
நாட்டின் தனியார் பேருந்துத் தொழில்துறையினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வந்த மிகப்பாரிய சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2026 ஜனவரி 17ஆம் திகதியிடப்பட்ட 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயணிகள் சேவை அனுமதிப்பத்திர ஒழுங்குவிதிகள் இதற்கான அவசியமான சட்ட ஏற்பாடுகளை வழங்குகின்றன. இந்த புதிய விதிமுறைகளின் கீழ் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இரு தரப்பினரும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் பேருந்து உரிமையாளர்கள் தமது போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை மற்றுமொருவருக்கு சட்டபூர்வமாக கைமாற்ற முடியும் என அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில்
1991ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை சட்டபூர்வமாக வேறொருவருக்கு மாற்ற முடியாது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிலவி வந்த சட்டதிட்டங்களின்படி ஒருவருக்கு வழங்கப்பட்ட பேருந்து அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக வேறொருவருக்குப் பெயரிடவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது இருந்தது.
இதனால் பேருந்து உரிமையாளர்கள் இத்தொழிலிலிருந்து விலகும்போதும் பேருந்தை விற்பனை செய்யும்போதும் அந்த அனுமதிப்பத்திரத்தை மாற்ற முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
இதன் விளைவாக திரைமறைவில் பல்வேறு சட்டவிரோத முறைகள் ஊடாக அனுமதிப்பத்திரங்கள் கைமாற்றப்பட்டு வந்தன. உண்மையான உரிமையாளர் ஒருவராகவும் தொழிலை நடத்துபவர் வேறொருவராகவும் இருந்தமையால் இத்துறையில் ஒழுக்கத்தைப் பேணுவதில் பாரிய சவால்கள் காணப்பட்டன.
பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் நாம் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அவர்களது பிரதான கோரிக்கையான அனுமதிப்பத்திர மாற்றத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2026 ஜூன் மாதம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானி ஊடாக அதற்கான சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் உரிய நிபந்தனைகளின் கீழ் எவரும் தமது அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக மற்றுமொருவருக்குப் பெயரிட முடியும்.
இனிவரும் காலங்களில் இத்துறைக்குள் நுழைவதற்கு அரசியல் செல்வாக்குகளோ தனிப்பட்ட அறிமுகங்களோ அல்லது கடிதங்களோ அவசியமில்லை. எவரும் பகிரங்க கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றி இத்தொழிலுக்கு வர முடியும். ஊழல் மற்றும் மோசடிகளற்ற ஒரு போக்குவரத்து சேவையை உருவாக்குவதே எமது இலக்காகும்.
குறிப்பாக நவீன தொழில்நுட்ப அறிவைக் கொண்ட இளைஞர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் இத்துறைக்கு வர வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த புதிய சட்ட நடைமுறையானது இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகின்றேன். என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
