மன்னார் பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் அதனால் உள்ளூர் மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் விமா்சனம் வைத்துள்ளாா் மன்னாரில் இன்று (பெப்ரவரி 3, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடபகுதி மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து பலமுறை முறையிட்டும், கடற்றொழில் அமைச்சர் இது குறித்து எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தூண்டிவிடப்படுவதாகவும், தமிழக முதலமைச்சர் நினைத்தால் இதனைத் தடுத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ‘கிவுல் ஓயா’ திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீனவர் பிரச்சினையில் ஏன் ஒருமித்த குரலில் அழுத்தம் கொடுக்க மறுக்கிறார்கள் என அவர் சாடினார். அண்மைய புயல், வெள்ளம் மற்றும் இந்திய மீனவர்களால் சேதப்படுத்தப்பட்ட வலைகளுக்கு இதுவரையில் எந்தவிதமான நட்டஈடோ அல்லது நிவாரணமோ வழங்கப்படவில்லை. உள்ளூரில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைத் தடுக்கும் அரசாங்கம், இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதில் பாராமுகமாக இருப்பது மீனவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதே வடபகுதி மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. Tag Words: #Mannar #FishermenCrisis #IndianTrawlers #NMAalam #SriLankaPolitics #LKA #TamilNaduElections2026 #LivelihoodAtRisk #NorthernProvince #BreakingNews