
“தவெகவை ஓட்டை இன்ஜின் என விமர்ச்சித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேவலமானவர். அவர் பற்றி இனிமேல் என்னிடம் கேட்க வேண்டாம்” என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னையில் ஊரக வளர்ச்சித் துறையினர் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கழிப்பறை செல்ல விடாமலும், உணவருந்த செல்ல முடியாமலும் காவல் துறை அடக்குமுறை செய்கின்றனர். அவர்களை காவல் துறை அவதூறாக பேசுகின்றனர்.
இதுபற்றி அந்த துறையின் அமைச்சர் என்ற பெயரில் உதயநிதி, அவர்களை இதுவரைக்கும் அழைத்து பேசவில்லை. பிறப்பால் துணை முதல்வரானவர் அப்படியெல்லாம் பேசமாட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
அதிமுக கூட்டணியை யார் அமைத்தார்கள் என எல்லோருக்கும் தெரியும். இதற்கான அறிவிப்புகளை பாஜகவே வெளியிட்டது. என்டிஏ என்றால் பாஜக கூட்டணி தான். இந்தக் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கிறார்களோ, அவர்களே கூட்டணிக்கும் தலைமை ஏற்பர். இதன்படி, சென்னை கூட்டத்துக்கு பிரதமர் மோடி தான் என்எடிஏ கூட்டணிக்கு தலைமை வகித்தார்.
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளது. இதை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை யார் கொடுக்கின்றனர் என்பது முக்கியம். திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு இல்லை. தவெக விரைவில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும்.
தவெக இன்ஜின் ஓட்டை இன்ஜின் என அண்ணாமலை விமர்சனம் செய்கிறார். இரட்டைக் கொலை செய்து, தவழ்ந்து ஆட்சியை பிடித்த தற்குறி பழனிசாமி என மேடையில் சொன்ன அண்ணாமலை, ஒரே ஆண்டில் பழனிசாமியை முதல்வராக்குவோம் என்கிறார். பொது வாழ்வில் இதுபோன்ற கேவலமான நபர்கள் பற்றி பேச வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து” என்று அவர் கூறினார்.
