத்து வருண் காணாமல் போய்விட்டதாகப் புகார் கொடுக்கவும் திட்டமிட்டு, அதையே செய்துள்ளனர்,” என்று தெரிவித்தனர்.
தலைமறைவான நிர்வாகிகள்
பட மூலாதாரம், TN Police
படக்குறிப்பு, வருண் காந்தின் உடல் புதைக்கப்பட்ட இடம் இந்தக் கொலை தொடர்பாக, முதலில் காப்பக நிர்வாகி கிரி ராம், கேர் டேக்கர் நிதீஷ், பணியாளர்கள் சதீஷ், ஷீலா, ரங்கநாயகி, அறக்கட்டளை நிர்வாகி ஷாஜியின் தந்தை செந்தில் பாபு ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
காப்பக அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் கவிதா, அவருடைய கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, ஷாஜி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அவர்களைப் பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஐந்து பேரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இறுதியில் 5 பேரும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேர் மீதும் கொலை, கொலையை மறைத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மகாலிங்கபுரம் போலீசார் தெரிவித்தனர்.
”தாக்கப்பட்டதில் வருண் காந்த் உயிரிழந்ததும் காவல்துறையிடம் தெரிவித்திருந்தால், அவரைத் தாக்கியவர்கள் மீது மட்டும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அறக்கட்டளை நிர்வாகிகள், காப்பகப் பணியாளர்கள் என எல்லோரும் சேர்ந்து இந்தக் கொலையை மறைப்பதற்கு முயற்சி எடுத்து, இந்த நாடகத்தை அரங்கேற்றியதால்தான் இப்போது 11 பேரையும் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரி கைது
பட மூலாதாரம், TN Police
படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட காப்பக அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் கவிதா, அவரது கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி மற்றும் ஸ்ரேயா (இடப்புறத்தில் இருந்து)இந்தச் சம்பவத்தில் கொலையில் தொடர்புடையதாக 11 பேர் கைது செய்யப்பட்டதுடன், எதிர்பாராத திருப்பமாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் பணம் மற்றும் நகையைக் கையாடல் செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காப்பக அறக்கட்டளை நிர்வாகிகளைக் கைது செய்தபோது, அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 18.5 சவரன் நகை ஆகியவை தனிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அதை முறைப்படி ஒப்படைக்காமல் தனிப்படையைச் சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும், அவருடன் பணத்தைப் பங்கிட்டுக் கொண்ட மற்றொரு துணை ஆய்வாளரான மகாராஜா இருவரும் கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்த விவாதங்களும் சூடு பிடித்துள்ளன.
மனநல காப்பகங்கள் குறித்து எழும் அச்சம்
மனநலம் குன்றிய இளைஞர் வருண் காந்த் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. கொலை செய்யும் அளவுக்கு அவரைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஊடகங்களில் பல தரப்பினரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி, ”வருண் காந்த் காப்பகத்திலுள்ள மற்றவர்களைவிட, எப்போதுமே விவாதம் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். கடந்த வாரத்தில் ஒரு நாள் அவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை வெளியில் அழைத்துச் சென்றதால், கோபமாகிக் கத்தியுள்ளார். அப்போது காப்பக நிர்வாகியின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார். அதில்தான் மிகவும் கோபமடைந்து, எல்லோரும் சேர்ந்து குரூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்” என்று விவரித்தார்.
இதற்கு முன்பாக வருண் காந்த், கோவை சரவணம்பட்டியில் உள்ள கெளமாரம் பிரசாந்தி அகாடமி என்ற மனநல காப்பகத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். யுதிரா மனநல காப்பகத்தின் வசதிகளைப் பார்த்துவிட்டு, கடந்த பிப்ரவரியில்தான் வருண் காந்தை அவருடைய பெற்றோர் இங்கு சேர்த்துள்ளனர்.
