பட மூலாதாரம், S KUMARESAN

படக்குறிப்பு, ‘ஆச்சி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர், தனது பன்முகத் திறமைகளால் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர்.எழுதியவர், கார்த்திக் கிருஷ்னா சிஎஸ்பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடிகர்கள் கதைகளுக்கு உயிர் கொடுப்பவர்கள். திரையில் தோன்றி, பார்வையாளர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, கதாபாத்திரங்களை மறக்க முடியாதவையாக மாற்றுபவர்கள். அதில் சிலர், தங்களின் தனித்துவமான நடிப்பால், மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்களாக விளங்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நடிகையாக, தமிழ் சினிமாவின் அற்புதங்களில் ஒன்றாக இருந்தவர் நடிகை மனோரமா.

‘ஆச்சி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர், தனது பன்முகத் திறமைகளால் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 1500க்கும் அதிகமான திரைப்படங்கள், 5000க்கும் அதிகமான மேடை நாடகங்கள் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரர். பத்மஸ்ரீ விருது, தேசிய விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.

அரை நூற்றாண்டை கடந்த தனது திரையுலகப் பயணத்தின் கடைசி கட்டம் வரை, மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர் நடிகை மனோரமா. தலைமுறைகளைக் கடந்து, வயது வித்தியாசம் பாராமல், பின்புலம் பாராமல், அத்தனை திரைக் கலைஞர்களிடமும் அன்பாகப் பழகியவர் மனோரமா என்பது இன்றும் திரையுலகினர் சிலாகித்துச் சொல்லும் ஒரு குணாதிசயம்.

திரைப்படங்களை விஞ்சிய நிஜ வாழ்க்கைச் சோகம்

மக்களுக்கு பொழுதுபோக்கைத் தரும் கலைஞர்கள் பலரது தனிப்பட்ட வாழ்க்கை, இருள் சூழ்ந்ததாகவே இருந்திருக்கிறது. சர்வதேச அளவில் சார்லி சாப்ளினில் ஆரம்பித்து பல கலைஞர்களின் வாழ்க்கை அனுபவங்கள் அதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. இதில் நடிகை மனோரமாவும் விதிவிலக்கல்ல.

ஒரு பத்திரிகை கட்டுரைக்காக மனோரமாவின் வாழ்க்கை குறித்து அவரிடமே பேசி அதை ஆவணப்படுத்தியவர் இயக்குநர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன். நடிகை மனோரமாவின் வாழ்க்கைப் பயணம் குறித்து பிபிசி தமிழ் சார்பாக அவரிடம் பேசினோம். மனோரமா பற்றி சித்ரா லட்சுமணன் பகிர்ந்து கொண்ட முக்கிய விஷயங்கள் இந்தக் கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

காசியப்பன் – ராமாமிர்தம் தம்பதிக்கு, 26 மே, 1937ஆம் ஆண்டு, மன்னார்குடியில் பிறந்தவர் மனோரமா. இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவர் பிறந்த பத்தே மாதத்தில், ராமாமிர்தம், அவரது கணவரால் கைவிடப்பட்டார். இதன் பிறகு பள்ளத்தூருக்கு வந்து தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார் ராமாமிர்தம். இளம் வயதிலேயே அம்மாவின் மோசமான உடல் நிலையைப் பார்த்து, தனது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு போக ஆரம்பித்தார் மனோரமா.

இயல்பிலேயே நல்ல குரல்வளம் கொண்ட மனோரமாவின் பாடும் திறமையை பள்ளத்தூரில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த சுப்பிரமணியம் என்பவர் ஒருநாள் அடையாளம் கண்டார். அவர் அப்போது மேடையேற்றிய அந்தமான் காதலி என்கிற நாடகத்தில் ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த நடிகைக்கு பாடத் தெரியாததால் அந்த வாய்ப்பை மனோரமாவுக்கு சுப்பிரமணியம் வழங்கினார். மனோரமாவின் பாடலையும், நடிப்பையும் ரசிகர்கள் உற்சாகமாக ரசிக்க, நிரந்தரமாக நாடக நடிகையாகிப் போனார் மனோரமா. பல ஊர்களில் மனோரமா நடிக்கும் நாடகங்கள் அரங்கேறின.

தென்னகத்து சுரையா என பாராட்டு

பள்ளத்தூருக்கு அருகே இருக்கும் மற்றொரு ஊரில் அந்தமான் காதலி அரங்கேறிய போது, நாடகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பால்ராஜ் என்பவர் மனோரமாவின் நடிப்பை கவனித்தார். இவ்வளவு இளம் வயதில் இப்படி ஒரு திறமையா என வியந்து, புதுக்கோட்டையில் நடந்த மற்றொரு நாடகத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார்.

இது மனோரமாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து பல வாய்ப்புகள் அவரைத் தேடி வர ஆரம்பித்தன. அவரது நிதிச் சூழலும் சீராக ஆரம்பித்தது. அன்றைய காலகட்டத்தில் இந்தித் திரைப்படங்களில் பிரபலமாக இருந்த நடிகை சுரையாவின் நடிப்போடும், குரலோடும் மனோரமாவை ஒப்பிட்டு, தென்னகத்து சுரையா என்றே அவரை நாடக வட்டாரத்தில் அழைக்க ஆரம்பித்தனர். அவர் பாடி, நடிக்கும் நாடகம் என்று பிரதானப்படுத்தி விளம்பரங்களும் செய்யப்பட்டன.

நாளுக்கு நாள் அவருக்கான ஆதரவு பெருக, பால்ராஜ், தனது ‘யார் மகன்?’ என்கிற நாடகத்தில் மனோரமாவை பிரதான நாயகியாக்கினார். ஒரு முறை இந்த நாடகம் நடந்த விழாவிற்கு தலைமை தாங்கினார் பிரபல இயக்குநர் வீணை எஸ். பாலச்சந்தர். அந்த நாடகத்தில் நடிப்பவர்களின் உறவினர்கள், நண்பர்கள், சிறப்பு விருந்தினர் கையில் ஒரு பரிசைக் கொடுத்து, அதை அவரவருக்கு தெரிந்த நடிகர்களுக்குத் தருவது அப்போதைய வழக்கம்.

அப்படி, அந்த நாடகத்தில் நடித்த இரண்டாம் நாயகிக்கு பரிசு தர பாலச்சந்தரை சிலர் கேட்டனர். ஆனால் அவரோ மனோரமாவின் நடிப்பே நன்றாக இருந்தது என்றும், எப்படி இரண்டாம் நாயகியை கவுரவிப்பது என்றும் தன்னை அணுகியவர்களைக் கேட்டதோடு, மைக்கில் பேசும் போதும் மனோரமாவைப் பாராட்டி, ‘ஒரு வேளை இது நான் தரும் பரிசாக இருந்தால், அவருக்குத் தான் தருவேன்’ என்று கூறிவிட்டார்.

ஒரே இரவில் 100 பக்க வசனம்

படக்குறிப்பு, பல நாடகக் குழுக்களிடமிருந்து மனோரமாவிற்கு அழைப்புகள் வர ஆரம்பித்தன.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பல நாடகக் குழுக்களிடமிருந்து மனோரமாவிற்கு அழைப்புகள் வர ஆரம்பித்தன. இதன் பின் நடிகர்கள் முத்துராமன் மற்றும் வைரம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தனியாக ஆரம்பித்த கலைமணி நாடக சபாவின் ஒரு நாடகத்தில் மனோரமாவை இரண்டாம் கதாநாயகியாக நடிக்கக் கேட்டனர் . அவர்களின் பரிச்சயம் முன்னமே இருந்ததால், எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார் மனோரமா. ஆனால் அடுத்த நாள் நடக்கப் போகும் நாடகத்தில் நடிப்பதற்காகவே அவர்கள் வந்து கேட்கிறார்கள் என்பது மனோரமாவுக்கு பிறகுதான் தெரிந்தது.

