Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முளைவிட்ட உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கலாமா?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், நஜானின் மொடாமெதி பதவி, பிபிசி பாரசீகம் 30 மே 2025, 04:22 GMT
புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்
உங்கள் சமையலறைக்குச் சென்று நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை சமைக்க துவங்குகிறீர்கள். அதற்கு உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. நீங்கள் அதனை எடுக்கும் போது, அதில் முளைவிட்டிருந்தால் என்ன நினைப்பீர்கள்?
இதை சமைப்பதா? இதனை சமைப்பது உடலுக்கு நன்மை அளிக்குமா? அல்லது குப்பையில் போடுவது சரியாக இருக்குமா என்று ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா?
அடுத்த நேரம் என்ன சமைப்பது என்ற யோசனையே பெரிதாக இருக்கும் போது, முளைவிட்ட உருளை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சமைப்பது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் இதற்கான பதிலை ஒரு வரியில் கூறிவிட இயலாது.
உருளைக்கிழங்கு முளைவிடும் போது என்ன நடக்கும்?
முளைவிடுதல் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. உங்கள் வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு ஒரு செடியாக வளர போகிறது என்பதன் அறிகுறி அது.
இந்த நிலையில், உருளைக்கிழங்கு க்ளைகோலாய்ட்ஸ் (glycoalkaloids) என்ற நஞ்சை அதிகமாக உற்பத்தி செய்யும். இந்த இயற்கையாக உருவாகும் நச்சுத்தன்மை, செடிகளை பூஞ்சைகள் மற்றும் பூச்சிகளின் தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த நச்சுகளில் காணப்படும் மற்றொரு கலவை சொலானின். இது உருளைக்கிழங்கு, தக்காளி, பெரிய கத்தரிக்காய் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றிலும் காணப்படும்.
அறுவடை செய்து, சேமித்து வைக்கும் போது இந்த நச்சுக் கலவைகளின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகள் என இரு தரப்பினருக்குமே அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.
பட மூலாதாரம், Shutter Stock
படக்குறிப்பு, முளைவிட்ட உருளைக்கிழங்குகளை சமைக்க பயன்படுத்தும் போது பசுமையான பகுதி முழுமையாக நீக்கப்பட வேண்டும் இப்படியாக முளைவிட்ட காய்கறிகளை உட்கொள்ளலாமா?
“முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் மிகவும் ஆபத்தானது க்ளைகோலாய்டுகள். இது உணவுக்கு கசப்பான சுவையை தருவது மட்டுமின்றி, வாந்தியையும் ஏற்படுத்தும்,” என்று டாக்டர் க்ரிஸ் பிஷப் தெரிவிக்கிறார். அவர் லிங்கன் பல்கலைக்கழகத்தில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பப்ப் பிரிவில் பணியாற்றுகிறார். ‘பொட்டேட்டோஸ் போஸ்ட்ஹார்வெஸ்ட்’ என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
“உருளைக்கிழங்குகள் பச்சை நிறத்தில் தோற்றமளித்தால் அதில் இந்த இயற்கை ரசாயனம் இருப்பது வெளிப்படையாக தெரிந்துவிடும். அதனால் தான் பச்சை நிறத்தில் இருக்கும் உருளைக்கிழங்குகளை உணவில் எடுத்துக் கொள்ளக் கூடாது,” என்று பிஷப் பிபிசிக்கு தெரிவித்தார்.
“இந்த ரசாயனத்தின் செறிவானது, முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் இன்னும் கூடுதலாக இருக்கலாம். எனவே அவற்றை முழுமையாக நீக்கிவிட வேண்டும். சந்தேகம் இருக்கும் பட்சத்தில், முளைவிட்ட பகுதியில் அதன் ‘வேர்’ வரை சென்று முழுமையாக நீக்கிய பிறகு, மற்ற பகுதியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அதே போன்று பிரிட்டனின் உணவு தரங்களுக்கான முகமை, முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் எப்பகுதியை உணவில் சேர்ப்பது சரியாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி, “குருத்தை நீக்கிவிட்ட பிறகும், உருளைக்கிழங்கு திடமாக இருக்கும் பட்சத்தில், எந்த சேதமும் இல்லாத பட்சத்தில், அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்,” என்று அறிவுறுத்துகிறது அந்த முகமை.
“இருப்பினும், உருளைக்கிழங்கில் பச்சை நிறம் தெரிந்தால், அதனை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால் பச்சை நிறம் இருப்பது, அதில் நச்சுத்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டும் அறிகுறியாகும்,” என்றும் குறிப்பிட்டுள்ளது.
“முளைவிட்ட உருளைக்கிழங்குகள், தொட்டுப் பார்ப்பதற்கு மிகவும் திடமாக, சுருக்கங்கள் ஏதுமின்றி இருக்கும் பட்சத்தில், குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தால், அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானது. ஆனால், தொடுவதற்கு மிகவும் மிருதுவாகவும், சுருக்கங்களுடனும் காணப்பட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தையும் அவை இழந்துவிட்டதை சுட்டிக்காட்டுகின்றன. எனவே அவற்றை உட்கொள்ள வேண்டாம்,” என்ற முகமை குறிப்பிடுகிறது.
பட மூலாதாரம், Shutter Stock
படக்குறிப்பு, உருளைக்கிழங்குகள் முளைவிட்டிருந்தால், அதில் அளவுக்கு அதிகமாக நச்சுகள் உள்ளன என்று அர்த்தம். சொலானின் நச்சு
அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகத்தில் தாவர அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் கேத்தி மார்டின், “முளைவிட்ட உருளைக்கிழங்குகளை நீங்கள் உட்கொள்ளவே கூடாது,” என்று கூறுகிறார்.
