Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காணி விவகாரத்தில் தமிழரசுக் கட்சி சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் அதனையே காரணம்கூறி நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை வர்த்தமானியை ரத்துச் செய்ய முடியாதென்று கூறும் வாய்ப்பு அநுர குமரவின் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கும். தமிழரசுக் கட்சி மீதான வழக்குகள் அதன் நிர்வாகத் தெரிவுகளை முடக்கி வைத்திருப்பதை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம்.
தமிழர் தேசிய பரப்பில் கடந்த நாட்களில் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. வடமாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கரையோரப் பகுதியில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அநுர குமர அரசு மேற்கொண்ட சூழ்ச்சி முதலாவது. நடந்து முடிந்த உள்;ராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சபைகளை அமைப்பதற்கு தமிழர் தரப்புகளால் எடுக்கப்பட்ட முயற்சிகள் இரண்டாவது.
உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் வவுனியாவைத் தவிர வடக்கிலுள்ள வேறெந்தச் சபையையும் வெற்றி பெறும் நிலையில் அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி இல்லை. ஆனால், பல சபைகளில் இரண்டாம் இடத்தில் வந்து தங்களுக்கென உள்ளூர் மட்டத்தில் ஒரு வாக்கு வங்கியை இது பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாதது.
முன்னர் ஒரு தடவை இப்பத்தியில் குறிப்பிட்டவாறு 2018ல் யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஊர்வலத்தோடு மே தினத்தை நடத்தியபோதே ஜே.வி.பி. இங்கு காலூன்றுவதற்கு அத்திவாரமிட்டது. இதில் தமிழரசுக் கட்சி சுமந்திரனின் பங்களிப்பு மறக்க முடியாதது.
நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியைப் போன்று உள்ளூர் மட்டத்திலான தேர்தலில் அடையாளம் காட்டக்கூடியதான வெற்றியை பெற முடியாதென்பது தேசிய மக்கள் சக்திக்கு தெரியாததல்ல. எனினும், வடக்கில் தங்கள் பலத்தை ஓர் அளவுக்காவது தக்க வைக்க வேண்டுமென்ற நோக்கமே ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பெரும் பட்டாளம் இத்தேர்தல் பரப்புரைக்கு இறக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் தமிழர் தாயகத்தில் ஒரு சதிராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், தமிழர்களை திசைதிருப்பும் நோக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானியை அரசு வெளியிட்டது. அவர்கள் எதிர்பார்த்தது அவ்வாறே நடந்தது.
சமகாலத்தில் தேர்தல் முடிவுகளை ஒட்டியதாக சபைகளை உருவாக்கும் சவாலை சந்தித்தவாறு காணி அபகரிப்பு நடவடிக்கையை முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழர் தரப்புக்கு ஏற்பட்டது. தமிழ்த் தேசிய அவையின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினரும் வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்ய வேண்டுமென நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தனர்.
ஆனால் தமிழரசுக்கட்சி வர்த்தமானியை இரத்துச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலுப்படுத்த போராட்டத்தை அறிவித்தது. உலகையே உலுப்பக்கூடிய போராட்டம் வெடிக்குமெனவும், சட்டமறுப்புப் போராட்டமும் இடம்பெறுமெனவும் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் அரசுக்கு பயமுறுத்தல் விடுத்தார். மாவை சேனாதிராஜாவின் வழக்கமான போராட்டம் வெடிக்கும்போல் இதுவும் அமையலாமென தமிழ்ப் பத்திரிகையொன்று நையாண்டி செய்ததுமுண்டு.
இதற்கிடையே தமிழ் எம்.பிக்களை அழைத்துப் பேசிய பிரதமர் அமைச்சரவையில் இதுபற்றிப் பேசி முடிவெடுக்கப்படுமென சமாளித்தார். மறுதரப்பில் காணி உருத்துக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சுமந்திரன் சட்ட நடவடிக்கைகளுக்கு உசார்படுத்தினார். நல்லவேளை அப்படியாக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
தமது சட்டத்திறமையை நிரூபிப்பதற்காக காணிச் சொந்தக்காரர்களை நீதிமன்றம் கொண்டு சென்றிருந்தால் என்ன நடைபெற்றிருக்கும். தமிழரசுக் கட்சி மீதான வழக்குகள் நீதிமன்றம் சென்றதால் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அதுவே இங்கும் நடந்திருக்கும். காணி விவகார வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் சுமந்திரன் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், அது தேசிய மக்கள் சக்திக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக இருந்திருக்கும்.
காணி விவகாரம் நீதிமன்றத்தின் முன்னால் சென்றிருப்பதால் அந்தத் தீர்ப்பு வரும்வரை வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய முடியாதென்று அரசு தரப்பு கூறுவதற்கு வாய்ப்பாக இருந்திருக்கும். சில சமயம் மாதக்கணக்கில்கூட நீதிமன்றத்தில் இது இழுபட்டிருக்கும்.
தமிழரசுக் கட்சி மீதான வழக்கு நீதிமன்றம் சென்றதால்தான் கட்சி அதன் நிர்வாகிகளை தெரிவு செய்ய முடியாமலிருப்பதும், தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளை வகிக்க முடியாதிருப்பதும், இதனால் தலைவர், செயலாளர் என்பவர்கள் பதிலாக இயங்குவதும் தெரியாததல்ல. இவ்வாறான ஒரு இடத்துக்கு காணிப்பிரச்சனையையும் இழுத்தடிக்கும் ரகசிய திட்டத்தில்தான் சுமந்திரன் சட்டநடவடிக்கையை எடுக்க முன்வந்திருக்கலாமென்ற கருத்து தமிழ் தேசிய வட்டாரங்களில் நிலவுகிறது.
இப்போது வர்த்தமானி இரத்து என்று சொல்லப்படுவதுகூட ஒரு இடைக்காலத் தீர்வாகவே பார்க்கப்பட வேண்டும். திடுதிப்பென வேறு காணிகளை இலக்கு வைத்து அதற்கான வர்த்தமானி அறிவித்தல்கூட எவ்வேளையிலும் வெளிவரக்கூடும்.
1977ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் முதலாவது ஆண்டிலேயே தமிழினப் படுகொலை இடம்பெற்றது. இது ஜே.ஆரின் ஆசீர்வாதத்தோடு இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஜே.ஆர். குற்றச்சாட்டை மறுத்ததோடு நிறுத்தாது, தாம் நினைத்தால் இதனைச் செய்ய முடியுமென்றும் ஆனால் நினைக்கவில்லையென்றும் விளக்கமளித்தார். இதற்குப் பதிலளித்த அப்போதைய கோப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவேற்பிள்ளை ஜே.ஆரைப் பார்த்து, எப்போதாவது நீங்கள் நினைத்துவிட்டால் அதை செய்வீர்கள் என்பதை உங்கள் உரை மூலம் அறிய முடிகிறது. எனவே உங்களை நம்பி நாங்கள் எவ்வாறு வாழ முடியுமென்று கேட்டார். இந்தக் கேள்வியையே இப்போது அநுர தரப்பைப் பார்த்து தமிழர்கள் கேட்க வேண்டியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, இந்த வாரம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் மேயர், தவிசாளர், உதவி மேயர், உதவித் தவிசாளர் தெரிவுகள் சூடுபிடித்துள்ளது. எந்தவொரு அணியும் என்ன நடைபெறும் என்று தெரியாத நிலையிலேயே காணப்படுகிறது. ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அநேக சபைகளில் தங்களது ஆட்சியே இடம்பெறுமென தமிழரசுக் கட்சி கூறி வருகிறது.
தமிழ்த் தேசியவாத அணிகள் மூன்று உள்ளன. தமிழ் மக்கள் பேரவை, தமிழரசு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை இவை. சகல சபைகளிலும் அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் அநேகமானவைகளில் கூடுதலான ஆசனங்களை தாங்களே பெற்றுள்ளதால் மற்றைய தமிழ் தேசிய கட்சிகள் தமக்கு ஆதரவு அளிக்க வேண்டியது முறைமை என்று தமிழரசு வாதிடுகிறது. ஓரளவுக்கு அதில் நியாயம் இருப்பதுபோலவே தோற்றமுண்டு.
இதனை சரியென ஏற்றுக் கொள்வதென்றால் தமிழ் மக்கள் பேரவை athika uruppinarkalaip petta சபைகளை நிர்வகிக்க, தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்க வேண்டும். ஆனால் இங்கு மூன்றாவது இடத்திலிருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எவருக்கும் உறுதியளிக்காது நழுவல் பாணியில் இருந்தாலும் ஓரிரு சபைகளையாவது தாங்களும் அமைக்க வேண்டுமென விருப்பம் காட்டியுள்ளது. இதனை ஒரேயடியாக தமிழரசுக் கட்சி ஓரங்கட்டி விட்டது.
மூன்று தமிழ்த் தேசியவாத கட்சிகளும் இணைந்து எந்தவொரு சபையையாவது அமைக்கக்கூடிய சாத்தியப்பாடு காணப்படவில்லை. கிட்டத்தட்ட ஆடு, புலி, புல்லுக்கட்டு ஆகிய மூன்றையும் ஒன்றாக கூட்டிச் செல்ல முடியாத கதை போன்றது இந்த நிலைவரம்.
தேர்தலுக்கு முன்னர் ஓரளவு ஒற்றுமையை கஜேந்திரகுமார் நாடினார். அதற்காக தமிழரசின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வீட்டுக்குச் சென்று உரையாடி ஓர் ஆவணத்தையும் கையளித்தார். ஓரளவுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய பதிலை சிவஞானம் அவர்கள் வழங்கியிருந்தாலும், அடுத்த சில நாட்களில் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனின் ஆலோசனைக்கிணங்க கஜேந்திரகுமாரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. தேர்தலின் பின்னர் ஆகட்டும் பார்க்கலாம் என்ற பாணியில் சிவஞானம் அவர்களின் பதில் கஜேந்திரகுமாரை அடைந்தது.
ஆனால், இப்போதுள்ள நிலைமையில் கஜேந்திரகுமாரின் ஆதரவு தமிழரசுக்கு தேவைப்படுகிறது. இதனால் அதனுடன் தொடர்பு கொண்ட சிவஞானம் அவர்கள் இதற்கென ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். தமிழரசுக் கட்சி தமக்கே பதவிகள் என்று கோர, அதிகூடிய உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு தலைவர் பதவியும், இரண்டாவது அதிகூடிய உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு உபதவிசாளர் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த கஜேந்திரகுமார் விரும்பவில்லை.
உதாரணத்துக்கு யாழ்ப்பாணம் மாநகரசபையை எடுத்தால் பதின்மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசும், பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட கஜேந்திரகுமார் தரப்பும் இணைந்தால் இவர்களுக்குக் கிடைக்கும் இருபத்தைந்து எண்ணிக்கை அறுதிப் பெரும்பான்மையாகும். எந்தவிதமான இடைஞ்சலுமின்றி மேயர், உதவி மேயர் பதவிகளை இரு கட்சிகளும் பெற்றுக் கொள்ள முடியும். இது சாத்தியப்படுமா என்பது மாநகரசபையின் முதல் அமர்வின் தெரிவின்போது தெரியவரும். இதே போன்ற நிலைதான் மற்றைய சபைகளிலும்.
தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தமிழரசுக் கட்சியை உருவாக்கி எழுபத்தைந்து ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இவர்களை பச்சை மண்ணும், சுட்ட மண்ணும் என்றே கூறிவருவார்கள். அதாவது ஒருபோதும் இணைந்து செயற்பட முடியாதவர்கள் என்பது இதன் அர்த்தம்.
தேவைப்படும்போது இணைவது போன்று காண்பதும், கலந்து கதைப்பதும், முடிவெடுக்க முடியாது முடிவில் கலைவதும், பின்னர் அறிக்கைகளால் மோதுவதும் – இதுவே தொடர்கதையாக இருக்கிறது.