சூப்பர் பக்: மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகள் – ஆன்டிபயாடிக்குகளை கையாளுவதில் அதிகரிக்கும் முரண்பாடு

பட மூலாதாரம், Corbis via Getty Images

படக்குறிப்பு, “நுண்ணுயிர் எதிர்ப்பு” நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆரோக்கியம் மற்றும் சிகிச்சையில் மோசமான முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒருபுறம், ஒருவரின் உடலில் ஆன்டிபாயாடிக்ஸ் வேலை செய்யாமல் போகும் அளவுக்கு தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பைத் தூண்டுகிறது மற்றும் கொடிய சூப்பர் பக் கிருமிகள் எழுச்சியடைய ஊக்கமளிக்கிறது. ஆனால் மறுபுறம், இந்த உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்காததால் மக்கள் உயிரிழக்கின்றனர்.

Global Antibiotic Research and Development Partnership (GARDP) என்ற லாப நோக்கற்ற அமைப்பு நடத்திய ஒரு புதிய ஆய்வு, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பெரிய நாடுகளில் எட்டில், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கார்பபெனெம்-எதிர்ப்பு கிராம்-எதிர்மறை (CRGN) தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்தது.

CRGN பாக்டீரியாக்கள் கடைசி வரிசை நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கும் எதிர்ப்புத் திறன் கொண்ட சூப்பர் பக் கிருமிகள் ஆகும். இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் 6.9% நோயாளிகள் மட்டுமே பொருத்தமான சிகிச்சையைப் பெற்றனர் என்று தெரிய வந்துள்ளது. ஆன்டிபயாடிக் மீதான பாக்டீரியாவின் எதிர்ப்பு நிலை (antibiotic resistance) அதிகரித்து வருகிறது.

CRGN தொற்றுகள் மற்றும் அதற்கான சிகிச்சைகளில் இந்தியா பெரும் பங்கைக் கொண்டிருந்தது, ஆய்வு செய்யப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் முழு ஆய்வில் 80% இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் அதில் 7.8% நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க முடிந்தது என்று தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. (ஆன்டிபயாடிக் மருந்துகளின் முழுமையான ஒரு கோர்ஸ் என்பது, ஒரு நோயாளி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தொற்று பூரண குணமாக எடுத்துக் கொள்ளவேண்டிய முழுமையான அளவுகளைக் குறிக்கிறது.)

நீர், உணவு, சுற்றுச்சூழல் மற்றும் மனித குடலில் பொதுவாகக் காணப்படும் எதிர்மறை பாக்டீரியாக்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs), நிமோனியா மற்றும் உணவு நஞ்சாதல் என பல உடல்நலக் கோளாறுகளையும், நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்துகின்றன.

இவை, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். பெரும்பாலும் ICUக்களில் இருப்பவர்களுக்கு வேகமாகப் பரவி, அவர்களுக்கு சிகிச்சையளிப்பது கடினமாகிவிடும்.

அதுமட்டுமல்ல, சில சமயங்களில் சிகிச்சையே சாத்தியமற்றதாகிவிடுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் கார்பபெனெம்-எதிர்ப்பு கிராம்-எதிர்மறை பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது இரட்டிப்பு சிக்கலாகிறது. ஏனெனில் அந்த பாக்டீரியாக்கள் மிகவும் சக்திவாய்ந்த சில ஆன்டிபயாடிக்குகள் மீதான எதிர்ப்பு நிலையை அதிகரித்து விடுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நமது குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சூப்பர்பக்ஸ் என்றால் என்ன?

சூப்பர்பக்ஸ் என்பது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற கிருமிகள் ஆகும். அவை பொதுவாக அவற்றைக் கொல்லும் மருந்துகளுக்கு ஏற்றவாறு மாறிவிடுகின்றன. அவை மருந்துகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வளர்கின்றன. ஒரு கட்டத்தில், சிகிச்சைக்காக கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் வேலை செய்யாமல் போக வாய்ப்பு உள்ளது.

“இந்த பிரச்னை, வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினரிடமும் காணப்படுவதை தினமும் பார்க்கிறோம்” என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் அப்துல் கஃபூர் கூறுகிறார். “எந்தவித ஆன்டிபயாடிக்கும் வேலை செய்யாத நோயாளிகளை நாம் அடிக்கடி பார்க்க நேரிடுகிறது- அவர்கள் உயிரிழக்கிறார்கள்.”

ஆனால், இதிலுள்ள முரண்பாடு கொடூரமானது. உலகம் ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், ஏழை நாடுகளில் அதற்கு எதிர்மறையான நிலை காணப்படுகிறது. சிகிச்சையளிக்கக்கூடிய தொற்றுநோயாக இருந்தாலும், உரிய மருந்துகள் கிடைக்காததால், அவை மக்களின் உயிரை பறிக்கின்றன.

“பல ஆண்டுகளாக, ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் நிதர்சனத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், நோயாளிகளுக்கு தேவையான ஆன்டிபயாடிக் மருந்துகள் கிடைக்கவில்லை,” என்று GARDP இன் குளோபல் அக்சஸ் இயக்குநரும் ஆய்வின் மூத்த ஆசிரியருமான டாக்டர் ஜெனிஃபர் கோன் கூறுகிறார்.

இந்த ஆய்வில், கார்பபெனெம்-எதிர்ப்பு பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் 8 நரம்பு வழி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. கொலிஸ்டின் உள்ளிட்ட பழைய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் முதல் செஃப்டாசிடைம்-அவிபாக்டம் போன்ற புதிய மருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டன. கிடைக்கக்கூடிய சில மருந்துகளில், டைஜெசைக்ளின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருத்துவமனை ஐசியுக்கள் போன்ற இடங்களில் கிராம் நெகட்டிவ் பாக்டீரியா வேகமாகப் பரவுகிறது.பலவீனமான சுகாதார அமைப்புகள் மற்றும் பயனுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமான அளவு கிடைக்காததே சிகிச்சைகளில் ஏற்படும் இடைவெளிக்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உதாரணமாக, 8 நாடுகளில் 1.5 மில்லியன் நோயாளிகளுக்கு டைஜெசைக்ளின் தேவைப்பட்ட நிலையில், 103,647 பேருக்கு மட்டுமே முழு சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கிடைத்தது என்பது கவலையளிப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. இது, தொற்றுக்களை குணப்படுத்தும் ஆன்டிபயாடிக்குகளின் உலகளாவிய தேவைக்கும் விநியோகத்திற்கும் இருக்கும் இடைவெளியை காட்டுகிறது.

இந்தியாவில், மருந்து கொடுத்தால் குணமாகக்கூடிய தொற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தேவையான ஆன்டிபயாடிக் கிடைக்காமல் போவதற்கு காரணம் என்ன?

இதற்கு மருத்துவர்கள் பல தடைகளை சுட்டிக்காட்டுகின்றனர், சரியான சிகிச்சையைப் பெறுவது, துல்லியமான நோயறிதல் சோதனைகளை மேற்கொள்வதுமற்றும் பயனுள்ள மருந்துகள் கிடைப்பது என பல காரணங்கள் உள்ளன. மருந்துகளின் விலையும் ஒரு பெரிய தடையாக உள்ளது, ஏனெனில் இந்த ஆன்டிபயாடிக்குகளில் பல. ஏழை நோயாளிகள் வாங்க முடியாத அளவு அதிக விலையுள்ளவையாக இருக்கின்றன.

“இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை வாங்கக்கூடியவர்கள் பெரும்பாலும் அவற்றை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்; வாங்க முடியாதவர்களுக்கு போதுமான அளவில்கூட வாங்க முடிவதில்லை” என்று டாக்டர் கஃபூர் கூறுகிறார். “ஏழைகளுக்கு இந்த மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, வசதி படைத்தவர்கள் இவற்றை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஒரு அமைப்பு நமக்குத் தேவை” என்று அவர் கூறுகிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆன்டிபயாடிக்களை பயன்படுத்தும் அளவில், இந்த மருந்துகளின் விலை மலிவாக்கப்பட வேண்டும். மேலும், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, வலுவான ஒழுங்குமுறை முக்கியமானது.

“மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு ஆன்டிபயாடிக் மருந்துச் சீட்டிலும், ஒரு தொற்று நிபுணர் அல்லது நுண்ணுயிரியலாளரின் ஒப்புதலும் இரண்டாவதாக இருக்கவேண்டும்” என்று டாக்டர் கஃபூர் கூறுகிறார். “சில மருத்துவமனைகள் இரண்டாவது ஒப்புதல் நடைமுறையை பின்பற்றுகின்றன, ஆனால் பெரும்பாலானவை அவ்வாறு செய்வதில்லை. சரியான மேற்பார்வையுடன், இது நிலையான நடைமுறையாக மாறுவதை கட்டுப்பாட்டாளர்கள் தான் உறுதிசெய்ய முடியும்.”

ஆன்டிபயாடிக் மருந்துகள் கிடைப்பதில் உள்ள சிக்கலைச் சரிசெய்யவும், மருந்துகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சிறந்த கொள்கைகள் மற்றும் வலுவான பாதுகாப்புகள் இரண்டும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மருந்துக்கான அணுகல் மட்டுமே நெருக்கடியைத் தீர்க்காது. புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ஆண்டிபயாடிக் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள மருந்துகளே குறைவாக கிடைப்பது என பல உலகளாவிய பிரச்னைகள் உள்ளன.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு (AMR) பிரச்னைகளை எதிர்கொள்கிறது. ஆனால் உள்நாட்டிலும் உலக அளவிலும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான திறவுகோலும் அதனிடம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

“புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும், மேலும் புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளின் வளர்ச்சி மற்றும் அணுகலை இந்தியா வெற்றிகரமாக ஆதரிக்க முடியும்” என்று டாக்டர் கோன் கூறுகிறார். வலுவான மருந்துத் தளத்துடன், புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்குவது முதல் மேம்பட்ட நோயறிதல் வரை AMR கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது.

உள்ளூர் தரவுகளை உருவாக்குவதன் மூலம், தேவைகளை சிறப்பாக மதிப்பிடுவதற்கும், மருந்து விநியோகப் பாதையில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிவதற்கும் இந்தியா தனது ஆன்டிபயாடிக் ஆராய்ச்சியை வலுப்படுத்த முடியும் என்று டாக்டர் கோன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இது சரியான மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு அதிக இலக்குகள் கொண்ட தலையீடுகளை அனுமதிக்கும் என்றும் அவர் கருதுகிறார்.

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images

படக்குறிப்பு, கார்பபெனெம்-எதிர்ப்பு பாக்டீரியாவின் எலக்ட்ரான் நுண் வரைபடம்புதுமையான மாதிரிகள் ஏற்கனவே உருவாகி வருகின்றன. உதாரணமாக, கேரள மாநிலம், கடுமையான தொற்றுநோய்களை நிர்வகிப்பதில் கீழ்மட்ட வசதிகளை ஆதரிக்கும் வகையில், “ஹப்-அண்ட்-ஸ்போக் அணுகுமுறையை” பயன்படுத்துகிறது. புற்றுநோய் மருந்து திட்டங்களில் காணப்படுவது போல், மருத்துவமனைகள் அல்லது மாநிலங்களில் ஒருங்கிணைந்த அல்லது தொகுக்கப்பட்ட கொள்முதல் திட்டம் மூலம், புதிய ஆன்டிபயாடிக் விலையையும் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சரியான ஆன்டிபயாடிக் மருந்துகள் கிடைக்காவிட்டால், நவீன மருத்துவம் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். மருத்துவர்கள் பாதுகாப்பாக அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போவது, புற்றுநோய் நோயாளிகளின் சிக்கல்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் அல்லது அன்றாட தொற்றுகளை நிர்வகிக்கும் திறனை இழப்பது என பல அபாயங்களை மருத்துவம் எதிர்கொள்ளலாம்.

“ஒரு தொற்று நோய் மருத்துவராக, ஆன்டிபயாடிக்கின் பொருத்தமான பயன்பாட்டை, அதன் அணுகலின் ஒரு பகுதியாக பார்க்கிறேன் என்றாலும், அதை ஒரு பகுதியாக மட்டுமே நான் பார்க்கிறேன்,” என்று டாக்டர் கஃபூர் கூறுகிறார். “புதிய ஆன்டிபயாடிக் மருந்துகள் வந்தால், அவற்றை சேமிப்பதும் முக்கியமானது, அதாவது உரிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவற்றைச் சேமிப்பது முக்கியம்.”

தற்போது நம் முன்னிருக்கும் தெளிவான சவால் என்னவென்றால், ஆன்டிபயாடிக் மருந்துகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது மட்டுமல்ல, அவை உண்மையிலுமே அவசியமாக தேவைப்படுபவர்களை சென்றடைவதை உறுதி செய்வதும் தான்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.