தமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதன் ஊடாகவே புதிய அரசியலமைப்பு குறித்த பொதுமக்களுடனான கலந்துரையாடலை அர்த்தமுள்ளதாக மேற்கொள்ளமுடியும். இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை ஊடாக நாடளாவிய ரீதியில் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் எனச் சிந்திக்க வேண்டும். கொழும்பிலுள்ள ஒரு தரப்பு நினைப்பது மாத்திரம் சரியானதாக இருக்காது.
இதன் வெளியீடு மக்களுக்குத் திருப்திகரமானதாக அமைவதற்கு, இச்செயன்முறை குறித்த பொதுமக்களுடனான கலந்துரையாடல் சகலரையும் உள்ளடக்கியதாகவும், உரிய முறையிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பேராசிரியர் தீபிகா உடகம வலியுறுத்தியுள்ளார்.
தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் ‘வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்’ (One Text Initiative) எனும் அமைப்பினால் செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இதுபற்றிய தகவல்களைப் பகிர்வதுடன், கருத்தாடல்களைக் கட்டியெழுப்பும் நோக்கில் citizen’s constitution.lk என்ற இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய பேராசிரியர் தீபிகா உடகம, இலங்கை போன்றதொரு நாட்டில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவேண்டியது மிக அவசியம் எனவும், இருப்பினும் தான் ஒரு மாணவியாக இருந்தபோது பேசப்பட்ட இவ்விடயம், தற்போது தான் ஓய்வுபெற்றதன் பின்னரும் பேசப்படுவதாகக் குறிப்பிட்டார்.
‘கடந்த 2022 ஆம் ஆண்டு எழுச்சியடைந்த அரகலய போராட்டத்தை அடுத்து இளம் தலைமுறையினர் நாடளாவிய ரீதியில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தைக் கோரினர். அந்த மாற்றம் எவ்வாறானதாக அமையவேண்டும் என்பது தெளிவற்றதாக இருந்தாலும், நாட்டின் ஆட்சியியல் நிர்வாகம் தொடர்பில் இளைஞர்கள் அதிருப்தியடைந்திருந்தனர்.
அதன் நீட்சியாகவே இப்போது மீண்டும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்த கருத்தாடல்கள் ஆரம்பமாகியிருக்கின்றன. இருப்பினும் கடந்த காலங்களில் இதுபற்றிப் பல தடவைகள் பேசப்பட்டு, பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும், அதற்கு அப்பால் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை’ என்றும் அவர் கரிசனை வெளியிட்டார்.
குறிப்பாக கடந்த ஆண்டு ஊழளெவவைரவழைn நேவ எனும் ஆய்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் 250 க்கும் மேற்பட்ட அரசியலமைப்புசார் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்ட போதிலும், அவற்றில் மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஜனநாயக முன்னேற்றமே எட்டப்பட்டதாகவும், ஆகவே இது பொதுவான உலகளாவிய நிலைவரம் என்றே தான் கருதுவதாகவும் தீபிகா உடகம சுட்டிக்காட்டினார்.
அதேவேளை அர்த்தமுள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டுமாயின், முதலாவதாக இரண்டு குடியரசு யாப்புக்களையும் ஆராயவேண்டும் என்றும், அவ்விரு அரசியலமைப்புக்களும் உருவாக்கப்பட்டபோது பொதுமக்களுடனான கலந்துரையாடல் என்பது மிகக்குறைந்தளவிலேயே காணப்பட்டதாகவும், தற்போதைய செயன்முறையில் அக்குறைபாடு நிவர்த்திசெய்யப்பட்டு, புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுமக்களுடன் பரந்துபட்ட அளவிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
‘தமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதன் ஊடாகவே அரசியலமைப்பு தொடர்பான பொதுமக்களுடனான கலந்துரையாடலை அர்த்தமுள்ள வகையில் முன்னெடுக்கமுடியும். இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை ஊடாக நாடளாவிய ரீதியில் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் எனச் சிந்திக்க வேண்டும். கொழும்பிலுள்ள ஒரு தரப்பு நினைப்பது மாத்திரம் சரியானதாக இருக்காது.
இச்செயன்முறையின் வெளியீடு மக்களுக்குத் திருப்திகரமானதாக அமையுமா என்ற கேள்விக்கான பதில் நேர்மறையானதாக இருப்பதற்கு, இச்செயன்முறை குறித்த பொதுமக்களுடனான கலந்துரையாடல் சகலரையும் உள்ளடக்கியதாகவும், உரிய முறையிலும் மேற்கொள்ளப்படவேண்டும். அதுமாத்திரமன்றி உணர்வுபூர்வமான அடிப்படைகளில் நோக்கும்போது, இலங்கையின் அரசியலமைப்பு மக்களிடமிருந்து விலகியிருக்கிறது. எனவே மக்கள் மத்தியில் அந்த உணர்வு ரீதியான பிணைப்பையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படைக்கூறுகள் தொடர்பில் கருத்துரைத்த அவர், ‘எமது அரசியலமைப்பை ஆளும் அடிப்படைக்கூறுகள் எவை என்பது பற்றிக் கவனம் செலுத்தவேண்டும். அதன்படி குறிப்பாக தேசிய மற்றும் உள்ளுராட்சி மட்டங்களில் முறையான அதிகாரப்பகிர்வு உள்வாங்கப்படவேண்டும். அதேபோன்று அடிப்படை உரிமைகளுக்கான வலுவான பாதுகாப்பு, சிவில், சமூக, மத மற்றும் கலாசார உரிமைகளுக்கான பாதுகாப்பு, தனிநபர் மற்றும் குழுக்களின் உரிமைகள், ஒடுக்குமுறைகளை முடிவுறுத்தல் தொடர்பான சரத்து மட்டுப்பாடுகள் அற்றதாக இருத்தல் என்பனவும் அதில் உள்ளடக்கப்படவேண்டும்.
‘அடுத்ததாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை வேறு எந்த முறைமையின் ஊடாகப் பதிலீடு செய்யலாம் என்பது பற்றி ஆராயவேண்டும். அதனை பாராளுமன்ற முறைமையின் ஊடாகப் பதிலீடு செய்யும் பட்சத்தில், நிறைவேற்றதிகாரமுடைய பிரதமரும் ஏதேச்சதிகாரியாக மாறமாட்டாhர் என்பதற்கான உத்தரவாதம் என்ன என்று சிந்திக்கவேண்டும்.
அதுமாத்திரமன்றி முக்கிய கட்டமைப்புக்களை அரசியல்மயமாக்கத்திலிருந்து விடுவித்தல், அரசியலமைப்புப்பேரவையில் சிறுபான்மை உறுப்பினர்களின் பங்கேற்பு, கட்சிகளுக்கு இடையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டும். புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு என்பது கடந்த காலங்களைப்போன்று முக்கிய விடயங்களை விடுத்து உருவாக்கப்பட்ட ஆவணமாக இருக்கக்கூடாது’ என வலியுறுத்தினார்.
