அரச துறையில் நிலவும் ஊழல் குறித்த உலகளாவிய தரவரிசையில் இலங்கை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் (Transparency Internatio
அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான புதிய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி. 2025ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டில் இலங்கை 35 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இது 2024ஆம் ஆண்டு பெற்ற 32 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 3 புள்ளிகள் உயர்வாகும்.
இதன் மூலம், கடந்த 10 ஆண்டுகளாக 121ஆவது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 182 நாடுகளில் 107ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கையின் இந்தச் சிறு முன்னேற்றமானது, அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சொத்து மீட்புச் சட்டங்கள் மற்றும் சட்ட அமுலாக்க வழிமுறைகளை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நிபுணர்கள் மற்றும் வணிகத் தரப்பினரிடையே கிடைத்துள்ள வரவேற்பைப் பிரதிபலிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது இலங்கை இன்னும் தேக்க நிலையிலேயே இருப்பதாக ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், முன்மொழியப்பட்டுள்ள அரச சாரா நிறுவனங்கள் தொடர்பான சட்டம், இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடை சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு ஆகியவை சிவில் சமூகத்தின் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
இவை ஊழலைக் குறைப்பதற்கு அவசியமான காரணிகளாகும். உலகளவில் ஊழல் அதிகரித்து வருவதாகவும், பல நாடுகள் பாதுகாப்பின் பெயரால் அதிகாரத்தைக் குவித்து, வெளிப்படைத்தன்மையைக் குறைத்து வருவதாகவும் டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் எச்சரித்துள்ளது.