ஆனால் அவருக்கு அங்கு பல பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததால், இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் பழைய காப்பகத்தில் சேர்ப்பதற்கு அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகத் தங்கள் விசாரணையில் தெரிய வந்ததாக மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய கெளமாரம் பிரசாந்தி அகாடமி மனநல காப்பகத்தின் பிசியோதெரபிஸ்ட் மாதையன், ”வருண் காந்த் அதிகமாகப் பேசுவார். எங்களிடம் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஒருபோதும் முரட்டுத்தனமாகவோ, தவறாகவோ நடந்து கொண்டதில்லை. பயிற்சி கொடுத்தால் நன்றாகச் செய்வார். எங்களிடம் இருந்தபோது யார் மீதும் எச்சில் துப்பியதில்லை,” என்றார்.
அரசின் அனுமதி கிடைத்த அதே நாளில் நடந்த கொலை
பட மூலாதாரம், Yuthira website
படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட் முகப்பு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, இந்த மனநலக் காப்பகம், அரசின் நிதியுதவி ஏதுமின்றி சுயநிதியில் நடந்துள்ளது.
ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாதாந்திர கட்டணம் வசூலித்துள்ளனர். வருணின் பெற்றோர் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம், உணவு, விளையாட்டுப் பொருள் என எது வாங்கினாலும் அனைவருக்கும் சேர்த்தே வாங்கி வருவார்கள் என்றனர்.
இந்தக் கொலை சம்பவத்துக்குப் பின், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறையினர், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலில், காப்பகத்தை ஆய்வு செய்து, அங்கிருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றியுள்ளனர். தற்போது அந்தக் காப்பகம் மூடப்பட்டுள்ளது. இந்தக் காப்பகம், வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கி வந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தாலும், கடந்த மாதத்தில்தான் இதற்கு தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் துறையிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், ”அந்தக் காப்பகத்துக்கு அனுமதி கோரி கடந்த பிப்ரவரியில் விண்ணப்பித்துள்ளனர். அதன்பின் நாங்கள் ஆய்வு செய்தோம். கட்டடம் சகல வசதிகளுடன் இருந்தது. வட்டாட்சியரிடம் கட்டட அனுமதியும், தீயணைப்புத்துறையிடம் தீயணைப்புச் சான்றும் பெற்றிருந்தனர். காப்பகங்களுக்கான விதிமுறைகளின்படி காப்பகப் பராமரிப்பாளர், மருத்துவர், பயிற்றுநர் என எல்லோரும் தகுதியுடன் இருந்ததால் நாங்கள் ஆய்வு செய்து பரிந்துரை செய்தோம். அதற்கான அனுமதி மே 12 அன்றுதான் வந்தது” என்றார்.
காப்பகத்துக்கு அரசின் முறையான அனுமதி வந்ததாக மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கூறும் அதே நாளில்தான், அந்தக் காப்பகத்தில் வருண் காந்த் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இந்த மனநல காப்பக்ததில் வருணையும் சேர்த்து 28 பேர் இருந்துள்ளதாகக் கூறிய மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், அவர்களில் 20 பேர், கோடை விடுமுறைக்கு அவர்களின் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
படக்குறிப்பு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கோயம்புத்தூர் ”கொலை நடந்தபோது, வருணையும் சேர்த்து 8 பேர் மட்டுமே இருந்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு, மீதமுள்ள 7 பேரில் 6 பேருடைய பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவரின் பெற்றோர் கனடாவில் இருந்ததால், அவருடைய உறவினர் வீட்டில் ஒப்படைத்தோம். மீதமிருந்த ஒருவருக்கு பெற்றோர் இல்லை. தாத்தா, பாட்டி வயதானவர்கள் என்பதோடு, அவரின் பாட்டிக்கு இதய அறுவை சிகிச்சை நடக்க இருப்பதால், அவரை மற்றொரு காப்பகத்தில் சேர்த்துள்ளோம்” என்றார் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கோவை மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 19 காப்பகங்களிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். கடந்த 3 நாட்களில் 17 காப்பகங்களில் ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2 காப்பகங்களில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் பகிர்ந்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மனநல மீளாய்வுக் குழு என்ற குழு செயல்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான இந்தக் குழுவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் உள்ளனர்.
