
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின், தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியாகிவிட்டதாகவும், மேலும் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி பெறப்பட்ட 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியான நிலையிலேயே மீண்டும் தடுப்புக்காவல் கோரப்பட்டதாக இன்று வியாழக்கிழமை (05) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டுள்ள கம்பஹா பொலிஸ் ஆய்வாளர் உதித் உதயசாந்தவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க இதன்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் தொடர்பில் உத்தரவுகளைப் பிறப்பித்த நீதவான், எதிர்வரும் 19 ஆம் திகதி மன்றில் மேலதிக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
