ஒடிசா ‘திருமண வெடிகுண்டு’ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – பார்சல் மூலம் மணமகனை கொன்றது எப்படி?

படக்குறிப்பு, திருமணத்தில் சௌமி சேகர் சாஹு மற்றும் அவரது மனைவி ரீமாஎழுதியவர், சந்தீப் சாஹு & சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி21 நிமிடங்களுக்கு முன்னர்

பட்னாகர் பார்சல் வெடிகுண்டு வழக்கு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட, முக்கியமான வழக்கு. 2018இல் ஒடிசாவை அதிரவைத்த இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புஞ்சிலால் மெஹெர் என்ற குற்றவாளிக்கு 2025 மே 28 புதன்கிழமை உள்ளூர் நீதிமன்றம் இரண்டு ஆயுள் தண்டனைகள், தலா பத்து ஆண்டுகள் வீதம் இரண்டு தண்டனைகள் மற்றும் ஏழு ஆண்டுகள் வீதம் ஒரு தண்டனை ஆகியவற்றோடு ரொக்க அபராதத்தையும் விதித்துள்ளது.

ஒடிசாவின் பலங்கிர் மாவட்டம் பட்னாகர் நகரில் பிப்ரவரி 23, 2018 அன்று நடந்த குண்டுவெடிப்பில் மென்பொருள் பொறியாளர் சௌமிய சேகர் சாஹு (26), அவரது பாட்டி ஜெமாமணி மெஹெர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் மணப்பெண் ரீமா படுகாயமடைந்தார்.

திருமணமான சில நாட்களுக்குப் பிறகு மணமகன் சௌமிய சேகரின் வீட்டிற்கு கொரியரில் பரிசு ஒன்று வந்து சேர்ந்தது. சௌமிய சேகர் மற்றும் ரீமாவின் திருமணம் நடந்து ஐந்து நாட்களே ஆகியிருந்த நிலையில், அனைவரும் வீட்டில் கூடியிருந்தனர்.

திருமணப் பரிசாக வந்த பரிசுப் பொட்டலத்தை புதுமணத் தம்பதிகள் திறந்தபோது, அது வெடித்தது. இந்த வழக்கு ‘திருமண வெடிகுண்டு’ வழக்கு என்று பிரபலமாகப் பேசப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு, அரசு வழக்கறிஞர் சித்தரஞ்சன் கனுங்கோவிடம் பிபிசி பேசியது. ஐபிசி பிரிவுகள் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 201 (ஆதாரங்களை மறைத்தல்), இந்திய வெடிபொருள் சட்டத்தின் பிரிவுகள் 3, 4 ஆகியவற்றின் கீழ் புஞ்சிலால் மெஹெர் குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததாகவும், அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள், தலா பத்து ஆண்டுகள் வீதம் இரண்டு தண்டனைகள் மற்றும் ஏழு ஆண்டுகள் வீதம் ஒரு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இந்த தண்டனைகள் அனைத்தையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இதுதவிர, பல்வேறு பிரிவுகளின் கீழ் மெஹெருக்கு நீதிமன்றம் ரூ.1.70 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

படக்குறிப்பு, குண்டுவெடிப்புக்குப் பிறகு சௌமிய சேகர் சாஹூவின் வீட்டு சமையலறையின் நிலை (கோப்புப் படம்)தீர்ப்பைப் பற்றிப் பேசிய அரசு வழக்கறிஞர் கனுங்கோ, “இதுவொரு கொடூரமான குற்றம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், இந்த வழக்கை ‘அரிதிலும் அரிதானது’ என்ற பிரிவில் பரிசீலிக்க வேண்டும் என்ற அரசின் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது. மெஹெரின் மரண தண்டனை கோரிக்கையையும் நிராகரித்த நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனைகளை விதித்துள்ளது” என்று விரிவாகத் தெரிவித்தார்.

அரிதினும் அரிதானது என்று அரசுத் தரப்பு தெரிவித்த இந்த திருமண வெடிகுண்டு வழக்கில் நடந்தது என்ன?

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பிப்ரவரி 23, 2018 அன்று பலங்கிர் மாவட்டத்தில் உள்ள பட்னாகரில் நடைபெற்றது. 26 வயதான சௌமிய சேகர் சாஹு மற்றும் ரீமாவுக்கு திருமணமாகி ஐந்து நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. இருவரும் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் வீட்டிற்கு ஒரு பார்சல் வந்தது. பட்னாகரில் இருந்து 230 கி.மீ. தொலைவில் உள்ள சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அதில் பெறுநர் என சௌம்யவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

பரிசுப் பொட்டலத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிரிக்கத் தொடங்கியதும், மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சௌமிய சேகர், அவரது மனைவி மற்றும் பாட்டி மூவரும் சமையலறையில் இருந்தார். குண்டுவெடிப்பில் செளமிய சேகர் மற்றும் அவரது பாட்டி ஜெமாமணி மெஹெர் இறந்துவிட்டனர், ரீமா (அப்போது 22 வயது) படுகாயமடைந்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.குற்றவாளியை காவல்துறை கண்டுபிடித்தது எப்படி?

அமைதியான பட்னாகர் நகரில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஆசிரியரும், உள்ளூர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான புஞ்சிலால் மெஹெர் (அப்போது 49 வயது) கைது செய்யப்பட்டார். இந்த புஞ்சிலால் மெஹெர் மணமகன் சௌமியவின் தாயார் ஆசிரியராகப் பணியாற்றிய கல்லூரியில் சக ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

இந்த வழக்கில் துப்புத் துலக்கிய அதிகாரிகளிடம் பிபிசி பேசியது. சௌமிய சேகரின் குடும்பம் மீதான பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சியால் புஞ்சிலால் மெஹெர், கவனமாகத் திட்டமிட்டு இந்த வெடிகுண்டு பார்சலை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக வழக்கை விசாரித்தவர்கள் தெரிவித்தனர்.

போலியான பெயரில் ராய்ப்பூரில் இருந்து பரிசு பார்சலை அனுப்பிய புஞ்சிலால் மெஹெர், அதை கொரியர் சேவை மூலம் அனுப்பியிருந்தார். இந்த பார்சல் வெடிகுண்டுடன் பேருந்தில் 650 கி.மீ. தூரம் பயணித்து வந்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, பல கைகளைக் கடந்து இலக்கை வந்தடைந்த பார்சலில் இருந்தது ஒரு நாட்டு வெடிகுண்டு. அது ஒரு சணல் நூலில் கட்டப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த பார்சலை திறக்க முயன்றபோதே அது வெடித்தது. இந்த வெடிகுண்டு பாக்கெட்டில் அனுப்புநரின் பெயர் எஸ்.கே. ஷர்மா என்று எழுதப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சதித் திட்டத்தை அம்பலப்படுத்திய அனாமதேய கடிதம்

பட மூலாதாரம், Facebook/Punji Lal Meher

படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்ட புஞ்சிலால் மெஹெர்பார்சல் ராய்ப்பூரில் இருந்து அனுப்பப்பட்டது என்பதைத் தவிர காவல்துறையினருக்கு வேறு எந்தத் துப்பும் கிடைக்காததால், ஆயிரக்கணக்கான தொலைபேசி பதிவுகளைப் புலனாய்ந்து, விசாரணைகளை மேற்கொண்டு, இறுதியில் சுமார் 100 பேரிடம் புலனாய்வாளர்கள் விசாரித்தனர்.

திருமணம் நிச்சயமான பிறகு மணப்பெண் ரீமாவை மிரட்டிய ஒருவரும் தீர விசாரிக்கப்பட்டார். ஆனால் நூற்றுக்கணக்கான விசாரணைகளை மேற்கொண்ட பிறகும்கூட புலனாய்வாளர்களால் குற்றவாளியை நெருங்க முடியவில்லை.

இதற்கிடையில், விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பெயர் குறிப்பிடப்படாத கடிதம் ஒன்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவருக்கு வந்தது.

வெடிகுண்டு பார்சலை அனுப்பியவரின் பெயர் எஸ்.கே. ஷர்மா அல்ல, எஸ்.கே. சின்ஹா என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ‘மோசடி’ செய்ததற்காகவும், பணத்திற்காகவும் இந்தக் கொலை செய்யப்பட்டதாக கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

மேலும் ‘மூன்று பேர் இந்தக் கொலைக்குத் திட்டமிட்டதாகவும்’, இதுவரை காவல்துறையால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் அந்தக் கடிதம் கூறியது.

மணமகனின் துரோகம் மற்றும் பணம் பெறுவதற்கான நோக்கமே (அதிருப்தியடைந்த காதலி அல்லது சொத்து தகராறைக் குறிப்பதாக நினைக்கும் வகையில்) இந்த வெடிகுண்டு சம்பவத்திற்குக் காரணம் என்றும், அப்பாவி மக்களைத் துன்புறுத்துவதை காவல்துறை நிறுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

விசாரணையின் திசையை மாற்றிய கடிதம்

படக்குறிப்பு, சௌமிய சேகர் சாஹு மற்றும் ரீமாவின் திருமண வரவேற்பு நடைபெற்ற இடம்அந்த நேரத்தில் ஒடிசாவின் குற்றப்பிரிவின் தலைவராக இருந்த அருண் போத்ரா, பார்சல் ரசீதில் எழுதப்பட்டிருந்த பெயர் சரியாகப் படிக்கப்படவில்லையோ என்றும், முதலில் புரிந்துகொண்டது போல அந்தப் பெயர் ஷர்மா இல்லாமல் சின்ஹாவாக இருக்கலாமோ என்றும் தோன்றியதாகக் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, இந்தக் கடிதத்தை எழுதியவருக்கு வெடிகுண்டு அனுப்பியது யார் என்பதும், அவரது முகவரியும் தெரிந்திருக்கலாம் என்பதையும் அனாமதேய கடிதத்தில் உள்ள பொருளடக்கம் உணர்த்தியது. மேலும் வெடிகுண்டு அனுப்பிய நபரே கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என்றும் காவல்துறை உறுதியாக நம்பியது.

“அதன் மூலம் வெடிகுண்டு பார்சலை அனுப்பியவர் தான் செய்யும் குற்றத்தின் தீவிரத்தை நன்கு உணர்ந்தே செய்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. குற்றம் செய்தவர் உள்ளூர் நபர் அல்ல என்றும், சதியைச் செய்தது ஒருவரல்ல, மூவர் என்றும் அவர் எங்களிடம் கூற விரும்பினார். இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பிய அவரே, எங்கள் தவறைச் சுட்டிக்காட்டியதுடன், வழக்கைத் தவறாக வழிநடத்தவும் முயன்றார்” என்கிறார் அருண் போத்ரா.

இந்தக் கடிதத்தைப் பார்த்த சௌமிய சேகரின் தாயார், தன்னுடன் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் சக ஆசிரியரான மெஹெரின் கையெழுத்து மற்றும் எழுத்து நடை, இந்த அனாமதேய கடிதத்தை ஒத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்த மெஹெர், தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு சௌமியவின் தாயார் காரணமாக இருந்தார் என்பதால் காழ்ப்புணர்ச்சியில் இருந்தவர் என்பதும் அப்போது தெரிய வந்ததாகக் குறிப்பிட்டார் அருண்.

தொழில்முறை போட்டி என்ற கோட்பாட்டை போலீசார் முன்பு நிராகரித்து இருந்தாலும், தற்போது அந்தக் கோணத்தில் விசாரணையை மேற்கொண்டனர். மெஹெர் மீதான சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது.

காவல்துறையிடம் பிடிபட்ட மெஹெர், முதலில் இப்படியொரு கடிதம் எழுதச் சொல்லி தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறி முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இருப்பினும், இறுதியில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தீபாவளி பண்டிகை நேரத்தில் பட்டாசுகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு, அவற்றில் இருந்த வெடிமருந்துப் பொடிகளைப் பிரித்து எடுத்து வெடிகுண்டைத் தயாரித்து ராய்ப்பூரில் இருந்து கொரியர் மூலம் சௌமியவின் வீட்டிற்கு அனுப்பியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

யாரிடமும் பிடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக, தனது மொபைலை வீட்டிலேயே விட்டுச் சென்றதாகவும், சிசிடிவி கேமராக்களில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, ரயிலில் பயணச்சீட்டுகூட வாங்கவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. சௌமியவின் திருமண நிகழ்ச்சியிலும், பின்னர் அவரது இறுதிச் சடங்கிலும் மெஹெர் கலந்து கொண்டார்.

தீர்ப்பை ஏற்றுக்கொண்ட செளமியவின் பெற்றோர்

படக்குறிப்பு, சௌமிய சேகர் சாஹு மற்றும் ரீமாதற்போது மெஹெருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை சௌமிய சேகரின் பெற்றோர் வரவேற்று, நீதி கிடைத்துவிட்டதாகத் தங்கள் திருப்தியைத் தெரிவித்துள்ளனர், ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுமா என்பது தெரியவில்லை.

“புஞ்சிலால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்குச் சென்றால், நாங்களும் செல்வோம்” என்று சௌமிய சேகரின் தாய் சன்யுக்தா தெரிவித்தார். சௌமிய சேகரின் தந்தை ரவீந்திர குமார் சாஹு, இந்த விவகாரம் குறித்துத் தனது வழக்கறிஞருடன் விவாதித்த பிறகு முடிவெடுப்பதாகக் கூறினார்.

இந்த வழக்கில் முழு விசாரணையும் அப்போதைய ஒடிசா குற்றப்பிரிவுத் தலைவரான அருண் போத்ராவின் மேற்பார்வையில் நடந்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி அளிப்பதாக அருண் போத்ரா தெரிவித்துள்ளார்.

“இந்த வழக்கில், நேரில் கண்ட சாட்சியோ அல்லது உறுதியான ஆதாரமோ இல்லை. முழு வழக்கும் சூழ்நிலை மற்றும் தடயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று அவர் குறிப்பிடுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு