ஜப்பானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் கடந்த ஜனவரி 20 முதல் பெய்து வரும் அதீத பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (பெப்ரவரி 4, 2026) 35 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது . ஆமோரி (Aomori) போன்ற பகுதிகளில் பனியின் அளவு 4.5 மீற்றர் (14 அடி) வரை உயர்ந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச அளவாகும். வீடுகள் மற்றும் வீதிகளில் குவிந்துள்ள பனியை அகற்றவும், தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்களைக் காக்கவும் ஜப்பானிய தற்காப்புப் படைகள் (SDF) களமிறக்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் பெரும்பாலானோர் கூரைகளில் படிந்துள்ள பனியை அகற்ற முற்பட்டபோது கீழே விழுந்தும், பனிச்சரிவில் சிக்கியும் அல்லது அதிகப்படியான உடல் உழைப்பால் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்படுகின்றது. பனிப்புயல் மற்றும் மிகக் குறைந்த பார்வைத்திறன் (Low Visibility) காரணமாக, ஜப்பானின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA) ஆகிய நிறுவனங்கள் இதுவரை 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. குறிப்பாக ஹொக்கைடோ (Hokkaido), ஆமோரி மற்றும் நீகாட்டா ஆகிய பகுதிகளில் உள்ள விமான நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் முற்றாக முடங்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தங்கியுள்ளனர். அதேபோன்று ஜப்பானின் அதிவேக புகையிதங்களான தோகைடோ ஷிங்கான்சென் (Tokaido Shinkansen) மற்றும் அகிதா ஷிங்கான்சென் ஆகிய சேவைகள் பனியை அகற்றும் பணிகளுக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன அல்லது மிக மெதுவாக இயக்கப்படுகின்றன. வடக்கு ஜப்பானில் பல உள்ளூர் புகையிதப் பாதைகள் தண்டவாளங்களில் பனி மூடியிருப்பதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜப்பானிய பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, மேலதிக உயிரிழப்புகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் இந்தப் பனிப்பொழிவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. Tag Words: #JapanSnow #WeatherAlert2026 #Niigata #Aomori #NaturalDisaster #JapanNews #ClimateChange #RescueMission #LKA #SnowStorm