‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை (06) கண்டியில் நடைபெறவுள்ளது. அதற்கமைய, ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்வில பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கைத்தொழிலாளர்களுக்கும், முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கும் நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு குண்டசாலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும். ‘டித்வா’ புயலினால் தமது கைத்தொழில் நிலையங்கள் அல்லது இயந்திர உபகரணங்கள் போன்றவற்றிற்குச் சேதம் ஏற்பட்ட நபர்களுக்கு, வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக நட்டஈட்டுத் தொகையாக 02 இலட்சம் ரூபா வீதம் இதன்போது வழங்கப்படவுள்ளது. சிறிய, நடுத்தர அல்லது பாரிய அளவு என்ற பேதமின்றி பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வியாபாரங்களுக்கும் இந்த நிதியுதவி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், கண்டி மாவட்டத்தில் முழுமையாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்குப் புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்காக வழங்கப்படவுள்ள 50 இலட்சம் ரூபா தொகையில், முதற்கட்டமாக 20 இலட்சம் ரூபா காசோலைகளை வழங்குவதும் இதன்போது இடம்பெறும். தமக்குச் சொந்தமான காணியில் அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணியில் வீட்டை நிர்மாணிக்கும் நபர்கள் இத்திட்டத்தினுள் உள்ளடக்கப்படுவர். ‘டித்வா’ புயல் காரணமாக முழுமையாக வீடுகள் சேதமடைந்த மற்றும் மண்சரிவு உயர் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காகக் காணிகளை வழங்குதல் மற்றும் நட்டஈடு வழங்குதல் என்பன நாளை (06) பிற்பகல் நியங்கொட பாடசாலை மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன், வீடுகள் பகுதியளவு சேதமடைந்த குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் நட்டஈட்டுத் தொகையை வழங்குவதும் இதன்போது இடம்பெறும். புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்குச் சமாந்தர ஒன்றாக, புதிய வீடொன்றின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இதனிடையே, கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் (A-009) மஹய்யாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகளும் நாளை முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், நீண்ட காலமாக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதும் நாளை முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.