அந்தக் குழுவின் கூட்டமும் நடத்தப்பட்டு, அவர்களும் காப்பகங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர். தற்போது இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி குமணன் உள்ளார். சேலம் மாவட்டத்துக்கான குழுத் தலைவரான இவர்தான், தற்போது கூடுதலாக கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களையும் பார்த்து வருவது தெரிய வந்துள்ளது.
பொள்ளாச்சி சம்பவத்தின் எதிரொலியாக, கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்களில் ஆய்வுகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநில மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு உரிமைகள் (TN RIGHTS) மாவட்ட திட்ட அலுவலர் சுந்தரேஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள TN RIGHTS என்பது, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் துவக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் உலக வங்கியின் நிதி 70 சதவிகிதமும், தமிழக அரசின் 30 சதவிகிதமும் இதற்காகச் செலவிடப்படுவதாகவும் திட்ட அலுவலர் விவரித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், தற்போது தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பும் தொடங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.
மனநல காப்பகங்களுக்கான விதிமுறைகளும் கண்காணிப்பும்
பட மூலாதாரம், Department of Welfare of Differently Abled Persons
படக்குறிப்பு, கோவை மாவட்ட மனநல மீளாய்வுக் குழுவினரின் ஆலோசனைதமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை தமிழக முதல்வரின் கீழ் இருந்தாலும், சமூக நலத்துறை அமைச்சரான கீதா ஜீவன்தான் இந்தத் துறை சார்ந்த பல்வேறு கூட்டங்களையும் நடத்தி, கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணித்து வருவதாக அத்துறை அலுவலர்கள் தகவல் பகிர்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்தான் மனநல காப்பகங்களுக்கான அனுமதியை வழங்குகிறது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016இன் படியே (RPWD-The Rights of Persons with Disabilities Act, 2016) மனநல காப்பகங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
“இதற்கு படிவம் வடிவிலான விண்ணப்பமே இத்துறை மூலமாக வழங்கப்படுகிறது. அதில் ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்டடம், கழிப்பறை, சாய்வு தளம், மேல்மாடி அனைத்தும் எந்தெந்த விதங்களில் பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இதன்படி கட்டடம் அமைந்துள்ளதா என்பதைப் பார்த்து வருவாய் வட்டாட்சியர் கட்டட உரிமம் தர வேண்டும். தீத்தடுப்பு பாதுகாப்பு முறைகளை ஆய்வு செய்து, தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று வழங்க வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டுகள் அந்தக் காப்பகம் இயங்கியிருக்க வேண்டும்,” என்று மாற்றுத்திறனாளிகள் துறையினர் விளக்குகின்றனர்.
அவர்களது கூற்றுப்படி இயங்கும் காப்பகங்களில் சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா, மனநலம் குன்றியவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத அலுவலர்கள் முறையான பயிற்சி பெற்றிருக்கிறார்களா, கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, மருத்துவர்கள், மருத்துவ வசதிகள் உள்ளதா, மனநலம் குன்றியவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், அதற்கான கட்டமைப்பு, கண்காணிப்பு கேமரா உள்ளனவா என்பதை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையிலான குழு ஆய்வு செய்து, அந்த விண்ணப்பத்தை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்குப் பரிந்துரைக்கும்.
அந்த ஆணையரகத்தில் மனநல மருத்துவர்கள் உள்ளனர். அவர்களும் பரிசீலித்து பரிந்துரைக்கும் அடிப்படையில் இறுதியாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரால் மனநல காப்பகத்துக்கான அனுமதி வழங்கப்படும்.
இந்த காப்பகங்களைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான மாவட்ட மனநல மீளாய்வுக் குழு செயல்படுகிறது.
“அந்தக் குழு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் காப்பகங்களை ஆய்வு செய்யும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்வார். ஏதாவது குறைபாடுகள் இருப்பின், அந்தக் காப்பகத்தின் அனுமதியைப் புதுப்பிப்பது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்,” என்று மாற்றுத்திறனாளிகள் துறையினர் விளக்கினர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு