வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை காவற்துறையினரை பார்த்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார். வலி. மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர், அவர்கள் எப்படி திடீர் பணக்காரர்கள் ஆனார்கள், காவற்துறையினர் எவ்வாறு அவர்களுடன் நல்லுறவில் இருக்கின்றனர் என மக்கள் காணொளி ஆதாரத்துடன் எமக்கு தந்துள்ளார்கள். திடீரென பணக்காரர்களுக்கு எதிராக நாங்கள் திடீர் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கின்றோம். சங்கானை பிரதேச செயலர் பிரிவிலும் திடீர் பணக்காரர்கள் ஆகியுள்ளார்கள் என எமக்கும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அவ்வாறானவர்கள் குறித்தான தகவல்களை மேலும் எங்களுக்கு வழங்குங்கள். எங்களுக்கு கிடைத்த தகவல்களை நாங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். காவற்துறையினருக்கு முகவர்கள் இருக்கின்றனர். நாங்கள் அது குறித்து அவதானித்துக்கொண்டு தான் இருக்கின்றோம் எனக்குறிப்பிட்டுள்ளார்.