Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்’ – என்எல்சியை ஒட்டிய கிராமங்களில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் கள ஆய்வு
பட மூலாதாரம், NLC
படக்குறிப்பு, என்.எல்.சிஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்16 நிமிடங்களுக்கு முன்னர்
“வேலைக்குப் போனால் 200 ரூபாய் சம்பளம் வரும். மாதம் மருந்து செலவுக்கே மூன்றாயிரம் தேவைப்படுகிறது. தனியார் மருத்துவரிடம் தான் சிகிச்சை பெறுகிறேன். எங்கள் கிராமத்தில் மருத்துவ வசதிகள் இல்லை”
நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களை ஒட்டியுள்ள சிறிய கிராமமான அம்மேரியைச் சேர்ந்த மணி என்பவரின் கூற்று இது. விவசாய கூலியாக இருக்கும் அவரது 2 சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) நிறுவனத்தை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு அனல்மின் நிலையம் மற்றும் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் காற்று மாசு ஆகியவையே காரணம் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நெய்வேலியில் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு பாதரசம் இருப்பதைக் கண்டறியப்பட்டிருப்பதாக, பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என என்எல்சி நிர்வாகம் கூறுகிறது. அப்படியானால் நிலக்கரி சுரங்கங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் என்ன பிரச்னை? பிபிசி தமிழின் கள ஆய்வில் தெரியவந்தது என்ன?
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது64 ஆயிரம் ஏக்கர் திறந்தவெளி சுரங்கம்
கடலூர் மாவட்டத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் இயங்கி வருகிறது.
சுமார் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி, நான்கு அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அனல் மின் நிலையத்தில் 3390 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ளதாக என்எல்சியின் இணையதளம் கூறுகிறது. நிலக்கரி சுரங்கத்துக்காக 1956-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள இடத்துக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அம்மேரி, ஆதண்டார் கொல்லை, கரிவெட்டி, கூரைப்பேட்டை, மூலப்பட்டு ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.
நீர் நிலைகளில் பாதரசம்
படக்குறிப்பு, கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.2023ஆம் ஆண்டு நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர், நிலத்தடி நீர், நீர்நிலை, விவசாய நிலம் ஆகியவற்றில் ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.
இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதனை செய்தபோது, வடக்கு வெள்ளூரில் உள்ள குடிநீர்த் தொட்டியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்தது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இதுதவிர, கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற கன உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. இதனைக் கண்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.
மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர், மெட்ரோ குடிநீர் வாரியம் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
களநிலவரம் என்ன?
படக்குறிப்பு, நெய்வேலி முதல் சுரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆதாண்டார் கொல்லை, மூலப்பட்டு, அம்மேரி உள்பட சுமார் 65 கிராமங்கள் உள்ளன.நெய்வேலி முதல் சுரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆதாண்டார் கொல்லை, மூலப்பட்டு, அம்மேரி உள்பட சுமார் 65 கிராமங்கள் உள்ளன.
இந்தக் கிராமங்களின் அருகில் சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதை பிபிசி தமிழ் கள ஆய்வின் போது பார்க்க முடிந்தது. பல இடங்களில் மிகப் பெரிய அளவில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன.
சுரங்கம் செயல்படும் இடங்களுக்குச் சென்றபோது, முழுதாக கம்பி வேலி அமைக்கப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு நம்மிடம் பேசிய சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர், “எந்தப் பகுதியில் இருந்து வருகிறீர்கள்?” என விசாரித்தார். அந்த வழியாக செல்லும் ஒவ்வொருவரையும் அவர் தீவிரமாக கண்காணிப்பதைப் பார்க்க முடிந்தது.
நிலத்தடி நீரால் சிறுநீரக பாதிப்பா?
படக்குறிப்பு, சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார் தனசேகரன்.அங்கிருந்து ஆதண்டார் கொல்லை கிராமத்துக்கு பிபிசி தமிழ் குழுவினர் சென்றோம். ”இங்கு குடியேறி 45 ஆண்டுகள் ஆகிவிட்டd. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கை, கால்களில் வலி, வீக்கம் இருந்ததால் ஆஸ்பத்திரிக்குப் போனேன். உப்பு அதிகமானதாக கூறி பரிசோதனைகளை எடுத்தார்கள்’ எனக் கூறுகிறார், தனசேகரன்.
இவருக்கு சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார். ‘எனக்கு மது, சிகரெட் என எந்தப் பழக்கமும் இல்லை. நிலத்தடி நீரைத் தான் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறேன்.’ எனக் கூறினார்.
தனது வீட்டில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் நிலக்கரிச் சுரங்கம் இருப்பதாக கூறுகிறார் தனசேகரனின் மகன் சத்தியமூர்த்தி.
“என் அப்பாவுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் மருத்துவ செலவுக்கு தேவைப்படுகிறது. ஒருநாள் மருந்து சாப்பிடாவிட்டால் கால் வீக்கம் அதிகமாகிவிடும். இதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் டயாலிஸில் வரை சென்றிருக்கும்” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சத்தியமூர்த்தி.
மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொன்னது என்ன?
படக்குறிப்பு, கடலூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது.கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல் முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயலட்சுமி கூடுதல் அறிக்கை ஒன்றை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.
அதில், நீர்நிலைகள் (Surface water), நிலத்தடி நீர், மண், சாம்பல் துகள் என 22 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆய்வில் 17 நீர்நிலைகளில் 15 இடங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் பாதரசம் (0.0012 mg/l to 0.115 mg/l) உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இவை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், NLC
படக்குறிப்பு, வானதி ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகம் பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்”வளையமாதேவி கூட்டுக் குடிநீர்த் திட்டம், வாலஜா ஏரி, அய்யன் ஏரி, பரவனாறு ஆகியவை குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளன. நீர்நிலைகளில் இயற்கையாக பாதரசம் உருவாகாது. இவற்றில் எப்படி உருவானது” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சோதனையில் 9 நிலத்தடி நீர் மாதிரிகளில் ஆறு இடங்களில் பாதரசம் இருந்துள்ளது. அதன் அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.001 Mg/1 என, இந்திய அரசின் குடிநீர் தரக்கட்டுப்பாடு வரையறுத்துள்ளது.
குடிநீரில் 0.006 mg/L என்ற அளவில் பாதரசம் இருக்கலாம் எனவும் செலினியத்தில் 0.01 என்ற அளவிலும் இருக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
அப்படியிருக்கும்போது, இங்கு 0.0025 Mg/l முதல் 0.0626 வரை பாதரசம் காணப்பட்டுள்ளது. “இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 2.5 முதல் 62 மடங்கு வரை அதிகம்” எனக் கூறுகிறார், பிரபாகரன் வீர அரசு.
அதிலும், வானதி ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகம் பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“நிலக்கரி சுரங்கங்களை ஒட்டி வாழும் மக்கள் இந்த நிலத்தடி நீரைத் தான் பயன்படுத்துகின்றனர்” எனவும் அவர் கூறினார்.
“இது வெறும் வாழ்வாதார பிரச்னை மட்டும் அல்ல. மக்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏராளமானோர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் டயாலிஸிஸ் செய்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை வசதிகள் கிடைப்பதில்லை” என்கிறார், பிரபாகரன் வீர அரசு.
“நிலத்தடி நீரைத் தவிர வேறு ஆதாரம் இல்லை”
படக்குறிப்பு, அம்மேரி கிராமத்தில் சுமார் 25 வருடங்களாக வசிக்கும் மணி என்பவருக்கும் இதே பிரச்னை தான்.அம்மேரி கிராமத்தில் சுமார் 25 வருடங்களாக வசிக்கும் மணி என்பவருக்கும் இதே பிரச்னை தான். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் உடல் வீக்கம் அதிகமானதால், தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
“இரண்டு சிறுநீரகமும் சுருங்கிப் போய்விட்டதாக மருத்துவர் கூறினார். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்குச் செல்லும்போது 3 ஆயிரம் செலவாகிறது.” என்கிறார் மணி.
“மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றால் கடலூர் அல்லது புதுச்சேரி போக வேண்டும். எங்கள் கிராமத்துக்கு ஒரு செவிலியர் கூட வந்ததில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“நிலத்தடி நீரைத் தவிர வேறு எந்தத் தண்ணீரும் எங்களுக்கு வருவதில்லை.” என்கிறார் மணி.
அரசு மருத்துவமனை உள்ளது.. ஆனால்?
படக்குறிப்பு, இக்கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்எல்சி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.அம்மேரி கிராமத்தில் மட்டும் சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்எல்சி மருத்துவமனை அமைந்துள்ளது.
“இங்கு பொதுமக்கள் சென்றால் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்வார்கள். என்எல்சி ஊழியர்களுக்கு மட்டுமே அங்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கிராமத்தில் எந்த மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டதில்லை” என்கிறார், ஆதண்டார் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணி.
நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து என்எல்சி டவுன்ஷிப்புக்கு (TownShip) கொடுப்பதாகக் கூறும் மணி, “கிராமங்களுக்கு அந்த நீர் வருவதில்லை. சுரங்கத்தில் மண்ணை இலகுவாக்குவதற்கு வெடி வைக்கின்றனர். அதன் கழிவுகள் ஓடை வழியாக செல்கிறது” எனக் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, சுரங்கத்தின் பரப்பளவு அதிகரிப்பதால் கிராமத்துக்கு பிரச்னை அதிகரிப்பதாகக் கூறும் ரவிசுரங்கத்தின் பரப்பளவு அதிகரிப்பதால் கிராமத்துக்கு பிரச்னை அதிகரிப்பதாகக் கூறும் ரவி, “கீழே படியும் கரி உள்பட அனைத்துக் கழிவுகளையும் வெளியேற்றுகின்றனர். அது இங்குள்ள ஓடை வழியாக செல்கிறது” என்கிறார்.
அனல்மின் நிலையத்தின் கழிவுகள், வாலஜா ஏரியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் சென்று அங்கிருந்து பெருமாள் ஏரி மூலமாக கடலில் சென்று கலப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆதண்டார் கொல்லையைச் சுற்றி வந்தபோது, ஊருக்குள் நீரோடை போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. “அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இது” எனக் கூறினார் ரவி. அந்த நீர் கருப்பு நிறத்தில் இருந்தது.
படக்குறிப்பு, “அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இது” எனக் கூறினார் ரவி. அந்த நீர் கருப்பு நிறத்தில் இருந்தது.”தனித் தீவாக மாறிய 4 கிராமங்கள்
படக்குறிப்பு, நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து என்எல்சி டவுன்ஷிப்புக்கு (TownShip) கொடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். “நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால் தோல் நோய்கள் அதிகமாக உள்ளன. வானதி ராயபுரம் பகுதியில் காற்று மாசுபாடு அதிகம். இங்கு ஆஸ்துமா பரவலாக உள்ளது” எனக் கூறுகிறார் ரவி.
கடந்த ஆண்டு தனியார் சுற்றுச்சூழல் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டபோது, ஒரே தெருவில் சுமார் 15 பேருக்கும் மேல் ஆஸ்துமா பாதிப்பு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
என்னென்ன பாதிப்புகள் வரும்?
படக்குறிப்பு, என்.எல்.சி”பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்களால் மனித உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?” என, சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தியிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“சிறுநீரகங்களால் கன உலோகங்கள் வடிகட்டப்படும்போது அவை அதில் தங்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை மோசமான புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்தும்” என்று அவர் கூறுகிறார்.
தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து ஆற்றில் கலக்கும் கன உலோகங்களால் புற்றுநோய், சிறுநீரக பாதிப்புகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பதில்
நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்ரீதியான பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்று மட்டும் பதில் அளித்தார்.
என்எல்சியின் விளக்கம் என்ன?
என்எல்சியின் மக்கள் தொடர்புத் துறையின் துணைப் பொது மேலாளர் கல்பனா தேவியிடம் பிபிசி தமிழ் பேசியது.
“உடல்நலப் பிரச்னைக்கு பாதரசம் உள்ளிட்டவை காரணம் எனக் கூறுகின்றனர். அதற்கான காரணம் குறித்து எந்த ஆவணங்களும் (Records) இல்லை” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அறிக்கைக்கு நீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த விவகாரத்தை சட்டரீதியாகவே நாங்கள் கையாண்டு வருகிறோம்” எனக் கூறினார்.
மக்களுக்கு மருத்துவ முகாம்களை நடத்தாமல் இருப்பது குறித்துக் கேட்டபோது, “ஏராளமான மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. சில விஷயங்கள் மக்களிடையே தவறாக கொண்டு செல்லப்படுகிறது. இதை சட்டரீதியாக என்எல்சி நிர்வாகம் கையாள உள்ளது” என்கிறார் கல்பனா தேவி.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு