Home முதன்மைச் செய்திகள் யாழ்.மாநகர முதல்வர் விடயம் – சுமந்திரன் ஒதுங்கி இருக்க வேண்டும் ; பஷீர் காக்கா கோரிக்கை

யாழ்.மாநகர முதல்வர் விடயம் – சுமந்திரன் ஒதுங்கி இருக்க வேண்டும் ; பஷீர் காக்கா கோரிக்கை

by ilankai

தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த போராளி மனோகர் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபை மேயர் விவகாரம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமை தொடர்பான விடயத்தில் பதில் செயலாளர் சுமந்திரனை கையாளவிடுவது எதிர்பார்க்கும் நோக்கங்களுக்கு மாறான விளைவையே தரும் என்பதனை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குக் குறிப்பாக மத்திய குழுவினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குறிப்பாக யாழ். மேயர் விடயம் கவனத்துக்குரியது. இதனை முன்நிபந்தனைபோன்று வைப்பது ஏற்புடையதல்ல.

சுமந்திரன் கட்சிக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ்த் தேசிய உணர்வாளர்களை நோகடிக்கும் விதத்திலேயே செயற்பட்டு வந்துள்ளார். 

2018 நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது தேர்தல் முடிந்த பின்னரே மேயர் தொடர்பாக முடிவெடுப்பது எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக முடிவெடுத்தனர். தமிழரசுக் கட்சிப் பணிமனையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் முடிவைத் தட்டச்சுச் செய்து கொண்டிருக்கும்போது வெளியில் வந்த சுமந்திரன் ஊடகவியலாளர்களிடம் ‘ஆர்னோல்ட் தான் மேயர்’ என அறிவித்தார். 

சில நிமிட நேரத்தில் அங்கே வந்த கட்சித் தலைவர், செயலாளர் ஆகிய இருவரிடமும் ‘ஆர்னோல்ட் தான் மேயர்’ எனச் சுமந்திரன் சொல்கிறாரே எனக் கேட்டனர் ஊடகவியலாளர்கள். 

அவர்கள் இருவரும் அவ்வாறான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர். குழம்பிப் போயிருந்த ஊடகவியலாளர்கள் மீண்டும் அங்கு வந்த சுமந்திரனிடம் கட்சித் தலைவர், செயலாளரின் கூற்றைச் சுட்டிக் காட்டினர். அதற்கு மிக அலட்சியமாக ‘அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால், ஆர்னோல்ட் தான் மேயர்’ என எகத்தாளமாகக் குறிப்பிட்டார்.

 கட்சியில் தலைவர், செயலாளர் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதே அவரது முடிவு.

மாகாணசபையில் இறுதிப்போரில் நடைபெற்றது இனப்படுகொலையே என்றும் இதற்குச் சர்வதேச விசாரணையே வேண்டும் என்று முதலமைச்சர் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். இது தற்போது ஜே.வி.பி.யின் சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரனுக்குச் சினமூட்டியது. 

முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தார். சுமந்திரன் சார்பில் ஆர்னோல்ட் தான் மும்முரமாக இயங்கினார். பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்கினால் நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானத்தைத் தற்போதைய கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களே ஆளுநரிடம் கையளித்தார். ஆனால், இந்த விடயம் தொடர்பாகப் பெருந்தலைவர் இரா. சம்பந்தனிடம் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அந்தளவுக்குத் தன்னிச்சையாகச் செயற்பட்டார் சுமந்திரன், தனது சார்பில் இத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததுக்குச் சன்மானமாகவே ஆர்னோல்ட் தான் மேயர் என்று முடிவெடுத்தார்.

பொதுவேட்பாளர் விடயத்திலும் தன்னிச்சையாகவே முடிவெடுத்தார். யார் பொதுவேட்பாளர் யார் என்று முடிவெடுக்க முன்னரே அவரைத் தோற்கடிப்பது எனச் சுமந்திரன் தீர்மானித்தார். வழக்கைத் தொடங்குவதற்கு முன்னரே தீர்ப்பை எழுதும் நீதிபதியானார் அவர். ஆயிரம் விகாரைகளை அமைக்கும் உறுதியுடன் இருக்கும் சஜித் பிறேமதாஸவே அவரது தெரிவாக இருந்தது. பொது வேட்பாளருக்கு ஆதரவாக மாவை செயற்பட்டார் என்பது வெளிப்படை. கட்சித் தலைவர் கிளிநொச்சியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். பொதுவேட்பாளரின் பணிமனைக்குச் சென்று ஆசீர்வதித்தார். அப்படியிருந்தும் அண்மையில் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோரிக் கடிதம் அனுப்பியுள்ளார் இவர்.

யாழ். மேயர், பொதுவேட்பாளர் விடயங்களில் தலைமையின் முடிவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துவிட்டு மத்திய குழு என்றொரு முலாம் பூசித் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவானவர்களைக் கட்சியில் இருந்து துரத்துவதிலேயே இவர் அக்கறையாக உள்ளார். கட்சித் தேர்தலில் தனக்கு எதிராகச் செயற்பாட்வர்களை நீக்கினால்தான் தான் தலைவராக முடியும் என நம்புகிறார்.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்கும் முயற்சி நடைபெற்றபோது தமிழரசுக் கட்சியினரைவிடக் குறைவானர்களே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் இருந்தனர். எனினும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரையே முதல்வராக்க இரா. சம்பந்தன் முடிவெடுத்தார். பெரும்பான்மை தம்மிடம் உள்ளதென அவர் நினைக்கவில்லை. அவர் இன ஐக்கியத்தையே பெரிதாக நினைத்தார். அதேபோல தற்போதுத் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்துச் செயற்பட முடிவெடுப்பதற்கு முன்நிபந்தனை விதிப்பது போன்று யாழ். மேயர் எந்தக் கட்சி என்று தானே முடிவெடுக்கிறார்.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று கூறுவார்கள். அந்த நிலையை உருவாக்கிச் சந்தி சிரிக்கும் நிலைமை உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, இந்த அபாயத்தைத் தவிர்க்கச் சுமந்திரனைத் தவிர்த்துக் கட்சித் தலைவரே நேரடியாகக் கையாள்வதே சிறந்தது.

அத்துடன் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களுக்கு விளக்கம் கோரும் கடிதத்தை மீளப்பெறுவது தமிழ்த்தேசியத்தை நேசிப்பவருக்கு ஆறுதலளிக்கும் விடயமாக இருக்கும்.

எனவே, தற்போது தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும்போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும். மாகாணசபை போன்று குழப்பமான சூழ்நிலைகள் உள்ளூராட்சிச் சபைகளில் தோன்றுவதைத் தவிர்க்க இது ஒன்றே வழி எனக் கருதுகிறேன் – என்றார்.

Related Articles