யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (30.05.25) கோப்பாய் காவற்துறையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 40 லீட்டர் கசிப்பையும் காவற்துறையினர் கைப்பற்றி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , சுதுமலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்டு தமக்கு விற்பனை செய்வதற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் சுதுமலை பகுதிக்கு விரைந்த காவற்துறையினர், குறித்த வீட்டினை சுற்றிவளைத்து சோதனையிட்ட வேளை,  வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தி கூடம் காணப்பட்டுள்ளதுடன் ,  600 லீட்டர் கோடா, 60 லீட்டர் கசிப்பு,  உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் என்பன காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

குறித்த வீட்டில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் , கைது செய்யப்பட்ட நபரையும் மானிப்பாய் காவல்  நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.