
இலங்கை மீனவர்கள் சிலர், ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இந்தியக் கடற்படையினராலோ அல்லது இந்தியக் கடலோரக் காவல் படையினராலோ தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்தியக் கடற்படையினராலோ அல்லது இந்தியக் கடலோரக் காவல் படையினராலோ இலங்கை மீனவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் மனிதாபிமான அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.