
ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் 15 ஏக்கர் காணி அன்பளிப்பு செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தின் தலைவர் வேலன் சுவாமி உள்ளிட்ட அங்கத்தவர்களுக்குமிடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், ஊர்காவற்றுறையில் காணியற்று இருப்பவர்களுக்கு காணி வழங்க முன்வந்தமைக்காக நன்றிகள். காணியினை முறையாக பங்கீடு செய்து, பங்கீட்டின் அளவிற்கு ஏற்ப வீடமைப்புத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள். அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் தலா 2 மில்லியன் ரூபாவில் ஒரு குடும்பத்திற்கான வீடமைப்புத் திட்டம் வழங்க முடியும்.மேலும், அக் காணியில் குடிநீர், மின்சார இணைப்பு மற்றும் வீதி நிர்மாணிப்பு போன்ற உட்கட்டுமான அபிவிருத்தியினை மேற்கொண்டு ஒரு அமைதியான கிராமமாக உருவாக்க முடியும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தினர், தங்களால் வழங்கவுள்ள 15 ஏக்கர் காணியில் – 10 ஏக்கர் காணியில் காணியற்ற குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டத்திற்காக வழங்கவும், 05 ஏக்கரில் ஒரு ஏக்கர் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தேவைக்காக வழங்கவும், மிகுதி ஆதீனம் மற்றும் பொதுத் தேவைப் பயன்பாட்டிற்காக பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்து, தொடர்ச்சியான சட்டரீதியான கையளிப்பு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.