உருளைக்கிழங்குகளை வெளிச்சத்தில் வைக்கும் போது, அது முளைவிடுதலை தூண்டுகிறது. க்ளைகோலாய்டு, சொலானின் போன்ற நஞ்சுகளின் உற்பத்தியையும் தூண்டுகிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கேடானது. குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு இவை ஆபத்தானவை என்று அவர் விளக்குகிறார்.
“பச்சை நிறமில்லாத உருளைக்கிழங்குகளில் சொலானின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், இது விஷமாக மாறக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் ஒருவர் உருளைக்கிழங்கை பச்சையாக உண்ணக் கூடாது,” என்றும் கேத்தி தெரிவிக்கிறார்.
உண்மையில் மிகவும் அரிதாகவே சொலானின் நஞ்சால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டனில் 1970-களின் பிற்பாதியில், 78 பள்ளி மாணவர்கள் பச்சை உருளைக்கிழங்குகளை உட்கொண்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் அதிகமாக அறியப்பட்ட நிகழ்வாக இன்றும் உள்ளது.
மிகவும் குறைவான அளவில் உட்கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்பையும் நீங்கள் குறைவாகவே உணர்வீர்கள்.
சொலானின் நஞ்சால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படும். மிகவும் தீவிரமான தாக்கம் இருக்கும் பட்சத்தில், தலைசுற்றல், மயக்கம், குழப்பம், பலவீனமாக உணருதல், பார்வை திறனில் பிரச்னை, சுய நினைவை இழத்தல் போன்றவையும் ஏற்படும். சில நேரங்களில் மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய உருளைக்கிழங்குகளை உட்கொள்ளும் போது சிலருக்கு சில நிமிடங்களில் அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு இரண்டு நாட்கள் கழித்து அறிகுறிகள் தென்படலாம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சொலானின் நச்சால் மக்களுக்கு வயிற்றுப்பொக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன முளைவிட்ட உருளைகளை என்ன செய்வது?
குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தால், சமைப்பதற்கு முன்பு அவற்றை நீக்கிவிடவும் ஒரு அங்குலத்திற்கு மேலாக வளர்ந்திருந்தாலோ, அல்லது உருளைக்கிழங்கு மிகவும் மிருதுவாக இருந்தாலோ அதனை சமைக்க வேண்டாம் பச்சை நிறத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி நீக்கவும். இது அதிக அளவில் இருக்கும் நச்சுகளையே குறிக்கிறது. உருளைக்கிழங்கு அழுகியிருந்தால் அதனை குப்பையில் போடுவதே சிறந்தது உருளைக்கிழங்குகளில் குருத்துகள் முளைத்திருக்கும் பட்சத்தில், அதனை பொறுமையாக கையாளவும். அதனை பிடுங்கி எறிவது, உருளையின் அப்பகுதியில் நோய் தொற்றை ஏற்படுத்தும். நம் உடலில் காயங்கள் ஏற்படுவது போன்று தான் அதுவும் நிகழும். நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்திலோ அல்லது பாலூட்டும் தாய்மாராகவோ இருந்தால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.உருளைக்கிழங்குகளை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும்?
உருளைக்கிழங்குகள் வீணாவதை தடுக்கவும், ‘ஃபிரெஷ்ஷாக’ இருப்பதை உறுதி செய்யவும் கீழ் காணும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்
3-10° செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட, குளிர்ச்சியான, ஈரப்பதமற்ற, இருண்ட இடத்தில் வைக்கலாம். கடைகளில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த உருளைக்கிழங்குகளை அப்போதே கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால் எளிதில் அழுகிப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உருளைக்கிழங்குகளையும் வெங்காயங்களையும் தனித்தனியாக வைப்பது நல்லது. ஏன் என்றால் இவ்விரண்டு உணவுப் பொருட்களும் ஈரப்பதம் மற்றும் வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இது முளைவிடுதலை தூண்டும்.
பட மூலாதாரம், Shutter Stock
படக்குறிப்பு, உருளைக்கிழங்குகளையும் வெங்காயங்களையும் தனித்தனியாக வைப்பது நல்லது. முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா?
முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டு, உருளைக்கிழங்கு போன்று நச்சுத்தன்மை கொண்டவை அல்ல.
“மாறாக முளைவிட்ட பூண்டு மற்றும் வெங்காயத்தை உண்பது பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன் என்றால் அவற்றில் ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை ஏதும் இல்லை,” என்று கூறுகிறார் பேராசிரியர் மார்டின்.
“பூண்டு அல்லது வெங்காயத்தில் இருக்கும் ஊட்டச்சத்தில் இருந்து இவை முளைக்கின்றன. இருப்பினும் அவை கசப்பாகவும், மிகவும் மிருதுவானதாகவும் கொண்டிருக்கும்,” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
பூண்டு, வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களையும் 3-10° செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட, குளிர்ச்சியான, ஈரப்பதமற்ற, இருண்ட இடத்தில் வைக்கலாம். ப்ளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்காமல், காற்றோட்டமான பைகளில் அவற்றை போட்டு வைத்தால் காற்றோட்டத்துடன் அவை இருக்கும்.
உருளைக்கிழங்குகள் போன்றே, வெங்காயம், பூண்டுகளில் இருந்து நாற்றம் எழுந்தாலோ, அழுகிப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை குப்பையில் கொட்டுவதே எப்போதும் நல்லது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு