மட்டக்களப்பு புதூர் பிரதேசத்துக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய முதியவரான பெண் ஒருவருக்கு யுவதி ஒருவர் ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயங்கியதும் அவர் அணிந்திருந்த 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 பவுன் தங்க சங்கிலி 2 அரைப் பவுன் இரண்டு காப்புக்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் புதன்கிழமை (4) பிற்பகல் இடம் பெற்றுள்ளதுடன் மயக்கமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முதியவரான பெண் தனது வீடான பெரிய கல்லாற்றில் இருந்து மட்டக்களப்பு புதூர் பிரதேசத்திலுள்ள அவரது சகோதரியின் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக சம்பவ தினமான புதன்கிழமை (4) பகல் 11.00 மணிக்கு அங்கிருந்து பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டியில்; ஏறி மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு பிற்பகல் 2.00 மணியளவில் வந்தடைந்தடைந்தார்.
இதையடுத்து புதூருக்கு செல்வதற்கான பஸ் வண்டி 10 நிமிடத்துக்கு முன்னர் சென்றதையடுத்து அடுத்த பஸ் வண்டிக்காக பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்து கொண்டார். இதன்போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் இளைஞர் ஒருவருடன் வந்த இளம் யுவதி ஒருவர் பஸ் வண்டிக்காக காத்திருந்த அந்த முதியவரான பெண்ணுக்கு அருகில் சென்ற பேச்சுக் கொடுத்துக் கொண்டு தங்க ஆபரணங்களை கழற்றி கைபையில் வைக்கவும் இங்கு கள்ளர்கள் அதிகம் உங்கள் சங்கிலியை அறுத்து சென்று விடுவார்கள் என அவர் கொண்டு வந்த ஜூஸ் போத்தலை கொடுத்து அதை குடிக்குமாறு பலதடவை கேட்டுக் கொண்டதை அடுத்து அதனை குடித்துள்ளார்.
இந்த ஜூஸை குடித்த அவர் மயக்கமானதையடுத்து அவரின் கை பையில் இருந்த 7 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை அந்த யுவதி கொள்ளையடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞருடன் தப்பி ஓடியுள்ளார்.
இந்த நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில் பஸ் வண்டிக்காகச் சென்ற ஒரு பெண் குறித்த முதிய பெண் அங்கு கிடந்துள்ள நிலையில் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