நாடகம் போட வேறு ஊருக்குச் செல்ல இரவு முழுவதும் ரயில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்த ஓர் இரவில், கிட்டத்தட்ட 100 பக்க வசனங்களை மனதில் ஏற்றிக் கொண்டார் மனோரமா. அடுத்த நாள் நாடகத்தில், வசனங்களை சிறப்பாகப் பேசியதோடு, பாடல்களையும் பாடி அசத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த நாடக சபாவின் முக்கியப் பொறுப்பில் இருந்த நடிகர் எஸ்.எம். ராமநாதன் என்பவர், மனோரமாவைக் காதலித்தார். அவரது காதலை மனோரமாவும் ஏற்றுக் கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்து தொடர்ந்த சோகம்

ஆரம்ப நாட்கள் மகிழ்ச்சியாகவே கழிந்தது. மனோரமா பிரசவத்திற்காக தனது தாய்வீடு சென்றார். இதன் பிறகு மனோரமாவை ராமநாதன் சந்திக்கவே இல்லை. குழந்தை பிறந்த பின்னும் உடனடியாக அவர் வந்து பார்க்கவில்லை. சில நாட்கள் அங்கு வந்தார் ராமநாதன்.

ஆனால் அவர் வந்தது மனோரமாவை நாடகத்தில் நடிப்பதற்காகக் கூட்டிச் செல்ல மட்டுமே. மனோரமா மறுக்க, ராமநாதன் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் மனோரமா குழந்தையை விட்டு வர முடியாது என்று கூற, அங்கிருந்து கோபமாக வெளியேறினார் ராமநாதன். இதன் பிறகு அவர் மனோரமாவை சந்திக்கவே இல்லை.

கணவர் வீடு திரும்புவார் என்று எதிர்நோக்கிய மனோரமாவுக்குக் கிடைத்ததோ விவாகரத்து நோட்டீஸ் மட்டுமே. திருமண வாழ்க்கை, எதிர்காலம் என பலவற்றைப் பற்றி மனோரமா கண்டிருந்த கனவு, அந்த நொடியில் தவிடுபொடியானது. அந்த நாடகக் குழுவிலிருந்து மனோரமா வெளியேறிவிடக் கூடாது என்பதற்காகவே ராமநாதன் மனோரமாவை திருமணம் செய்து கொண்டார் என்கிற உண்மையையும் மனோரமா பின்னாட்களில் தெரிந்து கொண்டார். இதன் பிறகு தனது மகனுக்காக மட்டுமே தனது மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தார் மனோரமா. வேறொருவரை திருமணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு தனி ஆளாக தனது குழந்தையையும், அம்மாவையும் பார்த்துக் கொள்ளும் பொருட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார் மனோரமா. கலைஞரின் எழுத்தில் உருவான மணிமகுடம் என்ற நாடகத்தில் மனோரமா நடித்தது இந்த காலகட்டத்தில் தான். நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் ஆயிரம் முறைகளுக்கு மேல் இந்த நாடகத்தில் நடித்தார் மனோரமா.

தேடி வந்த சிங்களப் பட வாய்ப்பு

படக்குறிப்பு, சிங்கள மொழியில் உருவான ஒரு திரைப்படமே முதன் முதலில் அவர் நடித்து வெளியான திரைப்படம்.தொடர்ந்து மனோரமா ஒரு நடன ஆசிரியரிடம் நடனப் பயிற்சியை பெற்று வந்தார். அப்போதுதான் அவருக்கு முதல் முதலாக திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்தத் திரைப்படம் கைவிடப்பட்டது. இதன் பிறகு அவரது நடன ஆசிரியர் மூலம் இன்னொரு திரைப்பட வாய்ப்பு வந்தது. அதுவே மனோரமா நடிப்பில் வெளியான முதல் திரைப்படம்.

ஆனால் அது பலரும் நினைத்திருப்பது போல மாலையிட்ட மங்கை அல்ல. சிங்கள மொழியில் உருவான ஒரு திரைப்படமே முதன் முதலில் அவர் நடித்து வெளியான திரைப்படம். மஸ்தான் என்கிற இயக்குநரின் இயக்கத்தில், நாயகியின் தோழியாக நடித்திருந்தார் மனோரமா. அந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதற்காக சிங்கள வசனங்களை தமிழில் எழுதி, அதன் பின் நடித்ததாக ஒரு பத்திரிகை பேட்டியில் மனோரமா பகிர்ந்துள்ளார்.

திமுக கூட்டங்களில் தொடர்ந்து பல நாடகங்களில் நடித்து வந்தார் மனோரமா. அதில் அவரது நடிப்பைப் பார்த்த கவிஞர் கண்ணதாசன், அவர் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தில் நடிப்பதற்காக அவரை அணுகினார். ஆனால் அதில் மனோரமாவின் கதாபாத்திரம், நாயகனின் ஜோடி அல்ல, காகா ராதாகிருஷ்ணின் ஜோடி. அது நகைச்சுவை கதாபாத்திரம் வேறு.

இது தெரிந்து ஆரம்பத்தில் மனோரமா ஏமாற்றமடைந்தார். அவரது ஏமாற்றத்தைப் புரிந்து கொண்ட கண்ணதாசன், நாயகியாக மட்டும் நடித்தால் பல வருடங்கள் நீடித்திருக்க முடியாது, ஆனால் நகைச்சுவை நடிகையாக நடித்தால், காலம் முழுவதும் நடிக்கலாம் என்று அறிவுரை கூறியுள்ளார். இதன் பிறகே மனோரமா அதில் நடிக்க முழுமனதுடன் தயாரானார்.

கவிஞர் கண்ணதாசனின் கூற்று நிஜமானது. வெறும் நகைச்சுவை நடிகையாக மட்டுமே மனோரமா நின்றுவிடவில்லை. தனது அசாத்திய திறமையின் மூலம், மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் தன்னை வார்த்தெடுத்து, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

மனோரமா ‘ஆச்சி’ ஆன கதை

திரைப்படங்களில் நடிப்பதால், நாடகங்களை விட்டுவிடவில்லை மனோரமா. சு.கி.சுப்பிரமணியம் எழுதிய காப்புக் கட்டிச் சத்திரம் என்கிற வானொலி நாடகத்தில் மனோரமா, நாகேஷ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இதில் பனையூர் பாக்கியம் என்கிற கதாபாத்திரத்தை மனோரமா ஏற்றிருந்தார்.

செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த கதாபாத்திரம் என்பதால் அந்த பேச்சு வழக்கிலேயே மொத்த நாடகத்திலும் பேசிருந்தார் மனோரமா. 70 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது இந்த நாடகம். மனோரமா இதில் ஏற்று நடித்த கதாபாத்திரம் பிரபலமானதால், பலரும் அவரை ஆச்சி என்று அழைக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் உடன் நடித்த இளம் நடிகர்களும் ஆச்சி என்றே அழைக்க, அந்தப் பெயர் நிலைத்துப் போனது.

மனோரமா 9 வேடங்களில் நடித்த கண்காட்சி

இயக்குநர் ஏபி நாகராஜன் இயக்கத்தில் நடிகர் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்த நவராத்திரி திரைப்படம் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்தப் படம் வெளியானது 1964ல். சரியாக 7 வருடங்கள் கழித்து 1971ஆம் ஆண்டு கண்காட்சி என்கிற திரைப்படத்தை இயக்கினார் ஏபி நாகராஜன். இதில் மனோரமாவின் நடிப்புத் திறமையை எடுத்துக்காட்டும் விதமாக, அவரை 9 வேடங்களில் நடிக்க வைத்தார் நாகராஜன்.

முழுக்க முழுக்க கண்காட்சித் திடலில் நடப்பது போலவே இந்த மொத்தப் படமும் எடுக்கப்பட்டிருக்கும். சிவாஜிக்குப் பிறகு ஒரே திரைப்படங்களில் பல வேடங்களை ஏற்றது மனோரமா மட்டுமே. இவரை பெண் சிவாஜி என்று கூறுபவர்களும் திரையுலகில் உண்டு. கண்காட்சி திரைப்படத்தின் ஆரம்பத்தில் நடிகைகள் பெயர் வரும்போது, முதன்மையாக மனோரமாவின் பெயரே இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மறக்க முடியாத கதாபாத்திரங்கள், நிறைவேறாத ஆசை

நடிகன் திரைப்படத்தில் தான் நடித்ததுதான், மிகக் கடினமான கதாபாத்திரம் என்று மனோரமா கனடா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கொஞ்சம் பிசகினாலும் அந்தக் கதாபாத்திரம் செய்வது விரசமாக மாறிவிடும். எனவே மிகுந்த கவனத்துடன் அதை நான் அணுகினேன் என்கிறார் மனோரமா.

இந்த ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல, தில்லானா மோகனாம்பாளில் ஜில் ஜில் ரமாமணி, சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் சரியாக பேச்சு வராமல் நகைச்சுவையில் அசத்திய மல்லி, சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தின் கண்ணம்மா, பாட்டி சொல்லைத் தட்டாதே திரைப்படத்தில் நாயகனுக்கு பாட்டியாக கண்ணாத்தா, சின்னத்தம்பி படத்தில் நாயகனின் அம்மா, உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு அண்ணியாக அங்கயர்கண்ணி என, மனோரமாவைத் தவிற வேறு யாரும் நடிக்க முடியாது என்கிற ரீதியில் அவருக்காகவே பல கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் உருவாக ஆரம்பித்தன.

ஒரு வேளை அப்படி இல்லையென்றால், அவர் நடித்த பிறகு, அவரை விட வேறு யாரும் மிகச் சிறப்பாக நடித்துவிட முடியாது என்ற பெயரைப் பெற்றுவிடுவார் மனோரமா. மிகச்சிறப்பான குரல் வளம், எந்தக் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த பாத்திரமாகவே எளிதில் மாறிவிடும் தன்மை, எந்த மொழியில் நடித்தாலும் வசனங்களை முறையாகக் கற்றுக் கொண்டு பேசுவது, மேடையோ, சினிமாவோ, சின்னத்திரையோ, எந்தத் தளமாக இருந்தாலும் அதற்கேற்றபடி தன்னை தகவமைத்துக் கொள்வது, முக்கியமாக, அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் ஒரு எளிமை, மனோரமாவின் நடிப்பில் இருந்தது.

இதனாலேயே நம் குடும்பத்தில் இருக்கும் ஒருவரைப் போல, தமிழ் சினிமா ரசிகர்கள் ஆச்சி மனோரமாவைப் பார்த்தார்கள். முக்கியமாக, பல நாயகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் மனோரமா. அப்போதெல்லாம் தனது அம்மாவையே நினைத்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார். ஆனால், திருநங்கையாக ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற மனோரமாவின் ஆசை மட்டும் கடைசி வரை நிறைவேறவில்லை.

மனோரமாவுக்கு மாற்று என்று யாரும் கிடையாது. அவர் ஒரு கலைஞர் மட்டுமல்ல, ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. அவரது பன்முகத் திறமை, அவரை ஒரு அசாதாரண ஆளுமையாக மாற்றியது. அவரது நகைச்சுவை, கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் திறன் ஆகியவைக்கு ஒப்பு என்பதே கிடையாது. அவரது மரபு, யாராலும் அழிக்க முடியாத, மாற்ற முடியாத ஒரு காவியமாக தமிழ் சினிமாவின் தங்கப் பக்கங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு